அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...
முப்பது வருடங்களுக்கு முன் தோன்றிய டெஸ்ட் ட்யூப் பேபி தொழில்
நுட்பம், இதுவரை ஐம்பது லட்சம் குழந்தைகளை தந்துள்ளது. பிற்காலத்தில் பெட்ரூமில்
குழந்தை உருவானது போய், லேபில் கரு உருவாவது அதிகம் ஆகி விடலாம். விந்தனுக்களையும்
முட்டைகளையும் வெளியில் எடுத்து இணைத்தப்பின், பல கருக்கள் உருவாகும். அதை
அப்படியே கர்ப்பப்பையில் வைத்து விடுவார்கள். அதனால் தான் இந்த சிகிச்சை செய்து
கொள்பவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன. சில சமயம் மரபணு
குலைந்து போய், அபார்ஷனிலும் முடிகிறது. வருங்காலத்தில் இந்த கருக்களுக்கு மரபணு
சோதனை நடத்தி, எந்த கருவிற்கு ஒரு மரபணு பிரச்சினை இல்லையோ, அதை மட்டும்
கர்ப்பப்பையில் செலுத்துவார்கள். இதனால் ஜெனிடிக் வியாதிகள் வராமல் தடுக்கலாம்.
இது இன்னும் முன்னேறி, நாம் முந்தைய எபிசோடுகளில் சொன்னது போல டிசைனர் பேபி
(எந்தக் குறையும் இல்லாத, பல வியாதிகள் வராத) கருவாக மாற்றிக் கொள்ளலாம்.
பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தின. அதாவது
அங்கு வேலை செய்யும் பெண்கள், தங்கள் முட்டைகளை வெளியில் எடுத்து பாதுகாப்பாக
வைத்துக் கொள்ளலாம். அதற்கான செலவை நிறுவனமே ஏற்கும். அதாவது நீங்கள் ஒரு 25 வயது
பெண், படிப்பில் சுட்டி, வேலையில் கெட்டி. அப்போது கர்ப்பமானால், நிறுவனத்திற்கு
நஷ்டம் தானே. மெடர்னிட்டி லீவு கொடுக்க வேண்டும், குழந்தை இருப்பதால் ஓவர் டைம்
லீவு எடுக்க முடியாது, ஆஸ்பத்திரி, ஸ்கூல் என அலைவதால், அதிக லீவு எடுப்பீர்கள்.
நீங்கள் இளமையாக இருக்கும் போது உழைத்துக் கொட்டுவீர்கள். வயதானால் கொஞ்சம்
சோம்பல் வந்து விடும், அப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாமே? அதாவது பணக்கார
நிறுவனங்கள் நம்மை உறிஞ்சி, அவர்களை மேலும் கொழுத்த பணக்காரர்களாக மாற்றிக்
கொள்வார்கள். நம் திறன், சக்தியெல்லாம் இழந்த பின், "போம்மா, போய் குழந்தை
பெத்துக்க", என கரிசனம் காட்டுவார்கள்.
சரி, இப்படி முட்டைகளை ஸ்டோர் செய்யும் முறைகள் வேறு நல்ல விதத்திலும்
பயன்படுகின்றன. இன்றைய உலகில், பெண்கள் தங்கள் முன்னேற்றம் பற்றி அதிகமாக
சிந்திக்கிறார்கள். சுயசார்பு வருவதற்கு நிறைய தியாகங்கள் தேவைப் படுகின்றன. அதில்
ஒன்று திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளுதலை தள்ளிப் போடுதல். பெண்களுக்கு
வயதாக ஆக, முட்டைகள் சேதமடைந்து கொண்டே வருகின்றன. 27 வயதிற்கு
பின் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஜெனிடிக் குறைபாடான 'டவுன்
சிண்ட்ரோம்' வர வாய்ப்புள்ளது. ஒரு 20 வயதில் சில முட்டைகளை வெளியில் எடுத்து
ஸ்டோர் செய்து விட்டு, படிப்பு, வேலை, கல்யானம்மெல்லாம் ஆன பின், அவைகளை
உயிரூட்டிக் கொள்ளலாம். ஆரோக்கியமான குழந்தை கியாரண்டி. வருங்காலத்தில், நூறு
வயதில் கூட பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் வந்து விடும்.
பாக்யராஜ்-சில்க் நடித்த ஒரு படத்தில், சிறுவன், "எனக்கு ரெண்டு
அப்பா", என்று சொல்வான். அதே போல் சின்ன வீடு வைத்துக் கொள்வது ஒரு காலத்தில்
பேஷனாக இருந்தது. அம்மா, சின்னம்மா என ஒரே வீட்டில் வாழ்பவர்களும் உண்டு.
மைட்டோகாண்டிரியா (ஆண்ட்ரியா அல்ல) எனும் செல்லுக்குள் இருக்கும் ஒரு ஐட்டத்தில்
குறைபாடு இருந்தால், அது பெண்களின் மரபணு வழியாக குழந்தைகளுக்கு வருகிறது. அப்படி
இருக்கும் பெண்ணிடம் இருந்து முட்டையை எடுத்து, மைட்டோகாண்டிரியாவை தூக்கிப்போட்டு
விட்டு, இன்னொரு பெண்ணிடம் இருந்து நல்ல மைட்டோவை எடுத்து முட்டைக்குள் வைக்கலாம்.
அப்புறம் ஹூரோவான விந்தணுவை வைத்து கருவாக்கிக் கொள்ளலாம். இந்தக் குழந்தைகளுக்கு
ரெண்டு அம்மா. சாதா அம்மா, மைட்டோ அம்மா.
இப்போதுள்ள டெஸ்ட் ட்யூப் முறைகளில், முட்டையை வளர வைக்க பெண்ணுக்கு,
நிறைய ஊசி போடுவார்கள். அது பெண்களுக்கு மிக அதிக ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு
வழிவகுக்கிறது. வருங்காலத்தில், வளராத முட்டையை எடுத்து, லேபில் வைத்து
வளர்க்கலாம். இதனால் அதிக ஊசிகள் தேவையில்லை.
அதே போல் சிறுவனாக இருக்கும் போது கேன்சர் வந்திருந்து, ரேடியோதெரபி
தந்திருந்தால், பல சமயங்களில், விந்தணு புரொடக்ஷன் இல்லாமல் போய் விடும். அதுவே
ரேடியோதெரபி கொடுக்கும் முன், அவனின் விரை செல்களை கொஞ்சம் எடுத்து ஸ்டோர்
செய்திருந்தால் போதும். பின்னாட்களில், அதை வைத்து கரு உண்டாக்கிக் கொள்ளலாம்.
நம்மூரில் இருக்கும் பொல்யூஷன், விஷமான உணவுகள், மற்றும் வாழ்வுமுறையினால்
பலருக்கு ஸ்பெர்ம் கவுண்ட் பின்னாட்களில் கம்மியாகி விடுகிறது. இருக்கும்
ஸ்பெர்மின் மரபணுவும் அவ்வளவு சரியில்லை. தொப்புள் கொடியை ஸ்டோர் செய்வது போல்,
சின்ன வயதில் கொஞ்சம் விரை செல்களை எடுத்து ஒரு 20
வருடங்களுக்கு ஸ்டோர் செய்யும் பிசினசும் புதிதாக வந்து விடுமோ?
பிறக்கும் போதே சில பெண்கள் கர்ப்பப்பை இல்லாமலேயே பிறந்து
விடுகிறார்கள். சில பெண்கள் சின்ன வயதிலேயே கர்ப்பப்பை கேன்சரோ அல்லது வேறு
காரணங்களுக்காக அதை இழக்கிறார்கள். போன வருடம் அப்படிப்பட்ட ஒன்பது பெண்களுக்கு,
இறந்தவர்களின் கர்ப்பப்பையை வைத்திருக்கிறார்கள். பின் முட்டையை எடுத்து டெஸ்ட்
ட்யூப் பேபி முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். என்னதான் வாடகைத் தாய்
மூலம் தன் குழந்தையை பெற்றாலும், அல்லது தத்தெடுத்த குழந்தைகள் என்றாலும், பெற்ற
பிள்ளை கொடுக்கும் இன்பம் போல் ஆகுமா என நினைக்கும் சிலர், இந்த முறைக்கு
செல்கிறார்கள்.
ஆஞ்சலீனா ஜூலி புகழ் BRCA 1, BRCA 2 ஜீன்களை
இந்த கருக்களில் இருக்கிறதா என ஆய்வு செய்து, மார்பக புற்று நோய் வராமல்
தடுக்கலாம். சரி, இதெல்லாம் முட்டைகள் உருவாகும் பெண்களுக்கு. சில பெண்களுக்கு
முட்டையே உருவாதில்லை. அவர்களுக்கு ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட் முறை வந்து விடும்.
உடலில் உள்ள ஏதாவது ஒரு செல்லை எடுத்து அதை முட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்த ஸ்டெம் செல்லை, முட்டையாக மாற்றுவதில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர்
இருக்கிறது. லெஸ்பியன்கள், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், இன்னொரு ஆணின்
விந்தணுவை தானம் பெற்றுத் தான் டெஸ்ட் ட்யூப் பேபி பெற்றுக் கொள்ள வேண்டும். பிற்காலத்தில்,
ஒரு பெண்ணிடம் இருந்து ரத்தம் எடுத்து அதில் உள்ள செல்லை விந்தணுவாக மாற்றி,
இன்னொரு பெண்ணின் முட்டைக்குள் வைத்து பெண் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அந்தக்
குழந்தை இப்படி சொல்லலாம், "எனக்கு ரெண்டு அம்மான்னு நினைச்சேன். ஆனா அதுல ஒரு
அம்மா, அப்பாவாம். எப்படி???" என்று.
ஹோமொசெக்சுவல்ஸில், ஒரு ஆணின் செல்லை முட்டையாக மாற்றி, இன்னொரு ஆணின்
விந்தணுவை வைத்து கரு உண்டாக்கி, வாடகைத்தாய் வழியாக பெற்றுக் கொள்ளலாம். அந்தக்
குழந்தை சொல்லும், "அப்பா நம்பர் 1 தான் நிஜ அப்பா, அப்பா நம்பர் 2 என்னோட
அம்மா". யார் கண்டது, வருங்காலத்தில் ஆண்கள் கூட கர்ப்பப்பையை, உள்ளே வைத்து,
இன்னொரு பெண்ணிடம் முட்டை வாங்கி, உள்ளே வைத்து, ஹார்மோன் கொடுத்து கருவை
வளர்த்து, சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமோ என்னவோ? பிறக்கும் குழந்தை பாட்டு
பாடும், "அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே"
No comments:
Post a Comment