Sunday, July 3, 2016

Episode 26- இந்த பத்து மருந்துகள் இல்லையென்றால் நீங்கள் இன்று இல்லை

இந்த பத்து மருந்துகள் இல்லையென்றால் நீங்கள் இன்று இல்லை 
இதுவரை கண்டுபிடித்த மருந்தகளிலேயே சிறந்த, சமூகத்தை காப்பாற்றிய டாப் மருந்துகள் எவை?
இந்த மாதிரி யார் லிஸ்ட் போட்டாலும் எப்பவும் முதலிடம் பிடிப்பது பெனிசிலின் தான். இன்றைக்கு உலக மக்கள் தொகையில் 75%  பேர் உயிருடன் இருப்பது இந்த மருந்தினால் தான். இந்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனில் நம் தாத்தா பாட்டி சீக்கிரம் இறந்து நாம் பிறக்காமலே போயிருப்போம் என்கிறார்கள். பெனிசிலின் வரும் முன் காலில் ஒரு ஆணி குத்தினாலே அது செப்டிக் ஆகி, இறக்கும் சம்பவங்கள் நடந்திரிக்கின்றன. நம் தாத்தாவை காப்பாற்றிய அலெக்சாண்டர் ஃபிளமிங்குக்கு நன்றிகள். இன்று சக்கைப் போடு போடும் cefixime, ' cef ' என ஆரம்பிக்கும் அனைத்தும் பெனிசிலின் வம்சாவழியே. அதோடு முன்னெல்லாம் டிபி வந்தால் அவ்ளோ தான் என்றிருந்த நிலையை ஸ்ரப்டோமைசின் கண்டுப்பிடித்து மாற்றியவர் வாக்ஸ்மேன் ஆகும். இது கொசுறாக பிளேக், டைபாய்டையும் குணப்படுத்தியது. அவர் வாரிசுகள் எங்கிருந்தாலும் வாழ்வாங்கு வாழ வைத்தியநாத சுவாமியை பிராத்திப்போம். 
25 வயதிலேயே பலரை மண்டையைப் போட வைத்தது டைப் 1 டயாபெடிஸ் ஆகும். மருந்து கொடுத்தால் கேட்காது. இதற்காக இன்சுலினை கண்டுப்பிடித்த பேண்ட்டிங் மற்றும் பெஸ்ட் இரண்டாம் இடம் பிடிக்கிறார்கள். 91 நாய்களுக்கு ஏதேதோ மருந்து கொடுத்து, கடைசியில் 92வது நாய் பிழைத்தது. அதற்கு போட்ட ஊசி தான் இன்சுலின்.
எது மக்களை அதிகம் கொல்கிறது? உலகின் டெட்லியான போரான இரண்டாம் உலக யுத்தத்தில் ஐந்து கோடி பேர் இறந்தனர். அதை விட அதிகமான ஆட்களை ஒரு கண்ணுக்கே தெரியாத உயிரினம் கொன்றது. அதுவே ஸ்மால் பாக்ஸ் எனப்படும் பெரியம்மை வைரஸ். இருபதாம் நூற்றாண்டில் மட்டும் 30-50கோடி பேரைக் கொத்துக் கொத்தாக சாகடித்த பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்த ஜென்னர் மற்றும் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த சால்க் மூன்றாம் இடம். ஜென்னர் மற்றும் சால்க் எனக்கு மிகவும் பிடிக்கும். உயிர்கொல்லியான அம்மை வைரஸை தன்னுள் செலுத்தி ஆராய்ந்தவர். சால்க் போலியோ வேக்சினை பேடன்ட் எடுக்காமல் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கியவர் (இதைப் பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்).
ஆபரேஷனுக்கு ஆஸ்பத்திரி போறான் என்றாலே உயில் எழுதி வாங்கிவிட்டு அனுப்பும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. காரணம் மயக்க மருந்து கண்டுபிடிக்காமல் இருந்த காலம் அது. காலை எடுக்க வேண்டும் என்றால், வாயில் ஒரு குச்சியை கடிக்க சொல்லிவிட்டு, அப்படியே ரம்பம் வைத்து அறுக்க வேண்டியது தான். பேஷன்ட் மயக்கமானால் நல்லது. சில சமயம் அறுக்கும் போதே உயிர் போய் விடும். இதை தடுக்க மண்டையில் கட்டையால் ஒரு போடு போட்டு விட்டு அறுக்க ஆரம்பிப்பார்கள். பல் டாக்டரான மார்ட்டன் ஈதரை வைத்து பேஷண்டை மயக்கமாக்கி வலியில்லாமல் பல் பிடுங்கி, சரித்திரத்தில் இடம் பெற்றார். இன்று அனஸ்தீசியா மிகப் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. நாலாம் இடம் இவருக்கு. இவர் யாரை வைத்து டெஸ்டிங் செய்திருப்பார் எனத் தெரியவில்லை. கர்சீப்பில் ஈத்தரை நனைத்து மனைவியை மயக்கமுறச் செய்து பல்லைப் பிடுங்கி பின் உதையும் வாங்கியிருக்கலாமோ என்னவோ? பின் ஈதர் மிகவும் தீப்பிடிக்கக் கூடிய வஸ்து எனவும், பல டாக்டர்களின் கிளினிக் எரிந்து சாம்பலானதும் குளோரோபார்மை கொண்டு வந்தார்கள்.
அடுத்த இடம் பின்கஸ் எனும் ஆராய்ச்சியாளருக்கு. இவர் தான் கர்ப்பத் தடை மாத்திரையின் தந்தை. பல மருந்துகளை எலிகளுக்கு கொடுத்துப் பார்த்தார். அவை குஷியாக பல்கிப் பெருகின. அப்புறம் இந்த மருந்தை கொடுத்துப் பார்த்தார். எலிகள் எல்லாம் ஜாலியாக இருந்தாலும் குட்டி போடவில்லை. யுரேகா. இன்று மாலா-D, மாலா-N என இந்தியாவின் பாப்புலேஷனை கண்ட்ரோல் செய்த பெருமை இவரையே சாரும். இதன் சைடு எபக்டுகள் வேறு கதை. மக்கள் தொகையை கண்ட்ரோல் செய்த பின்கஸ் ஐந்தாம் இடம் பெற்று சொர்க்கத்தில் வாழ்வாங்கு வாழ்கிறார். பல கிறிஸ்தவர்கள் கருத்தடை முறைகளை தவறு என்கிறார்கள். பைபிள் "Book of genesis" ல் ஒரு கருத்தடை முறை இருக்கிறது.
கீமொதேரபியை கண்டுபிடித்த பேராசிரியர் எர்லிச் ஏழாம் இடம். கேன்சர் வந்தா அவ்ளோ தான் என்ற நிலையை ஓரளவிற்காவது மாற்றியவர். இவருடன் நான் சேர்க்க விரும்புவது நமது ஏழை தெலுங்கு மனிதரான எல்லப் பிரகாடா சுப்பாராவ். இவரின் சாதனைகளை விரிவாக முன்பே சொல்லியிருக்கிறேன். மிகப் பெரும் அறிவாளி மற்றும் அடுத்தவரை ஊக்குவிக்கும் விஞ்ஜானியான இவரின் பட்டறையில் இருந்து தான் கேன்சர் கீமோவில் முக்கியமான 'மெத்தோடிரக்சேட்' கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரின் கல்லறை வாசகம் - 'இவர் ஒரு காலத்தில் உயிருடன் இருந்ததால் தான் இன்று பலர் உயிருடன் இருக்கிறோம்'. ராக்கெட் செய்வதில் உதவியாக இருந்த அப்துல் கலாமை ஆராதிக்கும் நாம், இவரை கண்டுக்கக் கூட இல்லை. அவரின் அமெரிக்க மாணவர்கள் இன்றும் இவரை ஆராத்திக்கிறார்கள். இவர் தான் சல்ஃபா மற்றும் டெட்ராசைக்லினின் தந்தை.
ஏழரையாவது இடம்- ஜெர்மன் அவசரக் குடுக்கைகள் தாலிடோமைட் எனும் மருந்து மசக்கைக்கு செம மருந்து என மார்கெட் செய்தார்கள். பிறக்கும் குழந்தைகள் கை கால்கள் இல்லாமல் பிறந்தன. பல பாவங்களை சம்பாதித்த இந்தக் கம்பெனி இப்போது மன்னிப்பு கேட்டுள்ளது. அப்ப கை கால் இல்லாமல் பிறந்த ஐயாயிரம் குழந்தைகளின் வாழ்வு? அதான் மன்னிப்பு கேட்டாசுல்ல என்கிறார்கள். மன்னிப்பு கேட்பவன் பெரிய மனுஷன் என விருமாண்டி டயலாக் வேறு.
எட்டாவது இடம். zidovudine (AZT) - எய்ட்ஸ் பரவ ஆரம்பித்த நேரத்தில் இந்த மருந்தை பலருக்கு கொடுத்துக் கொன்றது அமேரிக்கா. dallas buyers club படம் பார்க்கவும். பின்னர் ஆராய்ந்து ஆயிரம் மடங்கு குறைந்த டோஸ் கொடுத்து பல எய்ட்ஸ் நோயாளிகளை இருவது வருடம் வரை வாழ வைத்த பெருமை இந்த மருந்தையே சாரும்.
ஆக்சிஜன். இதன் பயன் எல்லோருக்கும் தெரியும். இது ஒன்பதாவது இடம். மற்றும் ஆஸ்துமா இன்ஹேலர்கள்.
கடைசி இடம். அந்தக் காலத்தில் ஹார்ட் அட்டாக் வந்தால், சிவாஜி கணேசன் படத்தில் வருவது போல, அங்கேயே நெஞ்சை பிடித்துக் கொண்டு சாக  வேண்டியது தான். நூறு பேரை மருத்துவமனைக்கு  கொண்டு போனால் பத்து பேர் தான் உயிருடன் வருவர். டில்லட் மற்றும் ஷெர்ரியின் முயற்சியால் ஸ்டரெப்டோகைனேஸ் வந்து பலரை காப்பாற்றியது (ஒரு முறை என் தந்தையையும்). இன்று பல முன்னேற்றங்கள் வந்த பின்னாலும் இது காப்பாற்றிய பலர், டில்லட்டுக்கும் ஷெர்ரிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்களாவார்கள்.  
தன்னலம் பாராமல் சமூகத்திற்காக வாழ்கையை அர்பணித்த இந்த எளிய ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து மருந்துக் கண்டுப்பிடிப்பு ஆராய்ச்சிகளை, மனிதம் மற்றும் மனசாட்சியே இல்லாத, பணம் மட்டுமே நோக்கமாக கருதும் மருந்து கம்பெனிகளிடம் கொடுத்தது தான் மிகவும் சங்கடப் படுத்தும் சோகம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் அரசும், பில் கேட்ஸ் போன்ற நல்லுள்ளங்களும் தரமான ஆராய்ச்சி செய்யும், ஆனால் பணமில்லா ஆராய்ச்சியாளர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். சரக்கு விற்ற காசில் லண்டனில் சொகுசாய் வாழும் பங்களாவாயன்கள் இருக்கும் நாட்டில் இது எப்படி நடக்கும்?  

            

No comments:

Post a Comment