Sunday, May 17, 2020

எங்கள் வீட்டில் ஐந்து நாய் இருந்தது.

எங்கள் வீட்டில் ஐந்து நாய் இருந்தது.

சின்ன வயதில் என் அக்கா, "ராணி" என்ற ஒரு நாய் வளர்த்தாராம். நான் அப்போது பிறக்கவில்லை. பாசத்தை கொட்டி சில வருடம் வளர்த்தார். அது ஒரு நாள் இறக்கவே, என் அக்காவை யாராலும் சமாதானப் படுத்த முடியவில்லை. அப்பாவிற்கு கோவம் வந்து, இனிமேல் வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கக் கூடாது என்ற தடையை விதித்தார். அப்போது வீட்டில் ஆறு மாடுகள் இருந்தன. நாயின் மேல் கொட்டிய பாசம், மாடுகளுக்கு பெயர் வைப்பதோடு நின்று விட்டது. அட்டாச்மெண்ட் இல்லை.

இன்றும் ராணியைப் பற்றி என்றைக்காவது பேசுவோம். அப்பாவிற்கும் அல்பாயுசு, ராணிக்கும் தான்.

2009-என் திருமணம். மாயூரத்தில் ஜாகை. செம மழை பெய்த ஒரு செப்டெம்பர் நாளில், "கியாங் கியாங்" என ஒரு முனகல். குடை எடுத்துக்கொண்டு போய்ப் பார்த்ததில், எங்கள் வீட்டு வாசல் அருகே, சாக்கில் மூடப்பட்ட முந்தைய நாள் பிறந்த  மூன்று நாய்க்குட்டிகள் சுற்றப்பட்டு இருந்தன. மனைவியிடம் சொல்லவே, மூன்றையும் வீட்டிற்கு தூக்கி வந்தோம். அதன் அம்மா பிரசவத்தில் செத்து விட்டதாம்.

பீடிங் பாட்டில் என்ன, கொஞ்சுதல், குளிப்பாட்டுதல் என்ன என ராஜபோக வாழ்க்கை அதுகளுக்கு. அதில் ஒரு செம்மண் கலர் குட்டி தான் டாமிநேட் செய்தது. வயிறு கொள்ளா பாலை குடிக்க முடியாமல், ஆனால் தம்பிகளை விட அதிகமாக குடிக்க வேண்டும் என எக்கச்சக்கமாய் குடித்து  வைத்து, நிற்க முடியாமல் தடுமாறும். சுவரில் சாய்ந்து கொண்டு போதையில் தள்ளாடும். சில சமயம் கக்கும்.

காசே இல்லாத சமயத்திலும், எங்களுக்கு மூன்று குழந்தைகள் என சந்தோஷப் பட்டோம். சில மாதங்களில், எங்கள் சூழ்நிலையில் அவற்றை வளர்க்க முடியாமல் போகவே, தத்து கொடுத்து விட்டோம். எல்லா நாய்க்குட்டிகளும் சில மாதங்களில் இறந்து விட்டன.

மனைவியை சமாதானப்படுத்த ஒரு பாமரேனியன் நாய்க்குட்டியை வாங்கினேன். அதன் முன்னாள் ஓனர், அதற்கு "ஷாடடோ" எனப் பெயரிடவே, அந்தப் பெயரிலேயே சாகும் வரை அழைக்கப் பட்டது. பதினொரு வருடங்கள் எங்களுடன் இருந்தது. இதற்கு நடுவில், நடிகை த்ரிஷா போல ரோட்டில் கிடந்த இன்னொரு நாய்க்குட்டியை எடுத்து வந்து, "புல்லட்" என பெயர் சூட்டினேன். மனைவிக்கும், அம்மாவிற்கும், மற்ற அனைவருக்கும் செம கோபம். ஷாடோ அதைப் புரிந்து கொண்டு, புல்லட்டை ஒரே நாளில் ஓட ஓட விரட்டி காணாமல் ஆக்கியது.

ஆரம்பத்தில் ஷாடோ எங்கள் படுக்கையில் தான் தூங்கும், பின்னர் என் மச்சினி அதற்கு வாங்கித்தந்த காஸ்ட்லி படுக்கையில் தூங்கியது. பின்னர் படுக்கையில் சூடு தாங்காமல், தரையில் படுக்க ஆரம்பித்து. கோவை வந்த பின்பும், தரையிலேயே படுத்தது. ஆரம்பத்தில் பாலைக் குடித்தது. சாதம், பிஸ்கட், முட்டை எல்லாம் போட்டு, அதற்கு எல்லாமே போராடித்து விட்டது. பின்னர் இறக்கும் வரை பெடிக்ரீ தான்.

எவனைப் பார்த்தாலும் குரைக்கும். இரண்டு வருட மாயூரம் ஜாகை, பின்னர் சிதம்பரம் ஒரு வருடம். எப்போதுமே ஷாடோவைக் கட்டி வைக்க மாட்டோம். சுதந்திரமாக இருக்கும். சிதம்பரத்தில் இரண்டாம் ஆண்டு, ஒருவன் மிரட்டி விட்டுப் போய்விட்டான். அதன் மேல் கல்லெடுத்து  சாவடித்து விடுவேன் என. நான் அப்போது MD டிகிரி முடித்து கேரளாவிற்கு வந்திருந்தேன். காரில் சென்று கூட்டிக் கொண்டு வந்து விட்டேன். மனைவி இன்னும் ME முடிக்க வில்லை.

கேரளாவிலும் ஒருவனை கருவம் வைத்து ஷாடோ குரைக்கவே, அவனும், கொலை மிரட்டல் கொடுத்து விட்டான். சமயம் பார்த்து எனக்கு கோவையில் வேலை கிடைக்கவே, அங்கே கூட்டி வந்து விட்டேன். எந்த ஊரில் இருந்தாலும், எங்கள் ஏசி ரூமில், கட்டிலுக்கு அடியில் படுத்தே பழக்கப்பட்ட அவனுக்கு  கோவை கிளைமேட் மிகவும் பிடித்து விட்டது. ஒரு வருடம் நானும் அவனும் மட்டும்.  சில நாட்கள் லீவு கிடைக்கும் போது ஐந்து நாட்கள் வரைக் கூட வீட்டில் அவனைப் பூட்டி வைத்து விட்டு போவேன் (ஒவ்வொரு முறையும் அவனை காரில் கூட்டிச்செல்ல என் சம்பளம் இடம் தரவில்லை). என் கலீக் சிக்கன் சாப்பாடு தருவான், சாப்பிடும். வாக்கிங் கூட்டிச்செல்ல முயன்றால் குரைத்து தள்ளி விடும். ஆனால் இதுவரை யாரையும் கடித்தது இல்லை.

மனைவி வந்த பின், அவனுக்கு வாழ்க்கை பழையபடி ஆகி விட்டது. தினமும் இரு வேளை வாக்கிங், சங்கிலி, கயிறு கிடையாது, முழு அப்பார்ட்மென்ட்டும் அவன் பாதுக்காப்பில். தானே ராஜா, தானே மந்திரி என இருந்தான். அவ்வப்போது சில தெரு நாய்களிடம் கடி வாங்குவதைத் தவிர வாழ்க்கை அவன் போக்கில் போய்க்கொண்டு இருந்தது. எனக்கு இரண்டு மகன்கள். இரண்டு பேரும் ஷாடோவை அண்ணனாகப் பார்த்தார்கள். பல ஊர்களுக்கு அவனை அழைத்து செல்வோம். எங்கே போனாலும் கோவை வந்தால் தான் அவனுக்கு நிம்மதியே.

இரண்டு வருடம் முன்பு, என் பில்டிங்கில் அவனை வைத்திருக்கக் கூடாது என ஏற்பட்ட ஒரு சண்டையில், வேறு வழியில்லாமல் கிராமத்திற்கு கொண்டு வந்து விட்டு விட்டேன். அங்கேயும் நல்ல கவனிப்பு. தினமும் குளியல், வாக்கிங். தோட்டத்தில் ஒரு நாள் பாம்பு கண்ணருகே சீண்டி விட்டது. யாரிடம் காட்டியும் பலனில்லை. இன்பெக்ஷன் ஆகி, பார்வை குறைந்து, அவலட்சனமாகி ஒன்றரை வருடம் அவதிப்பட்டு இரண்டு மாதம் முன்பு இறந்தது.     

மேலே உள்ள கதை கேட்க நன்றாக இருக்கலாம். நாய் வளர்ப்பது என்பது குழந்தை வளர்ப்பது போல ஒன்று. அதற்கென நேரம், பாசம் ஒதுக்க வேண்டும். உங்களுக்கு நேரமில்லை என்பது, அவனை தண்டிப்பது போலாகும். நீங்கள் கூட்டிச்செல்லும் வரை யூரின்/மோஷனை அடக்கிக் கொண்டிருக்கும். அடிமைத்தனத்தை விட மோசமானது. நம் பாசத்திற்காக ஏங்கும். நமக்கு மூடு இல்லாவிட்டால் (பல நாட்கள் இப்படி ஆகும்), அது சோகமாக இருக்கும். அந்தப் பாவம் நம்மை உறுத்தும்.

ஒரு முறை அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா வீட்டிற்கு சென்றிருந்தேன். மனிதன் சைஸில் ஒரு நாய், ஜாலியாக நடு அரண்மனையில் நடுநாயகமாக தூங்கிக் கொண்டிருந்தது. அதை கவனிக்க இரண்டு மூன்று பேர். அப்படி வசதி உள்ளவர் மட்டுமே நாய் வளர்க்க வேண்டும். மற்றவர் வளர்க்கக் கூடாது என்பது என் ஆணித்தரமான கருத்து. சங்கிலியால் கட்டி, பாசம் காட்டாமல்/சரியான நேரத்தில் வாக்கிங் கூட்டிச் செல்ல முடியாத நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்திற்கு நாயை வளர்ப்பது ஒரு பாவச்செயல். நமக்கே உரிய குற்றவுணர்வுடன் நாம் நாட்களைக் கழிப்போம்.

ஆரம்பத்தில் சந்தோஷம், எக்சைட்மெண்ட் தரும் நாய் வளர்ப்பு, போகப் போக சுமையாகவும், அது பிறக்காமல் இருந்திருந்தால்/வேறு யாரிடமாவது வளந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்குமோ என அது வாழும் வரைக்கும்/ இறந்த பிறகும் நமக்கு குற்றவுணர்வைத் தரும். இது நமக்கு தேவையா? நம் குடும்பமே நமக்கு போதும். இத்தனைக்கும் எங்களைப் போன்று ஆசையைக் கொட்டி நாய் வளர்த்தவர் எனக்குத் தெரிந்து யாருமில்லை.

எங்கள் வீட்டில் வளர்த்த ஐந்து பூனை கதையை இன்னொரு நாள் எழுதுகிறேன்.         

Sunday, July 3, 2016

Episode 28- மாவுக்கட்டிலிருந்து நுண்துளை சிகிச்சை வரை-வருங்கால எலும்பியல் மருத்துவம்.

மாவுக்கட்டிலிருந்து நுண்துளை சிகிச்சை வரை-வருங்கால எலும்பியல் மருத்துவம்.
பல வியாதிகளை உணவு மற்றும் வாழ்வியல் மாற்றத்தை வைத்து இல்லாமல் ஆக்கி விடலாம். ஆனால் ஒரு சில வியாதிகளுக்கு டாக்டர்கள் இல்லாமல் எதுவும் செய்யமுடியாது. எடுத்துக்காட்டு-விபத்தினால் வரும் காயங்கள் மற்றும் எலும்பு முறிவு. ஆயிரக்கணக்கான வருடங்களாக எலும்பு முறிவு மருத்துவம் இருக்கிறது. எலும்பு முறிவை சரி செய்தல், விலகிய மூட்டை நேராக்குதல் எனப் பல்வேறு வைத்தியங்கள் அந்தக்காலத்திலேயே இருந்தன. இதுவரை மாவுக்கட்டு, எண்ணெய்க் கட்டு என இருந்தவர்கள், இரண்டாம் உலகப் போர் காலத்தில் தான் ஆணியடிப்பது, ராடு வைப்பது எனக் கண்டுப்பிடித்தார்கள். இப்படி செய்வதால் சீக்கிரம் குணமடைதல் சாத்தியமானது. ரஷ்யாவில் காயமடைந்த ராணுவ வீரர்களுக்கு ஒரு மருத்துவரை அனுப்பினர். எலும்பு முறிவு சிகிச்சையில் அடிப்படை ஞானம் கூட இல்லாத அந்த மருத்துவர், அருகில் உள்ள சைக்கிள் ரிப்பேர் செய்யும் உபகரணங்களான ஸ்போக்ஸ், வீல் போன்றவற்றை  வைத்தே பல சிகிச்சைகள் செய்தார். இவரின் இலிசராவ் டெக்னிக் சில ஆண்டுகள் முன்பு வரைக் கூட மிகப் பிரபலம்.
அறுபதுகளில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ஆரம்பமானது. இன்று முக்கால்வாசி மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை கொடிக் கட்டி பறக்கிறது. முன்பெல்லாம் செயற்கை மூட்டுகளுக்கு வெறும் ஐந்து வருட வாரண்டி கொடுத்தார்கள். அதன் பின் மாற்ற வேண்டும். இன்று உலகின் எந்த உபகரனத்துக்கும் இல்லாத அளவிற்கு 25 ஆண்டுகள் கியாரண்டி தருகிறார்கள். பிற்காலத்தில், ஆள் மண்டையைப் போட்ட பிறகும் இந்த மூட்டு மட்டும் நன்றாக வேலை செய்யும் அளவிற்கு இருக்குமோ என்னவோ? உயில் எழுதும் போது இப்படி எழுதலாம், "பெரியவனுக்கு என் இடுப்பு மூட்டு, சின்னவனுக்கு கால் மூட்டு, செல்ல மகளுக்கு என் செயற்கை வலது கையை தருகிறேன். இது சுயமாக எடுத்த முடிவாகும்".
உங்களுக்கு ஒரு  ஆக்சிடன்ட் ஆகி விட்டது. காலில் உள்ள எலும்பு உடைந்து, ராடு மற்றும் ஆணி அடித்து ஒட்ட வைத்திருக்கிறார்கள். பல சமயம்  குணமானவுடன், அவற்றை எடுத்து விடுவர். சில சமயம் அவை உள்ளேயே இருக்கட்டும் என விட்டு விடுவர். ஏர்போர்ட் செக்யூரிட்டி மற்றும் ஷாப்பிங்  மால்களில் உள்ள மெட்டல் டிடெக்டர்கள் நீங்கள் அருகில் போனாலே "கொய்யாங் கொய்யாங்" என பயங்கரமாக அலறும். அது மட்டுமின்றி, நம் உடம்பில் மெட்டல்கள் இருப்பது நமக்கே கொஞ்சம் அந்நியமாக படலாம். இதற்காகவே மெக்னிசியத்தால் செய்த ஆணிகள், இம்ப்ளாண்டுகள் கண்டுப்பிடித்திருக்கிறார்கள். இவை ஆரம்பத்தில் இரும்பு போல் வலுவாகவும், பின்னர், தானாகவே ரத்தத்தில் கரையும் தன்மை உள்ளதாக இருக்கும். கொஞ்ச வருடங்களில் இவை சுத்தமாக கரைந்து காணாமலே போய் விடும். அதற்குள் அந்த எலும்புகளும் ஜாயிண்டுகளும் வலுப்பெற்று விடும்.
இப்போது முதுகு தண்டுவட டிஸ்க் பிரச்சினை என்றால், ஆபரேஷன் ஒன்றே தீர்வாக வைக்கப்படுகிறது. பின்னாட்களில் இந்த ஆபரேஷன் மறைந்து போய், தண்டுவடத்தில் ஸ்டெம் செல்களை ஊசி  மூலம் செலுத்தி குணப்படுத்துவது சாத்தியமாகலாம். நான் பழைய எபிசோடுகளில் சொன்னது போல் எலும்பு மற்றும் மூட்டுகளை ஆராய்ச்சிக் கூடத்தில் வைத்து உருவாக்கி உடலில் பொருத்தும் நிலை சீக்கிரம் வந்து விடும். சிறிய ஜாயின்ட் ஆபரேஷன்கள் அட்மிட் செய்ய அவசியப்படாமல், ஒபியிலேயே வைத்து செய்யப்படும். ஆர்த்ரோபிளாஸ்டி எனப்படும், ஜாயிண்டுக்குள் கேமராவை விட்டு செய்யப்படும் ஆபரேஷன்களுக்கு, தியேட்டரே தேவைப்படாமல் டாக்டர் ரூமிலேயே செய்து கொள்ளும் நிலை வந்துவிடும்.
ஆக்சிடன்ட் மற்றும் எமெர்ஜென்சி பிரிவுகளில், ரோபாடிக்ஸ் மற்றும் துளை வழி சிகிச்சைகள் பிற்காலத்தில் முதன்மையாகும். இவை எலும்பு பிரிவில் ஒரு பத்து சதவிகித பிரச்சினை மட்டுமே. அதிகளவில் எலும்பு டாக்டரை பார்க்க வருபவர்கள், சுளுக்கு, தசை வலி மற்றும் எலும்புருக்கி நோயான ஆஸ்டியோபோரோசிஸ் போன்றவற்றிற்கே. சுளுக்கு, தசை வலிகளுக்கு மருந்தில்லாமல் முழுக்க உடற்பயிற்சி மற்றும் பிசியோதேரபிகளில் இப்போது விளையாட்டு வீரர்களுக்கு தரப்படும் அளவிற்கு இணையான மருந்தில்லா சிகிச்சைகள் வந்து விடும். அது இன்றே சாத்தியம். உடலில் எந்த இடத்தில் தசை வலி வந்தாலும் அதை சரி செய்வதற்கான பயிற்சி முறைகள் யூடியூபில் கொட்டிக் கிடக்கின்றன. உதாரணமாக கழுத்து எலும்பு தேய்மானம் மற்றும் முது தண்டுவட டிஸ்க் பிரச்சினைகள் ஆரம்ப நிலையில் இருந்தால், இந்த வீடியோக்களைப் பார்த்தே வீட்டில் பயிற்சி செய்து சரி செய்து கொள்ளலாம். இவை வராமல் இருக்க இதே எக்சர்சைசுகள் மற்றும் உடல் எடையை சரியான அளவில் பராமரித்தல், சத்துள்ள உணவுகளை உண்ணுதல் ஆகியவையே போதும்.
உலகம் மாறிக் கொண்டு இருக்கிறது. முன்னெல்லாம், இணையத்தைப் பார்த்து விட்டு, "டாக்டர், நீங்க இப்படி சொன்னீங்க, இதுல வேற மாரி போட்ருக்கு" என சொல்லும் இளைஞர்களைப் பார்த்தாலே கோபம் வரும், "அப்ப எதுக்கு என்கிட்ட வரீங்க, போய் நெட்லையே அதுக்கான வைத்தியத்தை செஞ்சுக்க வேண்டியது தான" என எரிந்து விழுவோம். அவர்கள் ஆன்லைனில் கன்சல்டேஷன் தரும் மருத்துவரிடம் போய் விடுகிறார்கள், அந்த பேஷண்ட்டை நாங்கள் இழந்து விடுகிறோம்.. இன்றைய மற்றும் நாளைய டாக்டர்கள், இக்கால மக்களின் டிரெண்டை அறிந்து ஆலோசனை வழங்க வேண்டும். இப்போதும் பல டாக்டர்கள், "தம்பி, உன் வாட்சப்பில் லிங்க் அனுப்பிருக்கேன். அந்த வீடியோவை பாரு. அதே போல் மூணு வேளையும் எக்சர்சைஸ் செய், ஒரு வாரத்துல சரியாவலைனா, இங்க வா, எக்ஸ்ரே எடுப்போம்" என காலத்திற்கேற்ப மாறி வருகிறார்கள்.  
அதிகம் பேரை பாதிக்கும் எலும்புருக்கி நோய்க்கு பல காரணங்கள் உள்ளன. சூரியனிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி, நாம் உடலை முழுக்க மறைத்து துணி அணிவதால் கிடைக்காமல் போகிறது. மற்றும் இன்றைய உணவுமுறைகள் காரணமாக ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அத்துடன் கால்சியம் குறைவான உணவுகளை உண்ணுதல். இவற்றை அலோபதியில் குணப்படுத்துவது சிரமம். இவற்றை வராமல் தடுக்கும் முறைகளும் இதற்கான வைத்தியங்களும் சீக்கிரம் வந்து விடும்.
ஒரு எலும்பு ஆபரேஷன் செய்த பின் பேஷண்ட்டை வீட்டிற்கு அனுப்பி விடுகிறோம். புண் ஆறிய பின் அவர் சரியான முறையில் நடக்க வேண்டும். வலி இருக்கிறது என்று ஒரு சைடாக நடந்தால், அப்புறம் வாழ்நாள் பூராவும் அதே போல் நடக்க பழிவிடுவார். பின்னாட்களில் இதை கண்காணிக்க உடலில் அணியும் தொழில்நுட்பங்கள் (இப்போது கிடைக்கும் ஸ்மார்ட் வாட்ச் போல) வந்து விடும். ஒருவர் வலது முட்டியில் ஆபரேஷன் செய்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம், அவருக்கு இந்த அணியும் தொழில்நுட்பத்தை பொருத்தி வீட்டுக்கு அனுப்பி விடுவர். அடுத்த நாள் அவர் இடது காலுக்கு அழுத்தம் கொடுத்து நடந்தால், அந்த மிஷின் அலறும்.
"கிர்ர், தலைவரே, என்ன பாஸ் இப்படி நடக்கிறீங்க? வலது கால்லயும் வெயிட் குடுத்து நடங்க" என கத்தும்.
ஜாலியாக டிவி பார்க்கும் டயத்தில், "பாஸ், எக்சர்சைஸ் பண்ண வேண்டிய டைம் இது, வாங்க போலாம்" என டார்ச்சர் தரும்.
போடாங், நான் இப்படித்தான் நடப்பேன் என கோணலாக நடந்தால், "ஒழுங்கா நடக்கலை, டாக்டர்கிட்ட போட்டுக் கொடுத்துடுவேன், அப்புறம் பத்து நாளைக்கு அட்மிட் பண்ணி டிரில் எடுப்பாரு ஆமா" என மிரட்டி அவரை ஒழுங்காக நடக்க வைக்கும்.
ஒரு வாரமாக அவர் எப்படி நடந்தார் என கெயிட் அனாலிசிஸ் செய்து, நாம் நடக்கும் அழகை கிராபிக்ஸ் செய்து அவருக்கு அனுப்பி வைத்து "டாக்டர், இந்தாளு சொன்ன பேச்சை கேக்க மாட்டேங்குறாரு, கொஞ்சம் மிரட்டுங்க" என போட்டுக் கொடுக்கும்.
மருத்துவம் மிகப் பெரிய அளவில் வளர்ந்து விட்டது. 99%வியாதிகளுக்கு இங்கு சிகிச்சை உண்டு. இந்த வியாதியில் இருந்து ஒருவர் சீக்கிரம் வர மருத்துவர் மட்டும் போதாது, இந்த மாதிரி புத்திசாலித்தனமான அப்ளிகேஷன்களும் வேண்டும்.

    

Episode-27 அல்ட்ராசவுண்ட் அற்புதங்கள்

அல்ட்ராசவுண்ட் அற்புதங்கள்
மருத்துவமனையே போகாமல் பிறப்பிலிருந்து இறப்பு வரை சிலரால் நல்ல வாழ்க்கை மற்றும் உணவுமுறையை பின்பற்றி ஆரோக்கியமாய் இருந்து விட முடியும். ஆனால் நார்மல் ஆட்கள் எப்போது மருத்துவமனை போவார்கள்? கர்ப்பமாய் இருக்கும் போது. பெறப் போவது ஒன்றோ இரண்டோ, அது நன்றாக குறையில்லாமல் வளர்கிறதா என்ற அக்கறை எல்லா பெண்களுக்கும் இருக்கும். அதைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
இருநூறு வருடங்களுக்கு முன் (இந்த டாக்டர் ஏன் எதுக்கெடுத்தாலும் "அந்தக் காலத்துல" என ஆரம்பிக்கிறாரு? சொல்ல வேண்டியதை சட்டு புட்டுன்னு சொல்லிட்டு போக வேண்டியது தான என யோசிக்கக் கூடாது. வரலாறு மிக முக்கியம்) தாமஸ் யங் என்பவர் ஒலி-ஒளியோடு கூத்தடித்ததில் அல்ட்ராசவுண்டை கண்டார். டாப்ளர் எனும் விஞ்சானியும் மேடம் கியுரியும்  (கதிரியக்க புகழ்) இந்த கான்செப்டை இன்னும் ஆராய்ந்தார்கள். கியூரியின் மாணவர் லாங்கிவன் அல்ட்ரா சவுண்டை வைத்து கடல் ஆழத்தை அல்லது கடலில் இருக்கு நீர்மூழ்கி கப்பலை கண்டுப்பிடிக்கலாம் என சொன்னார். அதாவது நம்மால் கேட்க முடியாத சவுண்டு அலைகளை அனுப்பினால் அது எத்தன மீதாவது மோதி விட்டு திரும்பும். அது திரும்புவதை வைத்து கணிப்பது தான் அல்ட்ராசவுண்ட் மேட்டரின் விதி. பல சப்மரைன்களை எதிரி நாடுகள் கண்டுப்பிடித்து அதை குண்டு போட்டு வெடிக்க வைத்த பாவம் (!) இவரை மட்டுமே சேரும்.   
லுட்விக் என்பவர் இதை வைத்து பித்தப்பை கல்லை கண்டுபிடித்தார். இயன் டொனால்டு என்ற கோபக்கார மகளிர் மருத்துவர், அவர் நண்பரோடு சேர்ந்து முதல் மெடிக்கல் அல்ட்ரா சவுண்டு மிஷினை கண்டுப்பிடித்தனர். ஈசிஜி போல வெறும் கோடு கோடாக வந்த இமேஜ்களை ஒப்பிட்டு, நிறைய கர்ப்பக் கால பிரச்சினைகளை கண்டுப்பிடித்தார். மருத்துவத்தின் ஒரு மிகப்பெரிய டயக்னாஸ்டிக் கருவியை இவரால் நாம் பெற்றோம். பின்னர் ஒவ்வொரு வியாதியாக மற்றவர்கள் கண்டுப்பிடிக்க, இன்றைய அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மிக முக்கியமான ஒன்றாக பேறுகாலத்தில் விளங்குகிறது. சரி கதைக்கு வருவோம்.
கரு உருவான முதல் பத்து வாரங்களில் ஸ்கேன் செய்தால், கை அல்லது கால் இல்லாதது, முகத்தில் பெரிய குறைபாடு என்பது போன்ற இன்னும் சில gross குறைபாடுகளை கண்டுப்பிடிக்கலாம். AV-commune எனும் ஒரு வகையான இதய கோளாறை அறியலாம். மற்றபடி இந்த ஸ்கேன் குழந்தை வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, இதயம் நன்றாக துடிக்கிறதா என்பதைப் பற்றி அறியவே செய்யப் படுகிறது. 
கர்ப்பத்தை மூன்றாக பிரித்தால், இரண்டாம் பருவத்தில், கருவின் வயது கரெக்டாக அம்மா சொன்ன தேதிக்கு இருக்கிறதா, ஒன்றுக்கு மேற்பட்ட சிசுக்கள் உருவாகியிருக்கிறதா, இதய பிரச்சினை, நஞ்சு (பிளசென்டா என்பதை நஞ்சாக்கி விட்டார்கள். உண்மையில் தாயிடம் இருந்து சத்துகளை எடுத்து குழந்தைக்கு கொடுத்து வளர வைப்பதே இதன் வேலை. குழந்தை பிறந்த பின் இது உடையாமல் வெளி வர வேண்டும். முழுதாக வராவிட்டால், அம்மாவுக்கு அது நஞ்சாகி விடும். அதனால் நஞ்சு என அழைக்கிறார்களோ? டவுட்டு?) எங்கு இருக்கிறது, வளர்ச்சி குறைபாடுகள் இருக்கிறதா எனக் கண்டறிய ஸ்கேன் செய்வார்கள்.
இப்போது முக்கால்வாசி ரேடியாலஜிஸ்டுகள் கலர் டாப்ளர் எனும் ஸ்கேன் மிஷின் வைத்து தான் செய்கிறார்கள். கரு வளர்ச்சி மற்றும் கருவின் பிரச்சினைகள் என்பதையும் தாண்டி யூடிரைன் ஆர்டரி எனும் குழாயை கொஞ்சம் உற்று நோக்கினாலே, ப்ரி எக்லாம்ப்சியா எனும் கர்ப்பக்கால உயர் ரத்த அழுத்தம், குழந்தை வளர்ச்சி, வளர்ச்சி குறைபாடு, நஞ்சு பின்னால் ரத்தம் கசிதல், மற்றும் சில நஞ்சு குறைபாடுகளை காணலாம்.
இப்போது சில இடங்களில் கிடைக்கும் 3D/4D ஸ்கேன்கள் மூலம், கலரில் குழந்தையை 3Dயில் பார்க்கலாம். அந்த இமேஜை இப்படி சுற்றி, அப்படி சுற்றி முப்பரிணாமத்தில் பார்க்கலாம். இன்னும் சில இடங்களில் 4D வீடியோ கூட கிடைக்கிறது. "பையன் ஒதைக்கிறான், ஓடியாங்க, கை வச்சு பாருங்க" என்று மட்டுமே குழந்தையை உணர்ந்த நாம், இந்த டெக்னாலஜியில், பயல் உள்ளே என்ன செய்கிறான் என்பதை வீடியோவாக பார்க்க முடியும். விரல் சூப்புவான், கை காலை அசைப்பான், கண் திறந்து பார்ப்பான், நமக்கு லக் இருந்தால் அவன் பல்டி அடிப்பதைக் கூட காண முடியும்.
வருங்காலத்தில் ஸ்கேன் ரூம் என்பது, இருட்டாக, கம்ப்யூட்டர் ஸ்கிரின் வெளிச்சத்தில், டாக்டர் முகம் மட்டுமே மங்கலாய் தெரியும் நிலை இருக்காது. அதோடு, "இங்க பாருங்க, இதான் தலை, இது முதுகு" என டாக்டர் காட்டும் படம், "என்னடா குழந்தை, ஒரு பெரிய பல்லிக்கு எக்ஸ்ரே எடுத்த மாதிரி இருக்கான்" என குழப்பம் வரும் அளவிற்கு இமேஜ் இருக்கும். அதே மாதிரி டாக்டர் ஒரு குச்சியில்  (ப்ரோப்) கொழ கொழா ஜெல்லை வைத்து அங்கு தடவி, இங்கு அமுக்குவதெல்லாம் இருக்காது.
வருங்காலத்தில், உள்ளே போனால் ஒரு சோபா செட்டில் உட்கார வைத்து, வயிற்றில் துணி மாதிரி போர்த்துவார்கள். அந்த துணி தான் ஸ்கேன் மெஷின். முன்னால் பெரிய ஸ்கிரீன் டிவியில் உங்கள் சிசு கிளியராக உங்களுக்கு தெரியும். டாக்டர், டாம் க்ருஸ் போல அந்த இமேஜை இப்படி அப்படி உருட்டி காண்பிப்பார். அதோடு முந்தைய ஸ்கேனில் பார்த்த பேபிக்கும் இப்பைக்கும் என்ன வித்தியாசம் எனக் கண்கூடாக பார்க்கலாம். அப்புறம் துணியை டாக்டரம்மாவிடம் கொடுத்து விட்டு கிளம்ப வேண்டியது தான். பின்னாடிக்கா இந்த வீடியோவை எல்லாம் மகனுக்கு போட்டுக் காண்பித்து, "தம்பி, நீ இப்படித்தாண்டா என் வயித்துக்குள்ள வளந்த" என பூரிப்பு அடையலாம். அவன் யோசிப்பான், "என் பொண்டாட்டி கர்ப்பமாவுற காலத்துல ஒரு வேளை குட்டிய வெளில காமிச்சு, திரும்ப உள்ள வைக்கிற டெக்னாலஜி வந்துருமோ" என பயத்துடன் ஓடலாம். இதைப் பற்றி யூட்யுபில் பார்க்கலாம் https://www.youtube.com/watch?v=TTHtMqHyU4w
இன்றைய நவீன தனிக்குடித்தனத்தில் எத்தனை விந்தைகள்? என்னுடன் வேலை பார்க்கும் லேடி டாக்டர், காலை முதலாய் அவர் செல்போனில் ஏதோ வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். "என்ன உத்துப் பாக்குறீங்க மேம்?" என கிட்டே போய் பார்த்தால், அவரின் ஐந்து வயது மகள் சோபாவில் விளையாடுவது ஸ்கிரீனில் தெரிந்தது. "என்ன மேடம், பழைய வீடியோவா?  இதையா காலைலேந்து பாக்குறீங்க?", "இல்ல சார், அவளை வீட்ல தனியா விட்டுட்டு வந்துருக்கேன், இது லைவ் வெப்காம் ஸ்டிரிமிங் வீடியோ"ன்னார். ஒரே அதிர்ச்சியாகிப் போச்சுது. வழக்கம் போல டவுட்-எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் நாம்? மேடம் போன்ற டயம் இல்லாதவர்களுக்கு, வருங்காலத்தில் அமேசானில் ஆர்டர் செய்து, வீட்டுக்கே ஒரு பெல்ட்டை வாங்கி விடலாம். அதை அவ்வப்போது போடுக்கொண்டால், உங்கள் செல்போனிலேயே பயல் என்ன செய்கிறான் என தெரிந்து விடும். சொல்ல முடியாது நாளை உங்கள் டாக்டரிடம் இப்படியும் பேசலாம்:
போனில் நீங்கள், "குட் மார்னிங் டாக்டர்"
டாக்டர், "சொல்லுமா எப்படியிருக்கே? பையன் நல்லாருக்கானா?"
"பெரியவன் நல்லாருக்கான் டாக்டர். சின்னவன் தான் மூக்கு நோண்டுறான்"
"ஐயோ தப்பாச்சே, இப்ப என்ன வயசாவுது?"
"எட்டு மாசம் டாக்டர்"
"எட்டு மாசத்துல மூக்கு நோன்டிங்? ஆச்சரியமா இருக்கே. சரி கூட்டிட்டு வா, ஊசி காமிச்சு பயமுறுத்தலாம்"
"டாக்டர், அவன் வயித்துக்குள இருக்கான். எட்டு மாசம். பெல்ட் போட்டு செல்போன்ல பாத்தேன். என்ன செய்யலாம் மேடம்?"
டாக்டர் கடுப்பாகிறார்...


      

Episode 26- இந்த பத்து மருந்துகள் இல்லையென்றால் நீங்கள் இன்று இல்லை

இந்த பத்து மருந்துகள் இல்லையென்றால் நீங்கள் இன்று இல்லை 
இதுவரை கண்டுபிடித்த மருந்தகளிலேயே சிறந்த, சமூகத்தை காப்பாற்றிய டாப் மருந்துகள் எவை?
இந்த மாதிரி யார் லிஸ்ட் போட்டாலும் எப்பவும் முதலிடம் பிடிப்பது பெனிசிலின் தான். இன்றைக்கு உலக மக்கள் தொகையில் 75%  பேர் உயிருடன் இருப்பது இந்த மருந்தினால் தான். இந்த மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனில் நம் தாத்தா பாட்டி சீக்கிரம் இறந்து நாம் பிறக்காமலே போயிருப்போம் என்கிறார்கள். பெனிசிலின் வரும் முன் காலில் ஒரு ஆணி குத்தினாலே அது செப்டிக் ஆகி, இறக்கும் சம்பவங்கள் நடந்திரிக்கின்றன. நம் தாத்தாவை காப்பாற்றிய அலெக்சாண்டர் ஃபிளமிங்குக்கு நன்றிகள். இன்று சக்கைப் போடு போடும் cefixime, ' cef ' என ஆரம்பிக்கும் அனைத்தும் பெனிசிலின் வம்சாவழியே. அதோடு முன்னெல்லாம் டிபி வந்தால் அவ்ளோ தான் என்றிருந்த நிலையை ஸ்ரப்டோமைசின் கண்டுப்பிடித்து மாற்றியவர் வாக்ஸ்மேன் ஆகும். இது கொசுறாக பிளேக், டைபாய்டையும் குணப்படுத்தியது. அவர் வாரிசுகள் எங்கிருந்தாலும் வாழ்வாங்கு வாழ வைத்தியநாத சுவாமியை பிராத்திப்போம். 
25 வயதிலேயே பலரை மண்டையைப் போட வைத்தது டைப் 1 டயாபெடிஸ் ஆகும். மருந்து கொடுத்தால் கேட்காது. இதற்காக இன்சுலினை கண்டுப்பிடித்த பேண்ட்டிங் மற்றும் பெஸ்ட் இரண்டாம் இடம் பிடிக்கிறார்கள். 91 நாய்களுக்கு ஏதேதோ மருந்து கொடுத்து, கடைசியில் 92வது நாய் பிழைத்தது. அதற்கு போட்ட ஊசி தான் இன்சுலின்.
எது மக்களை அதிகம் கொல்கிறது? உலகின் டெட்லியான போரான இரண்டாம் உலக யுத்தத்தில் ஐந்து கோடி பேர் இறந்தனர். அதை விட அதிகமான ஆட்களை ஒரு கண்ணுக்கே தெரியாத உயிரினம் கொன்றது. அதுவே ஸ்மால் பாக்ஸ் எனப்படும் பெரியம்மை வைரஸ். இருபதாம் நூற்றாண்டில் மட்டும் 30-50கோடி பேரைக் கொத்துக் கொத்தாக சாகடித்த பெரியம்மைக்கு தடுப்பூசி கண்டுபிடித்த ஜென்னர் மற்றும் போலியோவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த சால்க் மூன்றாம் இடம். ஜென்னர் மற்றும் சால்க் எனக்கு மிகவும் பிடிக்கும். உயிர்கொல்லியான அம்மை வைரஸை தன்னுள் செலுத்தி ஆராய்ந்தவர். சால்க் போலியோ வேக்சினை பேடன்ட் எடுக்காமல் மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கியவர் (இதைப் பற்றி முன்னரே சொல்லியிருக்கிறேன்).
ஆபரேஷனுக்கு ஆஸ்பத்திரி போறான் என்றாலே உயில் எழுதி வாங்கிவிட்டு அனுப்பும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. காரணம் மயக்க மருந்து கண்டுபிடிக்காமல் இருந்த காலம் அது. காலை எடுக்க வேண்டும் என்றால், வாயில் ஒரு குச்சியை கடிக்க சொல்லிவிட்டு, அப்படியே ரம்பம் வைத்து அறுக்க வேண்டியது தான். பேஷன்ட் மயக்கமானால் நல்லது. சில சமயம் அறுக்கும் போதே உயிர் போய் விடும். இதை தடுக்க மண்டையில் கட்டையால் ஒரு போடு போட்டு விட்டு அறுக்க ஆரம்பிப்பார்கள். பல் டாக்டரான மார்ட்டன் ஈதரை வைத்து பேஷண்டை மயக்கமாக்கி வலியில்லாமல் பல் பிடுங்கி, சரித்திரத்தில் இடம் பெற்றார். இன்று அனஸ்தீசியா மிகப் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. நாலாம் இடம் இவருக்கு. இவர் யாரை வைத்து டெஸ்டிங் செய்திருப்பார் எனத் தெரியவில்லை. கர்சீப்பில் ஈத்தரை நனைத்து மனைவியை மயக்கமுறச் செய்து பல்லைப் பிடுங்கி பின் உதையும் வாங்கியிருக்கலாமோ என்னவோ? பின் ஈதர் மிகவும் தீப்பிடிக்கக் கூடிய வஸ்து எனவும், பல டாக்டர்களின் கிளினிக் எரிந்து சாம்பலானதும் குளோரோபார்மை கொண்டு வந்தார்கள்.
அடுத்த இடம் பின்கஸ் எனும் ஆராய்ச்சியாளருக்கு. இவர் தான் கர்ப்பத் தடை மாத்திரையின் தந்தை. பல மருந்துகளை எலிகளுக்கு கொடுத்துப் பார்த்தார். அவை குஷியாக பல்கிப் பெருகின. அப்புறம் இந்த மருந்தை கொடுத்துப் பார்த்தார். எலிகள் எல்லாம் ஜாலியாக இருந்தாலும் குட்டி போடவில்லை. யுரேகா. இன்று மாலா-D, மாலா-N என இந்தியாவின் பாப்புலேஷனை கண்ட்ரோல் செய்த பெருமை இவரையே சாரும். இதன் சைடு எபக்டுகள் வேறு கதை. மக்கள் தொகையை கண்ட்ரோல் செய்த பின்கஸ் ஐந்தாம் இடம் பெற்று சொர்க்கத்தில் வாழ்வாங்கு வாழ்கிறார். பல கிறிஸ்தவர்கள் கருத்தடை முறைகளை தவறு என்கிறார்கள். பைபிள் "Book of genesis" ல் ஒரு கருத்தடை முறை இருக்கிறது.
கீமொதேரபியை கண்டுபிடித்த பேராசிரியர் எர்லிச் ஏழாம் இடம். கேன்சர் வந்தா அவ்ளோ தான் என்ற நிலையை ஓரளவிற்காவது மாற்றியவர். இவருடன் நான் சேர்க்க விரும்புவது நமது ஏழை தெலுங்கு மனிதரான எல்லப் பிரகாடா சுப்பாராவ். இவரின் சாதனைகளை விரிவாக முன்பே சொல்லியிருக்கிறேன். மிகப் பெரும் அறிவாளி மற்றும் அடுத்தவரை ஊக்குவிக்கும் விஞ்ஜானியான இவரின் பட்டறையில் இருந்து தான் கேன்சர் கீமோவில் முக்கியமான 'மெத்தோடிரக்சேட்' கண்டுப்பிடிக்கப்பட்டது. அவரின் கல்லறை வாசகம் - 'இவர் ஒரு காலத்தில் உயிருடன் இருந்ததால் தான் இன்று பலர் உயிருடன் இருக்கிறோம்'. ராக்கெட் செய்வதில் உதவியாக இருந்த அப்துல் கலாமை ஆராதிக்கும் நாம், இவரை கண்டுக்கக் கூட இல்லை. அவரின் அமெரிக்க மாணவர்கள் இன்றும் இவரை ஆராத்திக்கிறார்கள். இவர் தான் சல்ஃபா மற்றும் டெட்ராசைக்லினின் தந்தை.
ஏழரையாவது இடம்- ஜெர்மன் அவசரக் குடுக்கைகள் தாலிடோமைட் எனும் மருந்து மசக்கைக்கு செம மருந்து என மார்கெட் செய்தார்கள். பிறக்கும் குழந்தைகள் கை கால்கள் இல்லாமல் பிறந்தன. பல பாவங்களை சம்பாதித்த இந்தக் கம்பெனி இப்போது மன்னிப்பு கேட்டுள்ளது. அப்ப கை கால் இல்லாமல் பிறந்த ஐயாயிரம் குழந்தைகளின் வாழ்வு? அதான் மன்னிப்பு கேட்டாசுல்ல என்கிறார்கள். மன்னிப்பு கேட்பவன் பெரிய மனுஷன் என விருமாண்டி டயலாக் வேறு.
எட்டாவது இடம். zidovudine (AZT) - எய்ட்ஸ் பரவ ஆரம்பித்த நேரத்தில் இந்த மருந்தை பலருக்கு கொடுத்துக் கொன்றது அமேரிக்கா. dallas buyers club படம் பார்க்கவும். பின்னர் ஆராய்ந்து ஆயிரம் மடங்கு குறைந்த டோஸ் கொடுத்து பல எய்ட்ஸ் நோயாளிகளை இருவது வருடம் வரை வாழ வைத்த பெருமை இந்த மருந்தையே சாரும்.
ஆக்சிஜன். இதன் பயன் எல்லோருக்கும் தெரியும். இது ஒன்பதாவது இடம். மற்றும் ஆஸ்துமா இன்ஹேலர்கள்.
கடைசி இடம். அந்தக் காலத்தில் ஹார்ட் அட்டாக் வந்தால், சிவாஜி கணேசன் படத்தில் வருவது போல, அங்கேயே நெஞ்சை பிடித்துக் கொண்டு சாக  வேண்டியது தான். நூறு பேரை மருத்துவமனைக்கு  கொண்டு போனால் பத்து பேர் தான் உயிருடன் வருவர். டில்லட் மற்றும் ஷெர்ரியின் முயற்சியால் ஸ்டரெப்டோகைனேஸ் வந்து பலரை காப்பாற்றியது (ஒரு முறை என் தந்தையையும்). இன்று பல முன்னேற்றங்கள் வந்த பின்னாலும் இது காப்பாற்றிய பலர், டில்லட்டுக்கும் ஷெர்ரிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்களாவார்கள்.  
தன்னலம் பாராமல் சமூகத்திற்காக வாழ்கையை அர்பணித்த இந்த எளிய ஆராய்ச்சியாளர்களிடம் இருந்து மருந்துக் கண்டுப்பிடிப்பு ஆராய்ச்சிகளை, மனிதம் மற்றும் மனசாட்சியே இல்லாத, பணம் மட்டுமே நோக்கமாக கருதும் மருந்து கம்பெனிகளிடம் கொடுத்தது தான் மிகவும் சங்கடப் படுத்தும் சோகம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் அரசும், பில் கேட்ஸ் போன்ற நல்லுள்ளங்களும் தரமான ஆராய்ச்சி செய்யும், ஆனால் பணமில்லா ஆராய்ச்சியாளர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்ய வேண்டும். சரக்கு விற்ற காசில் லண்டனில் சொகுசாய் வாழும் பங்களாவாயன்கள் இருக்கும் நாட்டில் இது எப்படி நடக்கும்?  

            

Episode-25 உருப்படவே உருப்படாத இந்திய ஹெல்த்கேர் மற்றும் அரசுகள்

உருப்படவே உருப்படாத இந்திய ஹெல்த்கேர் மற்றும் அரசுகள்
சோஷியலிசம் இருந்த போது, நம்மிடம் பணமில்லை. நிம்மதி, சந்தோஷம், ஆரோக்கியம் இருந்தது. கேப்பிடலிசம் வந்த பின் பணம் இருக்கிற மாதிரி மாயை மட்டுமே இருக்கிறது. மற்றது எதுவும் இல்லை. நாம் கேப்பிடலிசத்திற்கு அடிமையாகி விட்டோம். நமக்கு தேவை பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் போன்ற கேப்பிடலிச மார்கெட்டும், சோஷலிச மக்கள் அக்கறையும் கலந்த சிந்தனை உள்ள அரசுகள் தான்.
இன்றைய உலகில் நேரு இருந்திருந்தால், ஒரு பேஷன்ட் எந்த மருத்துவமனைக்கும் போகலாம். பில் எல்லாவற்றையும் அரசு கட்டும் என்ற சட்டத்தை போட்டிருப்பார்.  
"டாக்டர், நம்மூருல எவ்வளவு  நல்ல ஹாஸ்பிடல்லாம் இருக்கு. மெடிக்கல்  டூரிசம் வேற  வராங்க. நமது ஹெல்த்கேர்  தான் சிறந்தது" என நீங்கள்  மட்டுமே சொல்லலாம். உலக நாடுகளில் நமது மருத்துவ கேர் 112ம் இடத்தில் இருக்கிறது. சரி நமக்கு மேல யாரெல்லாம் இருக்காங்கனு பாப்போம். போரினால் கிழிந்த இராக்-103, பசி, பட்டினி, வெள்ளம், புயல் வாட்டும் பங்களாதேஷ்-88, துவைத்து காயப் போடப் பட்ட சிலோன்-76, பைசா இல்லாத பிச்சைக்கார நாடான வெனிசுவேலா-54, கஞ்சா ஏற்றுமதியால் உலகமே வெறுத்து  ஒதுக்கும் ஏழை  நாடான கொலம்பியா-22. இதிலிருந்து என்ன  தெரிகிறது? ஏழை நாடா பணக்கார நாடா என்பதற்கும், மருத்துவ சேவை அளிப்பதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. அந்த நாடுகளுக்கு நம் அரசுகளை விட மக்களின் மேல் அக்கறை அதிகம் இருக்கிறது.
பிரான்ஸ்- உலகின் சிறந்த ஹெல்த்கேர் இருக்கும் நாடு. உங்களுக்கு வியாதி என்றால், அங்குள்ள எந்த கிளினிக் அல்லது மருத்துவமனைக்கும் செல்லலாம். பாதிப் பேர் டாக்டரை அன்றைக்கே பார்க்கலாம், மீதிப் பேருக்கு அடுத்த நாள் அப்பாயின்மென்ட் கிடைத்து விடும். அவசரம் என்றால் அவசர சிகிச்சை பிரிவில் உடனே அனுமதி. துட்டு கட்டி விட வேண்டும். அரசிடம் பில்லை கொடுத்தால் 70% பணத்தை ரிடர்ன் செய்து விடுவார்கள். மீதிக்கு வேலை செய்யும் இடத்தில் முதலாளி கொடுக்கும் இன்சுரன்ஸ், அல்லது பிரைவேட் இன்சுரன்ஸ் எடுத்தால் எல்லா பணமும் ரிடர்ன் ஆகி விடும். இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது? வருமான வரிப்பணத்தில் தான்.
சரி, பிரான்சில் வேறு என்ன செய்கிறார்கள்? என் தொடரை ஆரம்பத்தில் இருந்து படித்து வருபவர்களுக்கு தெரிந்திருக்கும், 'வாழத் தகுதி உள்ள ஒரே நாடு பிரான்ஸ்' என சொல்லியிருப்பேன். அங்குள்ள மக்களுக்கு கிடைக்கும் வசதிகளைப் பார்ப்போம்:
1.       தற்காலிகமாக உங்களுக்கு வேலை இல்லை என்றால் அடுத்த  வேலை கிடைக்கும் வரை, அரசு மாசாமாசம் துட்டு கொடுக்கும் (டோல்)
2.       கர்ப்பமானால், அம்மாவுக்கு ஆறு  மாதம் சம்பளத்துடன் லீவ், அப்பாவுக்கு மூணு மாசம் சம்பளத்துடன் லீவ்.
3.       நம்மூர்  மாதிரி கூட்டுக் குடும்பம் இல்லையே. அதனால வாரம் இரு முறை கவர்ன்மென்ட் ஒரு பெண்ணை வாரம் இருமுறை குழந்தை பிறந்த வீட்டுக்கு அனுப்பி இலவசமாக துணி தோய்ப்பது, வீடு பெருக்குவது, சமையல் செய்வது, குழந்தையை பார்த்துக் கொள்வது போன்ற வேலைகளை செய்வார்கள்.
4.       இரவில் வயித்து வலி. துணைக்கு யாரும் இல்லை. கார் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு போக முடியாது. உடனே ஒரு நம்பருக்கு போன் செய்தால், மருத்துவர் வீட்டிற்கு வந்து ஊசி போட்டு மருந்து கொடுப்பார். துட்டு கிடையாது. இதற்காகவே இரவில் கார் பெட்ரோல் காசு குடுத்து பல டாக்டர்களை இரவில் சுற்ற வைக்கிறது பிரான்ஸ்.
இங்கிலாந்தில் எப்படி என பாப்போம். இங்கு முக்கால்வாசி கிளினிக்குகளும், மருத்துவமனைகளும் அரசாங்கத்திற்கு சொந்தமானவை. சிகிச்சை என்றால் ஜி.ஹெச் தான். நம்மூர் அரசு மருத்துவமனை மாதிரி இருண்டு மூடி, டாக்டர் எப்ப வருவார் என தெரியாத நிலை இருக்காது. நம்மூரில் இருந்து மேல் சிகிச்சைகளுக்காக லண்டன் மருத்துமனைகளுக்கு செல்லும் பிரபலங்கள் இருக்கிறார்கள். அங்கு டாக்டர்களுக்கும் நர்ஸ்களுக்கும் சம்பளம், மிக மிக அதிகம். சென்டர் ஆப் த சிட்டியில் வீடு வாங்கும் அளவுக்கு டாக்டர்கள் சம்பளம் இருக்கும். அப்புறம் அவர்கள் தரும் சேவை உயர் ரகமில்லாமல் வேறு எப்படி இருக்குமாம்? பிரைவேட்டாக டாக்டர்களும் உண்டு. அவர்கள் கவர்மென்ட்டிடம் பேஷண்டுக்கான பீஸ் வாங்குவார்கள். எதாவது மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லை என்றால், ஊர் கூடி போராட்டம், மீடியா, பார்லிமென்ட்டில் விவாதம் எனப் போவதால் குவாலிட்டி காம்ப்ரமைஸ் செய்யப்படுவதே இல்லை. பிரிட்டனின் சில திட்டங்கள்:
1.       எல்லா வைத்தியமும் இலவசம்
2.       டாக்டர் கொடுக்கும் பிரிஸ்கிப்ஷனை எந்த மருந்து கடையில் காட்டினாலும் விலை 7 பவுண்டு மட்டுமே. ரெண்டு நாளைக்கு உண்டான சளி மருந்தாக இருந்தாலும், அல்லது ஒரு மாசத்துக்கான கேன்சர் மருந்தாக இருந்தாலும் ஒரு பிரிஸ்கிரிப்ஷனுக்கு துட்டு 7 பவுண்டு தான்.
"டாக்டர் ஜி, நீங்க சொல்றதெல்லாம் பணக்கார நாடுகள். நம்மூர்ல இவ்ளோ  தான் செய்ய முடியும்" என்று சொல்கிறீர்களா?
GDP  என்றால் என்ன? ஒரு அரசின் மொத்த வருமானம். இதில் இந்தியா வருடா வருடம் மருத்துவத்திற்காக செலவிடும் அளவு எவ்வளவு? வெறும் ஒரு சதவிகிதம். மேலே சொன்ன நாடுகள் - 8-12 சதவிகிதம் மக்கள் ஆரோக்கியமாக இருக்க செலவு செய்கிறது. வெட்டித்தனமாக நஷ்டத்தில் ஓடும் கம்பெனிகளை கவர்மென்ட் நடத்துகிறது. BSNL, AIR INDIA போன்ற நஷ்டம் தரும் கம்பெனிகளை எதற்கு அரசு நடத்த வேண்டும். அந்த காசை நாலு ஜிப்மரும், எய்ம்ஸ்ம் கட்ட உதவலாம்.
"இல்ல ஜி. நாம வளரும் நாடு. இப்ப ஹெல்த்துக்காக செலவு செஞ்சா முன்னேற்றம் கிடைக்காது. பின்னாடி செய்வோம்" என்று சொன்னால், என் கேள்வி, "எப்போ? நாமெல்லாம் மண்டைய போட்ட பின்னா?". எத்தனை குடும்பங்கள், ஆஸ்பத்திரியில் பணம் அழுது நடுத் தெருவிற்கு வந்துள்ளன? குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் ஒரு விபத்தில் சிக்கி கை கால் தலையில் அடிப்பட்டு ஆறு மாதம் படுத்த படுக்கையாக கிடந்தால், அவர் வைத்திய செலவிற்கு காசு ஏது? அவர் குடும்பம் எதைக் கொண்டு சாப்பிடும்? போதாக்குறைக்கு இன்று அனைவருக்கும் EMI, கார் லோன் வேறு. சில சமயம் எல்லோரும் நம்மை போட்டு கசக்கும் பீலிங் உங்களுக்கு வரவில்லை என சொல்லுங்கள் பார்ப்போம். மகிழ்ச்சியாக அட்லீஸ்ட் நிம்மதியாக இருக்க விடாத நாடெல்லாம் ஒரு நாடா?
"ஜி அரசு 108 உதவி கொடுக்குது, இலவச மருத்துவம் ஜி.ஹெச்ல குடுக்குது. காசிருந்தா அப்போலோ போங்க, இல்லாட்டி ஜி.ஹெச் போங்க" என்கிறீர்களா? அதென்ன உங்களுக்கு ஒரு ரத்தம் அடுத்தவருக்கு இன்னொரு ரத்தம்? நம் constitution என்ன சொல்கிறது? அனைவரும் ஒன்றே. நீங்கள் பணக்காரராக இருப்பதால் ஒரு ஓட்டு எக்ஸ்டிரா கிடைக்காது. அனைவருக்கும் உலகத் தரத்தில் இலவச சிகிச்சை வேண்டும்.
நமக்கு தேவை :
1.       10% GDP சுகாதாரத்திற்கு செலவு செய்யப்பட வேண்டும்.
2.       எல்லா அரசு மருத்துவமனைகளும் சுயாட்சி (ஜிப்மர், எய்ம்ஸ் போல) தந்து காசு தர வேண்டும்.
3.       கிராம டாக்டர் நர்சுக்கு நாலு மடங்கு சம்பளம் தந்து நன்றாக வேலை செய்ய வைக்க வேண்டும.
4.       தமிழ்நாட்டில் டாஸ்மாக், புகையிலை வருமானம் முழுதும் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் மேம்படுத்த உதவ வேண்டும்.
5.       டாக்டர்கள் நர்ஸ் சம்பளம் விண்ணைத் தொட வேண்டும். வேலை செய்யாத, டயத்திற்கு வராத, தரக் குறைவாக பேசும் அனைவருக்கும் தகுந்த தண்டனை வேண்டும்.
6.       எல்லா கம்பெனிகளும் கட்டாயமாக சம்பளத்துடன் மெடர்னிட்டி, பெடர்னிட்டி, மெடிக்கல் லீவ்  தர வேண்டும்.
எல்லா மருத்துவமனைகளிலும் ஒரே கட்டணம், எந்த மருத்துவமனைக்கு போனாலும் அரசு மற்றும் வேலை செய்யும் இடத்தில் உள்ள முதலாளிகள் நமக்கு பணம் கட்ட வேண்டும்.
'அனாதைப் பிணம்' என்கிற சொல் இந்தியாவில் மட்டும் தான் இருந்திருக்க வேண்டும். ஒருவன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வாங்கும் எல்லா பொருட்களுக்கும் வரி கட்டி, வருமான வரி கட்டி, ஊருப்பட்ட வரி கட்டி, ஆனால் கடைசி காலத்தில் பணம் இல்லாமல் பிச்சைக்காரனாகி, ரோட்டில் விழுந்து இறந்தால், அவன் அனாதைப் பிணம். அவனை எரிக்கும் செலவை மட்டும் அரசாங்கம் ஏற்கும். வரி கட்டி நாட்டை உயர்த்தியிருக்கிறான் அல்லவா. காசில்லாத ஒருவனை எப்போது அரசாங்கம் தத்தெடுத்து அவனை நன்றாகப் பார்த்துக் கொள்கிறதோ, அதுவே நல்ல அரசாங்கம்.      
ஏம்பா, உங்களுக்கு (அரசு மற்றும் கம்பெனிகள்) தான வாழ்க்கை முழுசும் உழைக்கிறோம், எங்களுக்கு ஒன்னுனா நீங்க தான பாத்துக்கணும். கைகழுவாதிங்கப்பா.  



     

Episode-24 அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...

அம்மாவும் நீயே அப்பாவும் நீயே...

முப்பது வருடங்களுக்கு முன் தோன்றிய டெஸ்ட் ட்யூப் பேபி தொழில் நுட்பம், இதுவரை ஐம்பது லட்சம் குழந்தைகளை தந்துள்ளது. பிற்காலத்தில் பெட்ரூமில் குழந்தை உருவானது போய், லேபில் கரு உருவாவது அதிகம் ஆகி விடலாம். விந்தனுக்களையும் முட்டைகளையும் வெளியில் எடுத்து இணைத்தப்பின், பல கருக்கள் உருவாகும். அதை அப்படியே கர்ப்பப்பையில் வைத்து விடுவார்கள். அதனால் தான் இந்த சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன. சில சமயம் மரபணு குலைந்து போய், அபார்ஷனிலும் முடிகிறது. வருங்காலத்தில் இந்த கருக்களுக்கு மரபணு சோதனை நடத்தி, எந்த கருவிற்கு ஒரு மரபணு பிரச்சினை இல்லையோ, அதை மட்டும் கர்ப்பப்பையில் செலுத்துவார்கள். இதனால் ஜெனிடிக் வியாதிகள் வராமல் தடுக்கலாம். இது இன்னும் முன்னேறி, நாம் முந்தைய எபிசோடுகளில் சொன்னது போல டிசைனர் பேபி (எந்தக் குறையும் இல்லாத, பல வியாதிகள் வராத) கருவாக மாற்றிக் கொள்ளலாம்.
பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தின. அதாவது அங்கு வேலை செய்யும் பெண்கள், தங்கள் முட்டைகளை வெளியில் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். அதற்கான செலவை நிறுவனமே ஏற்கும். அதாவது நீங்கள் ஒரு 25 வயது பெண், படிப்பில் சுட்டி, வேலையில் கெட்டி. அப்போது கர்ப்பமானால், நிறுவனத்திற்கு நஷ்டம் தானே. மெடர்னிட்டி லீவு கொடுக்க வேண்டும், குழந்தை இருப்பதால் ஓவர் டைம் லீவு எடுக்க முடியாது, ஆஸ்பத்திரி, ஸ்கூல் என அலைவதால், அதிக லீவு எடுப்பீர்கள். நீங்கள் இளமையாக இருக்கும் போது உழைத்துக் கொட்டுவீர்கள். வயதானால் கொஞ்சம் சோம்பல் வந்து விடும், அப்போது குழந்தை பெற்றுக்கொள்ளலாமே? அதாவது பணக்கார நிறுவனங்கள் நம்மை உறிஞ்சி, அவர்களை மேலும் கொழுத்த பணக்காரர்களாக மாற்றிக் கொள்வார்கள். நம் திறன், சக்தியெல்லாம் இழந்த பின், "போம்மா, போய் குழந்தை பெத்துக்க", என கரிசனம் காட்டுவார்கள்.
சரி, இப்படி முட்டைகளை ஸ்டோர் செய்யும் முறைகள் வேறு நல்ல விதத்திலும் பயன்படுகின்றன. இன்றைய உலகில், பெண்கள் தங்கள் முன்னேற்றம் பற்றி அதிகமாக சிந்திக்கிறார்கள். சுயசார்பு வருவதற்கு நிறைய தியாகங்கள் தேவைப் படுகின்றன. அதில் ஒன்று திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ளுதலை தள்ளிப் போடுதல். பெண்களுக்கு வயதாக ஆக, முட்டைகள் சேதமடைந்து கொண்டே வருகின்றன. 27 வயதிற்கு பின் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஜெனிடிக் குறைபாடான 'டவுன் சிண்ட்ரோம்' வர வாய்ப்புள்ளது. ஒரு 20 வயதில் சில முட்டைகளை வெளியில் எடுத்து ஸ்டோர் செய்து விட்டு, படிப்பு, வேலை, கல்யானம்மெல்லாம் ஆன பின், அவைகளை உயிரூட்டிக் கொள்ளலாம். ஆரோக்கியமான குழந்தை கியாரண்டி. வருங்காலத்தில், நூறு வயதில் கூட பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவிற்கு முன்னேற்றம் வந்து விடும்.
பாக்யராஜ்-சில்க் நடித்த ஒரு படத்தில், சிறுவன், "எனக்கு ரெண்டு அப்பா", என்று சொல்வான். அதே போல் சின்ன வீடு வைத்துக் கொள்வது ஒரு காலத்தில் பேஷனாக இருந்தது. அம்மா, சின்னம்மா என ஒரே வீட்டில் வாழ்பவர்களும் உண்டு. மைட்டோகாண்டிரியா (ஆண்ட்ரியா அல்ல) எனும் செல்லுக்குள் இருக்கும் ஒரு ஐட்டத்தில் குறைபாடு இருந்தால், அது பெண்களின் மரபணு வழியாக குழந்தைகளுக்கு வருகிறது. அப்படி இருக்கும் பெண்ணிடம் இருந்து முட்டையை எடுத்து, மைட்டோகாண்டிரியாவை தூக்கிப்போட்டு விட்டு, இன்னொரு பெண்ணிடம் இருந்து நல்ல மைட்டோவை எடுத்து முட்டைக்குள் வைக்கலாம். அப்புறம் ஹூரோவான விந்தணுவை வைத்து கருவாக்கிக் கொள்ளலாம். இந்தக் குழந்தைகளுக்கு ரெண்டு அம்மா. சாதா அம்மா, மைட்டோ அம்மா.
இப்போதுள்ள டெஸ்ட் ட்யூப் முறைகளில், முட்டையை வளர வைக்க பெண்ணுக்கு, நிறைய ஊசி போடுவார்கள். அது பெண்களுக்கு மிக அதிக ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. வருங்காலத்தில், வளராத முட்டையை எடுத்து, லேபில் வைத்து வளர்க்கலாம். இதனால் அதிக ஊசிகள் தேவையில்லை.
அதே போல் சிறுவனாக இருக்கும் போது கேன்சர் வந்திருந்து, ரேடியோதெரபி தந்திருந்தால், பல சமயங்களில், விந்தணு புரொடக்ஷன் இல்லாமல் போய் விடும். அதுவே ரேடியோதெரபி கொடுக்கும் முன், அவனின் விரை செல்களை கொஞ்சம் எடுத்து ஸ்டோர் செய்திருந்தால் போதும். பின்னாட்களில், அதை வைத்து கரு உண்டாக்கிக் கொள்ளலாம். நம்மூரில் இருக்கும் பொல்யூஷன், விஷமான உணவுகள், மற்றும் வாழ்வுமுறையினால் பலருக்கு ஸ்பெர்ம் கவுண்ட் பின்னாட்களில் கம்மியாகி விடுகிறது. இருக்கும் ஸ்பெர்மின் மரபணுவும் அவ்வளவு சரியில்லை. தொப்புள் கொடியை ஸ்டோர் செய்வது போல், சின்ன வயதில் கொஞ்சம் விரை செல்களை எடுத்து ஒரு 20 வருடங்களுக்கு ஸ்டோர் செய்யும் பிசினசும் புதிதாக வந்து விடுமோ?
பிறக்கும் போதே சில பெண்கள் கர்ப்பப்பை இல்லாமலேயே பிறந்து விடுகிறார்கள். சில பெண்கள் சின்ன வயதிலேயே கர்ப்பப்பை கேன்சரோ அல்லது வேறு காரணங்களுக்காக அதை இழக்கிறார்கள். போன வருடம் அப்படிப்பட்ட ஒன்பது பெண்களுக்கு, இறந்தவர்களின் கர்ப்பப்பையை வைத்திருக்கிறார்கள். பின் முட்டையை எடுத்து டெஸ்ட் ட்யூப் பேபி முறை மூலம் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். என்னதான் வாடகைத் தாய் மூலம் தன் குழந்தையை பெற்றாலும், அல்லது தத்தெடுத்த குழந்தைகள் என்றாலும், பெற்ற பிள்ளை கொடுக்கும் இன்பம் போல் ஆகுமா என நினைக்கும் சிலர், இந்த முறைக்கு செல்கிறார்கள்.
ஆஞ்சலீனா ஜூலி புகழ் BRCA 1, BRCA 2 ஜீன்களை இந்த கருக்களில் இருக்கிறதா என ஆய்வு செய்து, மார்பக புற்று நோய் வராமல் தடுக்கலாம். சரி, இதெல்லாம் முட்டைகள் உருவாகும் பெண்களுக்கு. சில பெண்களுக்கு முட்டையே உருவாதில்லை. அவர்களுக்கு ஸ்டெம் செல் ட்ரீட்மென்ட் முறை வந்து விடும். உடலில் உள்ள ஏதாவது ஒரு செல்லை எடுத்து அதை முட்டையாக மாற்றிக் கொள்ளலாம்.
இந்த ஸ்டெம் செல்லை, முட்டையாக மாற்றுவதில் ஒரு சுவாரஸ்யமான மேட்டர் இருக்கிறது. லெஸ்பியன்கள், குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால், இன்னொரு ஆணின் விந்தணுவை தானம் பெற்றுத் தான் டெஸ்ட் ட்யூப் பேபி பெற்றுக் கொள்ள வேண்டும். பிற்காலத்தில், ஒரு பெண்ணிடம் இருந்து ரத்தம் எடுத்து அதில் உள்ள செல்லை விந்தணுவாக மாற்றி, இன்னொரு பெண்ணின் முட்டைக்குள் வைத்து பெண் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அந்தக் குழந்தை இப்படி சொல்லலாம், "எனக்கு ரெண்டு அம்மான்னு நினைச்சேன். ஆனா அதுல ஒரு அம்மா, அப்பாவாம். எப்படி???" என்று.
ஹோமொசெக்சுவல்ஸில், ஒரு ஆணின் செல்லை முட்டையாக மாற்றி, இன்னொரு ஆணின் விந்தணுவை வைத்து கரு உண்டாக்கி, வாடகைத்தாய் வழியாக பெற்றுக் கொள்ளலாம். அந்தக் குழந்தை சொல்லும், "அப்பா நம்பர் 1 தான் நிஜ அப்பா, அப்பா நம்பர் 2 என்னோட அம்மா". யார் கண்டது, வருங்காலத்தில் ஆண்கள் கூட கர்ப்பப்பையை, உள்ளே வைத்து, இன்னொரு பெண்ணிடம் முட்டை வாங்கி, உள்ளே வைத்து, ஹார்மோன் கொடுத்து கருவை வளர்த்து, சிசேரியன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாமோ என்னவோ? பிறக்கும் குழந்தை பாட்டு பாடும், "அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே"
           


Thursday, April 21, 2016

Episode-23-உடலே மனமே கலங்காதே : ஓம் ஷாந்தி

தலைப்பு: உடலே மனமே கலங்காதே : ஓம் ஷாந்தி
     கடவுளுக்கும் மருத்துவத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? இயேசு, நபிகள், புத்தர் போன்றவர்கள் பல மக்களை குனமாக்கி பக்திக்கும் ஆரோக்கியத்திற்கும் பாலம் அமைத்தனர். சில வியாதிகளைப் போக்க பல புகழ்பெற்ற தர்காக்கள் உள்ளன. வேளாங்கண்ணி கோவிலுக்கு போனால், காணிக்கையாக உலோக மூக்கு, கண், கால்களை பலர் வழங்கியிருப்பதை பார்த்திருக்கலாம். வைத்தீஸ்வரன் கோவில் போய் குளத்தில் வெல்லத்தைக் கரைத்தால் தோல் நோய் சரியாகும், திருக்கருகாவூர், ராமேஸ்வரம் போனால் டெலிவரி நார்மலாக நடக்கும், விஷம் அருந்தினால், அதை முறிக்க, திருமருகல் செல்வது என அந்தக் காலத்திலேயே தமிழ்நாட்டு கோவில்கள் உடலை குணப்படுத்துவதற்காக பேர் போனவை. 
     இப்போதும் பல பேர் டாக்டரிடம் போகாமலே குணமாவதை பார்த்திருப்பீர்கள். "மாப்ள, வினை தீர்க்கும் விநாயகர் கோவிலுக்கு போ. போய் நல்லா சாமி கும்பிட்டு, வீபூதி வச்சுக்க. நாளைக்கே காய்ச்சல் சரியாயிடும்" என்ற அட்வைஸ்கள் மிகப் பிரபலம். பல முறை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்தவுடன் காய்ச்சல் சரியாகி விடும். அதற்குப் பின் அந்த பேஷன்டுக்கு அந்தக் கோவிலின் மேல் பக்தி முற்றி காவடி, அங்கப் பிரதக்ஷணம் என்று முன்னேறி, "மாப்ள. என்ன ஜூரமா? அந்த டாக்டர்ட்ட போவாத. வினை தீர்க்கும் விநாயகர் கோவிலுக்கு போ. நான் சொன்னேன்னு குருக்கள்ட்ட ஸ்பெஷல் வீபூதி வாங்கு. நாளைக்கே உனக்கு உடம்பு சரியாயிடும்" என்று அடுத்தவருக்கு கூறுவதில் வந்து நிற்கும்.
     சாமி கும்பிட்டால் சில வியாதிகள் சரியாகிறது. அது எப்படி என்பதை பற்றி மட்டும் இந்த எபிசோடில் பார்ப்போம். என் கிளினிக்கிற்கு வரும் பல பேஷன்ட்டுகளின் பிரஷர் அதிகமாக இருக்கும். நான் கேட்பேன் "ஏம்மா, போன தடவ என்ன பாக்கும் போது பிரஷர் கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்குனு சொன்னனா" வென்று. "ஆமா டாக்டர், கொஞ்சம் பார்டருக்கு மேல இருக்குனு சொன்னீங்க" என்று பதில் வந்தால், உடனே பிரஷர் மருந்து ஆரம்பித்து விடுவோம். ஆனால், "இல்ல டாக்டர், நான் செக் பண்ணிருக்கேன், நார்மல் தான்" என்றால், அதற்கு காரணம் டாக்டரைப் பார்த்தால் என்ன சொல்லுவாரோ என்ற பயத்தில் ஏறிய பிஷர் தான். "வெளிய கொஞ்சம் காத்தாட நல்லா மூச்சு விட்டுக்கிட்டே போயிட்டு அரை மணி நேரம் கழிச்சு வாங்கனு சொல்லுவேன்". அரை மணி கழிச்சு பாத்தா பிபி நார்மலா இருக்கும். நம் மனதின் பவர் அது. ஒருவரை அது ரத்தக் கொதிப்பு பேஷன்டும் ஆக்கலாம், நினைத்தால் நார்மலாகவும் ஆக்கலாம்.
     தியானம் பிரஷர் மற்றும் இதயத் துடிப்பு அளவு போன்றவற்றை குறைக்கிறது. மெலட்டோனின், செரட்டோனின் போன்ற ஹார்மோன் அளவுகளை கட்டுப்படுத்தி, நம் தூக்கத்தை சீராக்கி, கோபங்களை கட்டுப்படுத்கிறது. கடவுள் நம்பிக்கை, எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பிரஷரை குறைத்து,  இதயத்தையும் ஆரோக்கியமாக்குகிறது. அந்தக்காலத்தில் நம் நாட்டு அரசர்கள் ஆயிரக்கணக்கில் கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். அவை மக்களின் நிம்மதிக்காக மட்டுமில்லை, ஆரோக்கியத்திற்காகவும் தான். கோவில், சர்ச், மசூதிக்கு அடிக்கடி செல்பவர்கள், கோவிலுக்கே போகாதவர்களை விட ஏழு வருடங்கள் அதிகம் வாழ்வார்களாம். கோவிலுக்கு அதிகம் செல்லாமல் இருந்தாலும், கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்கள், நாத்திகர்களை விட அதிகம் வாழ்கிறார்கள் என மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. தி.க கட்சிக்காரர்கள் யோசிக்கவும்.
     கேன்சர் பேஷண்டுகளிள் வலியும் சோர்வும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கம்மியாகவும், நாத்திகர்களுக்கு வலியும், சோர்வும் அதிகமாக இருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கேன்சர் வந்தவர்கள் கடவுளை கும்பிட்டால், சீக்கிரம் குணமாவதாகவும், கடவுள் நம்பிக்கை இல்லா விட்டால், மெதுவாக குனமடைவதாகவும் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. மருத்துவர்கள், மருத்துவத்தைத் தாண்டியும், கடவுள் நம்பிக்கை பற்றி பேஷண்டுகளிடம் இதற்காகவே பேச வேண்டும். ஆர்த்ரைட்டிஸ் எனும் ஜாயிண்டுகளின் நோய் இருப்பவர்களுக்கு மருந்துகள் கொடுத்தால், ஆத்திகர்களுக்கு, நாத்திகர்களை விட சீக்கிரம் வலி குறைவதாக சொல்கிறார்கள். அதே போல் எதற்காவது ஆபரேஷன் செய்தால், ஆத்திகர்கள், சீக்கிரம் முன்னேற்றம் அடைகிறார்கள்.
     விபாசன புத்தமதத்தில் செய்யப்படும், "Mindfullness meditation" எனும் ஒரு வகை தியானத்தை செய்தால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு சுகர் குறைகிறது. மற்ற தியானங்கள், யோகா, சாமி கும்பிடுதல் ஆகிய பிரிவுகளில் இன்னும் ஆராய்ச்சிகள் அதிகம் செய்யப்படவில்லை. இறக்கும் போது டாக்டர்கள், தங்களிடம் கடவுள் நம்பிக்கையைப் பற்றி பேச வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். டாக்டர்கள் மருத்துவ அறிவைத் தாண்டி, நாம் இறந்த பின் என்னாவோம், ஆத்மா என்றால் என்ன, பூமியில் நம் கடமை என்ன போன்ற இறக்கும் தருவாயில் இருக்கும் பேஷண்டுகளிடம் பேச வேண்டியதும் முக்கியமே.
     "டாக்டர், எவ்ளோ வருஷமா எனக்கு இந்தப் பிரச்னை இருக்கு. யார் யாரையோ பாத்தும் கம்ப்ளீட்டா சரியாக மாட்டேங்குது, வாழ்க்கையே வெறுக்குது டாக்டர்" என்று கூறுகையில், அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்குமானால், "இந்த சாமிய வேண்டிக்கிட்டு விபூதி வச்சுக்க. போன மாசம் உன்ன மாதிரியே கஷ்டப்படுற பேஷண்டுக்கிட்ட இதை சொன்னேன். இப்ப கொஞ்சம் நல்லாயிருக்கு" என டாக்டர்கள் சொல்லலாம். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது தான் முக்கியம். அந்த நம்பிக்கை அவர்கள் வியாதியை முழுமையாக குணப்படுத்தாவிட்டாலும் சரி, அட்லீஸ்ட் பேஷன்ட் கொஞ்சம் மனம் உடையாமலாவது இருப்பார்.
     ஒரு ஆராய்ச்சியில், டாக்டரை பார்க்க செல்லும் பெஷன்ட்டுகளில், 60 முதல் 90 சதவிதத்தனர் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனச்சுமையால் வரும் உடல் வலி, தலை வலி, பிரஷர், சுகர், தூக்கமின்மை, அல்சர் போன்ற வியாதிகளுக்கே வருகிறார்கள். அதனால் ஸ்ட்ரெசை குறைக்கும் வழிகளான, தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, ரெகுலராக சாமி கும்பிடுதல் போன்றவை இந்தப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிக்கலாம்.   
     நம் உடம்பு முழுக்க முழுக்க சதை, ரத்தம், கெமிக்கல்களானானது அல்ல. நாம் முழுவதுமாக அதைப் பற்றி அறியவில்லை. காலில் முள் குத்தினால் அழும் பலர், அசால்டாக தீ மிதிப்பது எப்படி? ஏன் அவர்கள் வலியை உணர்வதில்லை? சாமி வந்து ஆடுவது, "ஸ்பிளிட் பெர்சனாலிட்டி" எனும் மன நோய் என சைக்கியாடிரிஸ்டுகள் வாதிடுகிறார்கள். ஒரு ஆராய்ச்சி கூட இது சம்பந்தமாக நடந்ததில்லை. நம் மனதுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அறியாமல், தனக்கு தெரியாதெல்லாம் பொய் என பலர் டாக்டர்கள் நினைக்கிறார்கள்.

     'அட சாமி கும்பிடரதுல, இவ்ளோ நல்லது இருக்கா. அப்ப டாக்டர் பீஸ் மிச்சம் டோய்' என கோவில் கோவிலா சுத்திக்கிட்டுருக்கக் கூடாது. டாக்டரைப் பார்த்து சிகிச்சைகள் செய்து கொண்டே கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, மனமுருகிப் பிராத்தித்தால், சீக்கிரம் குணமாகி, ஏழு வருடங்கள் எக்ஸ்ட்ரா வாழலாம்.