Sunday, November 15, 2015

Episode-12
விஷத்தையும் வாங்கி சாப்பிட வைக்க வேண்டுமா? தேவை, ஒரு விளம்பரம்.
நன்றி-குங்குமம் டாக்டர்
     டிவியில் வரும் விளம்பரங்களின் நம்பகத்தன்மை எவ்வளவு? பூஜ்யம். செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, புரட்சி போராட்டம், இதெல்லாத்தையும் நம்பி நேரில் கடையில் போய்ப் பார்த்தால், "ரேர் டிசைன், 11%  வேஸ்டேஜ் ஒன்லி மேடம்" என நிஜ முகத்தை காட்டுவார்கள். லிட்டருக்கு 94 கிமீ தரும் பைக் இது என்பார்கள். இவர்கள் சொல்வதைப் பார்த்தால் பேசாமல் நிலாவிற்கு ராக்கெட் அனுப்ப இவர்களிடமே இஞ்சின் காண்ட்ராக்ட் குடுக்கலாமே எனத் தோன்றும். ஒரு ஊட்டச் சத்து பானத்தை குடித்தால் மூன்று அடி உயரத்தில் இருப்பவன் அஞ்சு அடிக்கு வளருவான் என்று மனசாட்சி இல்லாமல் கூறுவார்கள். எப்படி ஒரு நிறுவனம் இப்படி கூசாமல் பொய் சொல்கிறார்கள்? இந்திய விளம்பர கண்காணிப்பாளர் ஆணையம் எப்படி மக்களை ஏமாற அனுமதிக்கிறது? பணம் பண்ணுபவர்கள் மகா புத்திசாலிகள், அதனால் தான் அவர்களிடம் பணம் இருக்கிறது, நம்மிடம் இல்லை. அந்த விளம்பரங்களின் கீழே பார்த்தால் "*கண்டிஷன்ஸ் அப்ளை" எனப் போட்டிருக்கும்.
அதென்ன கண்டிஷன்ஸ் என்று பார்த்தால்:
1. நகைக் கடை விளம்பரம்- *சில வேஸ்ட் டிசைன் விற்காத 3-4 நகைக்கு மட்டும் வேஸ்டேஜ் கிடையாது. மற்ற நகைகளுக்கு நாங்கள் சொல்லுவது தான் விலை, வேஸ்டேஜ், மேக்கிங் சார்ஜ். ஹிஹி.
2. *பைக் மைலேஜ்: எங்கள் டிராக்கில் ஒட்டிப் பார்த்தால் 94 கிமீ வரும். அதாவது ஒரு ட்ரெட்மில் போன்ற சாதனத்தில் அலுங்காமல் ஒரே ஸ்பீடில் புது பைக்கை ஆளில்லாமல் ஓட விடுவார்கள். நாம், நம்ம ஊர் ரோட்டில் ஓட்டினால் 30 தான் வரும்.  
3. *அவர்கள் செய்த ஆராய்ச்சிப்படி, இந்த பானத்தை 5 வருடங்கள் குடித்தால் இவ்வளவு உயரம் வளரலாம். அப்ப, இதை குடிக்கலேனா? அப்பவும் அஞ்சு வருஷத்தில் அதே உயரம் வளருவான். ஹையோ ஹையோ....  
     சில உண்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள். எங்கள் டூத் பேஸ்ட் யூஸ் பண்ணினால் பல் சொத்தை வராது என்பது ஃபிராடுத்தனம். மூன்று வேளையும் சாப்பிட்ட பின் சரியான முறையில் பல் விளக்க வேண்டும். வேப்பங்குச்சி, பல் பொடி, கரி, பேஸ்ட் எல்லாம் ஒரே எபக்ட் தான் தரும். ஊட்டச் சத்து பானத்தால் மட்டும் உயரம் வராது. நல்ல சாப்பாடு சாப்பிட்டு , குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தாலே வளர வேண்டிய உயரம் வளருவார்கள். அப்பா அம்மா தாத்தா பாட்டி என்ன உயரமோ, அவ்வளவு தான் குழந்தையும் வளரும். ஒரு குழந்தை இன்னின்ன வயதில் இந்த உயரம் இருப்பான் என்பது அவன் ஜீன்கள் தீர்மானிப்பவை. சத்துமாவுக்காரன் அல்ல. இப்படி பொய் புரட்டுடன் விளம்பரம் செய்த மூன்று பெரும் கம்பெனிகள் மேல் இந்திய அரசாங்கம் கேஸ் போட்டுள்ளது. அவர்கள் இப்பவும் ஸ்டாமினா தரும், ஸ்மார்ட்னஸ் தரும், உயரம் தரும் என தைரியமாக டிவியில் பொய் கூறுகிரார்கள்.
     தலைமுடி, ஜீன், மாசு, மனசு, உணவு சம்பந்தப்பட்டது. அப்பா அல்லது தாத்தா வழுக்கை என்றால், அந்த வயது வரும் போது நீங்களும் வழுக்கை தான். ஆண்டவன் நினைச்சாலும் காப்பாத்த முடியாது. முடிக்கு போஷாக்கு உள்ளிருந்து வருவது. வெளியிலிருந்து அல்ல. நல்ல சாப்பாடு சாப்பிட்டால் முடி போஷாக்காக வளரும். வெளியே தடவப்படும் எண்ணெய்கள், ஷாம்பு, சீயக்காய், கண்டிஷனர், ஜெல், பிரேசில் தைலம், அனகோண்டா தைலம் முடியை வளர வைக்காது.
     சோப்பு போட்டால் பத்து கிருமி வராது, நாப்பது பூரான் வராது என்பெதெல்லாம் டுபாக்கூர். எல்லா சோப்பும், கிருமியைக் கொல்லும். ஆனால் குளித்து முடித்த பின், டைம் ஆக ஆக கிருமிகள் வளர்ந்து விடும். அவை நல்லது செய்யும் கிருமிகள். தினமும் குளிக்காமல் இருந்தால், டிரசை தோய்க்காமல் இருந்தால், அல்ரெடி இன்பெக்ஷன் இருப்பவரின் துணி, படுக்கையை பயன் படுத்தினால் ஸ்கின் இன்பெக்ஷன் வரும். எந்த சோப்பு போட்டாலும் இவை வரத்தான் வரும். தோல் டாக்டர்கள் கொடுக்கும் சோப்புகள், மருந்து உள்ளது ஆகும். அதை வியாதி சரியான பின் நிறுத்தி விட வேண்டும்.           
     கேபிள் டிவியில் இப்போது பல சேனல்களை பல சுயம்பு டாக்டர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். இந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் சரியாகும், கேன்சர் கோவிச்சிக்கிட்டு ஓடும் என பலப் புரளிகளை அசால்டாக அவிழ்க்கிறார்கள். இதில் உடம்பு சரியானவர்களின் பேட்டி வேறு. டாக்டர்களாகிய எங்களுக்கு முதல் பாடமே, தன்னை நம்பி வரும் பேஷண்டின் வியாதியை உயிரே போனாலும் மற்றவர்களுக்கு சொல்லாமல் இருப்பது தான். இவர்கள் டிவியில் அவர்களை வரவழைத்து "உங்க பைல்ஸ் பிரச்னை இப்ப பரவால்லையா?" என கேட்டு அவர்களை சங்கடப் படுத்துகிறார்கள். பர்சில் எவ்வளவு இருக்கிறது என்று அறிந்த பின் வைத்தியம் பார்க்கும் இவர்களிடம் மாட்டி முழிக்கும் மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. முதலில் இதை ஒளிபரப்பும் சேனல்காரர்கள், அவர்களின் ஓனர், இவர்களிடம் மட்டும் ட்ரீட்மென்ட் பார்க்கட்டும், பிறகு நாம் பார்ப்போம்.
     குளிர்பானம் குடித்தால் மலையிலிருந்து குதிக்கலாம், குறிஞ்சிப் பூவை பார்க்கலாம். அடப்பாவி. பிராக்டீஸ் இல்லாமல் வெறும் பானத்தை மட்டும் குடித்து விட்டு குதித்தால் மெர்சல் தான். கோலாக்கள் உடம்புக்கு கெடுதல் என்று நிருபனமான பின், அதில் நடிக்கும் நடிகர்களே அதைக் குடிப்பதில்லை. நாம் மட்டும் குடிக்க வேண்டுமாம்.
     இவர்களின் ஒரே ஆயுதம், "சயிண்டிபிக் ஸ்டடியினால் நிருபிக்கப்பட்டது" என்பது தான். அது என்ன சயின்டிபிக் ஸ்டடி? அதாவது ஆராய்ச்சி செய்து ப்ரூவ் பண்ணியிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியம்? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். அமெரிக்க புகையிலை சங்கத்தினர், ஒரு சயின்டிஸ்ட்டை ஃபுல் டைம் வேலைக்கு வைத்திருந்தார்கள். அவர் வேலையே சிகரெட் கெட்டது அல்ல, அதனால் உடம்புக்கு ஒன்னும் வராது என்று நிருபிப்பது தான். ஒரு உட்டாலக்கடி ஆராய்ச்சியை இங்கு சொல்கிறேன். சில பேரால் சிகரெட்டை டக்கென விட்டு விட முடியும், சில பேரால் முடியாது. அதற்கு அவர்கள் மரபணுவே காரணம். இதை காரணம் காட்டி அவர்கள் கோர்ட்டில் வைத்த வாதம், "சிகரெட்டை விட முடியாததற்கு நாங்கள் பொறுப்பல்ல, ஒருவரின் மரபணு கோளாறே காரணம்" என புத்திசாலித்தனமாகக் கூறி பல பில்லியன் நஷ்ட ஈட்டை தவிர்த்துக் கொண்டார்கள். சிகரெட்டே இல்லாமல் இருந்திருந்தால், அவன் முதலில் அதற்கு அடிமையாக இருந்திருக்கவே மாட்டான் என்ற வாதம் எடுபடவில்லை. உலகத்தில் நடக்கும் கமர்ஷியல் சயிண்டிபிக் ஸ்டடிகளின் இலட்சணம் இது தான். அவர்களுக்கு தேவையான ரிசல்டுக்காக ஆராய்ச்சியை தொடங்கி அவர்களுக்கு தேவையான முடிவு வருவது போலக் காட்டுவார்கள்.      
     இப்படித்தான் திலிப் காந்தி எனும் மகாராஷ்டிர எம்.பி சில மாதங்களுக்கு முன் "புகையிலையினால் கேன்சர் வரும் என்பதை இந்தியாவில் எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை" என்று திருவாய் மலர்ந்தார். பாராசிட்டமால் போட்டால் தலைவலி குறையும் என இந்திய ஸ்டடி இல்லை தான், அதற்காக எம்பிக்கு தலைவலி வந்தால் மாத்திரையை போடாமலா இருக்கிறார். புகையிலை கம்பெனிகளின் லாபி, பதவியில் இருப்பவர்களை எப்படி வேண்டுமானாலும் அவர்களுக்கு ஆதரவாக பேச வைக்கும்.       
      நேரு காலத்தில் நாம் ஏழையாக இருந்தாலும், ஓரளவு ஆரோக்கியத்துடன் இருந்தோம். விடிகாலையில் எழுந்து, வேப்பங்குச்சியால் பல் துலக்கி, பாத்திரம் எடுத்துப் போய் செக்கேடுத்த எண்ணை வாங்கி உடம்பில் தேய்த்து, ரிலாக்சாக சீகக்காய் கடலைமாவு தேய்த்து ஆற்றில் குளித்து, ஊரில் கிடைக்கும் காய்கறி பழங்களை வாங்கி, வீட்டில் அரைத்த மசாலா போட்டு சாப்பாடு செய்து, வியர்வை சிந்த விவசாய வேலை பார்த்து, வருடத்தில் 8 மாதங்கள் மட்டும் வேலைக்கு போய், வருடத்தில் சில நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே செய்த பலகாரங்கள் சாப்பிட்டு, புகை மாசு ஏசி இல்லாத உலகத்தில் வாழ்ந்து சீக்கிரமே உறங்கப் போய் ஆரோக்கியமாக வாழ்ந்தோம். நம் கலாச்சாரத்தின் மிக அருகில் வாழ்வை அமைத்துக் கொண்டோம். அதனால் தான் இன்னமும் நேருவை பலர் கொண்டாடுகிறார்கள்.

     மன்மோகன் திறந்து வைத்து வாஜ்பாய் மோடியால் வாழும் பண்டோராவின் பெட்டியான கேப்பிடலிசம், எல்லோரையும் பணக்காரர்கள் ஆக வலியுறுத்துகிறது. ஒரே மந்திரம், "காசு பணம் துட்டு மணி மணி". ஸ்டேடஸ் என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையாகி விட்டது. அவன் கார் வாங்கியிருக்கான், நாம வாங்கனும், பீட்சா சாப்பிடனும், சென்ட் அடிக்கணும், இதுக்கு நிறைய சம்பாதிக்கணும். தூக்கம் இல்லாமல் உழைத்து, எல்லா கெட்ட பழக்கங்களும் வந்து, எல்லா வசதிகளையும் விளம்பர மோகத்தில் வாங்கி, அதை அவசரமாக அனுபவித்து 45 வயதிலேயே பொட்டென மண்டையை போடும் வாழ்வை தான் கேப்பிடலிசம் நமக்கு தந்திருக்கிறது. ஒரு நிமிடம் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். உங்களுக்கு இதில் ஏதாவது ஒன்று இருக்கிறதா? நிம்மதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்புணர்வு, திருப்தி, மன அமைதி, நீங்கள் நினைக்கும் வசதி. நம் அப்பா தாத்தாக்களை பற்றி யோசியுங்கள். அவர்களிடம் பணம் இல்லை, ஆனால் இவை இருந்தது. ஒரு முடிவில்லா பந்தயத்தில் மாட்டிய வாழ்வு நமது.   
Episode-11
சாதனை படைக்கப்போகும் பரிசோதனைகள்
நன்றி-குங்குமம் டாக்டர் 
                அலோபதியே புதிது. தோன்றி 250 வருடங்கள் தான் ஆகிறது. முதல் முறையாக வியாதிகளுக்கு ரத்த டெஸ்ட் எடுத்தால், என்ன பிரச்னை என அறியலாம் என சிலர் சொன்ன போது, விழுந்து விழுந்து சிரித்தார்கள். 20ம் நூற்றாண்டில் தான் மருத்துவமனைகளில் லேபே வந்தது. அதுவரை டாக்டர் என்ன சொல்கிராரோ அது தான் டயக்னோசிஸ். கொஞ்சம் சுமார் டாக்டர் என்றால் பேஷன்ட் அம்பேல் தான். இன்று லேப் இல்லாமல் டாக்டரால் வியாதியை கண்டுப்பிடிக்க முடியாத அளவிற்கு பரிசோதனைகள் வளர்ந்துள்ளன. முன்னெல்லாம் ஒவ்வொரு வார்டிலும் ஒரு அடுப்பு இருக்கும். தினமும் பேஷன்ட் யூரினை எடுத்து கெமிக்கல் கலந்து காய்ச்சுவார்கள். அதன் மூலம் சிறுநீரில் சர்க்கரை, உப்பு உள்ளதா என கண்டுப்பிடிக்க! இப்போதெல்லாம் கொஞ்சம் ரத்தம் எடுத்து மாஸ்டர் ஹெல்த் செக்கப்பே செய்யலாம் எனும் லெவலுக்கு ஆய்வகத் துறை முன்னேறியுள்ளது. 1957ல் "ஸ்கெக்ஸ்" எனும் அமெரிக்க இன்ஜினியர் தான் ஆட்டோ அனலைசர்களை உருவாக்கினார். ரத்தம் எடுத்து மிஷினுள் போட்டால் போதும், அதுவே தேவையான கெமிக்கல்களை கலந்து ரிப்போர்ட் கொடுத்து விடும்.       
                தன் குழந்தைக்கு, பிறந்தவுடன் வந்த ஒரு மெட்டபாலிக் வியாதி பற்றி போன வாரம் வந்த ஒரு தந்தை என்னிடம் சொன்னது.
குழந்தையின் அப்பா: "சார். எங்க பரம்பரையிலேயே இந்த வியாதி கிடையாது. இவனுக்கு எப்படி வந்தது?"
நான்: "ஜி. உங்க பரம்பரையில இல்லனு உங்களுக்கு எப்படி தெரியும்? உங்க அப்பா அம்மா சைடு இல்ல தாத்தா பாட்டி அவங்கக்கிட்ட கேளுங்க. பிறந்து கொஞ்ச நாள்ள ஏதாவது குழந்தை இறந்திருக்கானு?"
குழந்தையின் பாட்டி: "ஆமா டாக்டர், என் தங்கச்சி பொறந்து மூனு மாசத்துல செத்துரிச்சி."
                யாருக்கு தெரியும் நம் பரம்பரையில் என்ன வியாதி இருக்கிறது என்று? நம் கொள்ளு பாட்டிக்கு வகையறாவிற்கு இருந்த ஒரு அரிய ஜெனிடிக் வியாதி நம் குழந்தைகளுக்கு கூட வரலாம். சில மெட்டபாலிக் வியாதிகள் சைலன்ட்டாக இருந்து குழந்தைக்கு 2-3 வயது வரும்போது டக்கென பாதிக்காலாம். இதை முன் கூட்டியே அறியலாம். டைரோசிநோசிஸ், பினைல் கீட்டோனுரியா, G6PD குறைபாடு, தலசீமியா, சிக்கிள் வியாதி போன்ற வியாதிகள், சர்க்கரை நோய் போல அதிக அளவில் இல்லை எனினும் பரம்பரையாக பலரை இவை பாதிக்கும். எப்படி கண்டுபிடிப்பது? பிறக்கும் போது பாதத்தில் ஒரு சொட்டு ரத்தம் எடுத்து ஒரு பேப்பரில் வைத்து, அது காய்ந்த பின் லேபுக்கு போஸ்ட்டில் அனுப்பி விடுவார்கள். அவர்கள் 'டேண்டம் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி' எனும் மிஷின் மூலம் 75 வகையான மெட்டபாலிக் வியாதிகளை கண்டுபிடித்து விடுவார்கள். அமெரிக்காவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் இதை இலவசமாக செய்கிறார்கள். மிகப்பெரும் லாபிக்கு பின்னரே அவர்கள் பாராளுமன்றத்தில் இதை சட்டமாக ஆக்கினார்கள். நம்மூரில் சுத்தம். பெங்களுருவில் உள்ள நியோஜென் லேப் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஒரு லேபும் தான் இதை செய்கிறார்கள். 4500 ரூபாய் ஆகும். இதை தமிழ்நாடு முதல்வர்களிடம், அவர்கள் இலவசமாக எல்லா குழந்தைகளுக்கும் செய்ய சொல்லி கேட்டார்கள். பயனில்லை. தலைவலியும் திருகுவலியும் அவனவனுக்கு வந்தால் தானே தெரியும். எவன் எக்கேடு கெட்டால் இவர்களுக்கென்ன?
     லேபின் பிற்காலம் என்ன? போன எபிசோடுகளில் நான் சொன்னதை படித்திருக்கலாம், மைக்ரோ அரே எனும் சிறிய சிப்கள் மூலம் 4000 வகையான வியாதிகளை கண்டுப்பிடிக்கலாம். இன்னமும் நாங்கள் இதை ஆராய்ச்சிக்கு தான் பயன் படுத்துகிறோம். சீக்கிரம் மார்க்கெட்டில் வந்து விடும். கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் உதட்டழகி ஆன்ஜலீனா ஜோலி தன் பரம்பரையில் மார்பகப் புற்றுநோய் இருந்ததால் தன் இரண்டு மார்பகங்களையும் சர்ஜரி மூலம் நீக்கி கேன்சர் வரும் முன்னே எஸ்கேப் ஆனார். அவர் பரம்பரையில் கேன்சர் வரக்கூடிய BRCA மரபணு பாசிடிவாக இருந்தது. இதனைப்போல் புற்றுநோய் தரும் 'ஆன்கோஜீன்கள்' ஆயிரக்கணக்கில் உள்ளன. அவை நமக்கு இருக்கிறதா இல்லையா என்பதை ஒரு சொட்டு ரத்தம் எடுத்து மைக்ரோஅரே டெஸ்ட் மூலம் கண்டுபிடிப்பது வருங்காலத்தில் சுலபமாகும். இதே மைக்ரோ அரே டெஸ்ட் மூலம் ஒருவருக்கு இந்த வியாதி வந்தால் எந்தெந்த மருந்துகள் சிறந்த பலன் தரும் என்றும் சொல்லிவிடும், ரெடிமேட் டிரஸுக்கு பதிலாக டைலர் நமக்கென தைப்பது போல்.
     வழக்கமான டெஸ்ட்களுக்கு லேபிற்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல், டாக்டரின் கிளினிக்கிலேயே ஒரு சொட்டு ரத்தம் எடுத்து டெஸ்ட் செய்யும் 'மைக்ரோ ப்ளுயிடிக்' மிஷின்கள் வந்து விடும். லேப்கள் இப்பொழுதே மிஷின் மயமாக இருக்கிறது. ஆட்களே இல்லாமல் வேலை செய்யக்கூடிய, முழுவதும் ரோபோமயப் படுத்தப்பட்ட லேப்கள் வந்து விடும். பிறந்தவுடன் ஒரு டெஸ்ட் எல்லோருக்கும் செய்யப்படும், அதன் மூலம் அந்தக் குழந்தையின் உத்தேசமான வாழ்வுகாலம் எவ்வளவு, என்னென்ன வியாதிகள் அவனுக்கு வரும் என்பதை சொல்லி விடுவார்கள். 
     ஊசி இல்லாமல் ரத்தம் எடுக்கும் வழிமுறை வெகு தொலைவில் இல்லை. அடுத்த வருடம் ஒரு சிறிய கருவி வரப்போகிறது. அதை தோலில் ஓட்ட வேண்டும். அது வேக்குவம் மூலம் டக்கென வலி இல்லாமல் ரத்தத்தை உறிஞ்சும். அதை டெஸ்டுக்கு அனுப்ப வேண்டியது தான். ஒலிம்பிக்ஸ் பந்தயத்தின் போது ஊக்க மருந்து சாப்பிட்டான் எனும் புகார் வரும் பொது, ரத்தம், யூரின் டெஸ்ட் எடுத்து லேபுக்கு அனுப்புவார்கள். ரிசல்ட் வருவதற்குள், வீரர்களை பத்திரிகைகள் கிழித்து தொங்க விட்டு விடும். நிரபராதியாக இருந்தாலும், அவன் பெயரில் வாழ்நாள் முழுதும் களங்கம் ஒட்டிக்கொண்டு இருக்கும். இனிமேல் அப்படி இருக்காது. ஓடும் முன் ஒரு லாலிபாப் கொடுப்பார்கள். அதை சப்பி விட்டு கொடுத்து விட வேண்டும். அதை ஒரு மிஷினுள் நுழைத்தால், எச்சிலில் என்னென்ன ஊக்க மருந்து இருக்கிறது என்று தெளிவாக ஒரு நிமிடத்தில் சொல்லிவிடும்.   
New Self-Administered Blood Testing Device Could Replace Needles  






     40% பேஷன்ட்டுகள், டாக்டர் சொல்லும் டெஸ்ட்களை எடுப்பதில்லை. காரணம், ஊசி என்னும் பயம். இதனாலேயே வியாதிகள் சீக்கிரம் கண்டுபிடிக்கப்படாமல் நோய் முற்றி அவதிப்படுகிறார்கள். எலிசபெத் ஹோம்ஸ் என்ற ஒரு பெண் அமெரிக்காவில் "தெரநோஸ்" (Theranos) என்ற ஒரு கம்பெனியை நிறுவினார். அந்த நிறுவனத்தில் என்ன விசேஷம் என்றால், சாதாரணமாக நாம் சிரின்ஜ் போட்டு ஐந்தாறு மிலி ரத்தம் எடுப்பதற்கு பதில், குளுக்கோமீட்டரில் ஒரு சொட்டு ரத்தம் வைத்து சுகர் செக் செய்வது போல், இரண்டு சொட்டு ரத்தம் எடுத்து மாஸ்டர் ஹெல்த் செக்கப்பே செய்யலாம். அதுவும் பத்து மடங்கு குறைந்த செலவில்!!! அமெரிக்காவில் 300-400 இடங்களில் செயல்படும் இந்த லேப், இன்னும் மற்ற நாடுகளில் வரவில்லை. அவர்கள் மிஷின்களை சொந்தமாகவே கண்டுப்பிடித்து, தயாரித்து பயன்படுத்துகிறார்கள். அவர்கள் இந்த டெக்னாலஜியை ராணுவ ரகசியம் போல பாதுகாக்கிறார்கள். நம்மூருக்கு இந்த லேப் வந்தால், மற்ற லேப்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு சொந்த ஊருக்கு போக வேண்டியது தான்.
     இவர்களின் பிசினஸ் மாடல் அதிர வைக்கிறது. அமெரிக்காவில், "வெல்கிரீன்ஸ்" என்ற பார்மசி கம்பெனியுடன் கைக்கோர்த்து 7800 மருந்துக்கடைகளுக்குள் இன்னும் சில ஆண்டுகளில் லேப் வைக்கப் போகிறார்கள். அமெரிக்காவில் யார் ஒருவரும் டெஸ்ட் எடுக்க ஐந்து கிமீ க்கு மேல் செல்லத் தேவையில்லை என்பது அவர்கள் லட்சியம். இதன் மூலம், வியாதி வந்தால், முதலில் டாக்டரிடம் சென்று செக் செய்து, பின்னர் டெஸ்ட் எடுக்கும் முறைக்கு பதிலாக, பேஷண்ட்டே நேராக டெஸ்ட் எடுத்து தேவைப்பட்டால் டாக்டரை அணுகும் முறை வந்து விடலாம். எங்கள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும், மக்களுக்கு இது ரொம்பவே தேவைப்படும் சேவையாகும். இதன் நிறுவனர் ஹோம்ஸ் இப்போது 9 பில்லியன் டாலருக்கு  சொந்தக்காரர்.
                எக்கச்சக்கமாக டெஸ்ட்கள் வந்து, பேஷன்டின் பர்ஸை ஓட்டையாக்குவதிலேயே குறியாக இருக்கிறது. இப்போது நிறைய டாக்டர்கள் லேப் டெஸ்ட் எடுக்காமல் டயக்னோஸ் செய்வதில்லை. அவர்கள் படிக்கும் போதே, பல வியாதிகளை டெஸ்ட் செய்யாமல் கண்டுபிடிக்கும் ஆற்றலை அவர்களின் டீச்சர்கள் சொல்லித்தருகிறார்கள். ஆனால் நடைமுறையில் இவர்கள் அதைப் பின்பற்றுவதில்லை. நிதானமாக பேஷன்டிடம் கேள்விகள் கேட்டு, அவரை நன்றாக பரிசோதித்து, டெஸ்ட்கள் இல்லாமலேயே பாதி வியாதிகளை கண்டுப்பிடிக்கலாம். அதை அவர்கள் செய்ய ஆரம்பித்தால் பேஷன்டின் பணம் தப்பிப்தோடு, டாக்டரின் கைராசி அவரை வாழும் தெய்வமாக கருத வைக்கும்.         
Episode-10
ரோபோ: வருங்கால சர்ஜன் 
நன்றி- குங்குமம் டாக்டர் 
"எவ்ளோ நாளா பல்லு வெலக்கல?"
"சுமார் ஆறு மாசமா."
"அப்படி இருந்தா அனிமல்ஸ் கூட கிட்ட வராது."
"சரி இனிம ஒரு நாளைக்கு மூனு வேள குளிக்கிறேன், ஆறு வேளை பல் தேக்கிறேன்"
நாய் சேகரின் பிரபல டயலாக் போலத் தான் 200 வருடங்களுக்கு முன் உள்ள ஆபரேஷன்கள் இருந்தன. ஒரு சர்ஜரிக்கும் இன்னொரு சர்ஜரிக்கும் நடுவில் கை அலம்ப வேண்டும் என்ற பழக்கமே இல்லாத காலம். ஆபரேஷன் செய்து கொண்ட பாதிப்பேர் இதனால் பரலோகத்தில் உள்ள பரமபிதாவிடம் ஐக்கியமாகி விடுவார்கள். இது இப்படி இருக்க, மயக்க மருந்து டெக்னாலஜி படு சுமாராக இருந்த காலம் அது. ஈதர், குலோரோபார்ம் போன்ற மயக்க மருந்து போட்டால், ஆபரேஷன் நடக்கும் போது பாதியிலேயே முழிப்பு வந்து, தனக்கு நடக்கும் ஆபரேஷனை பார்த்து அதிர்ச்சியில் பொட்டென போனவர்கள் பாதிப்பேர். இதனால் 'உட்காரும் இடத்தில் கட்டி' போன்ற டப்பா  ஆபரேஷனுக்கு போகிறான் என்றால் கூட உயில் எழுதி வாங்கி விட்டு தான் அனுப்புவர்.
இப்போது ஹைடெக்கான ஸ்டெரிலைஷேசன் மெத்தடுகள் வந்து விட்டன. அனஸ்தீசியா மரணங்களும் அரிதாகி விட்டன. ஆபரேஷனுக்கு முன்பான செக்கப்புகள், சுத்தமான அறுவை சிகிச்சை, நுண் துளை சிகிச்சைகள், குழாய் வழி சிகிச்சைகள், வெண்டிலேட்டர்கள், இதய-நுரையீரல் மிஷின், சி-ஆர்ம், மேம்பட்ட ஆண்ட்டிபயாட்டிக்குகள், ரத்தம் கிடைப்பதில் எளிமை, அனுபவமிக்க சர்ஜன்கள், பல வித மானிட்டர்கள், ஆக்சிஜன், உயிர் காக்கும் மருந்துகள் போன்றவை அறுவை சிகிச்சைகளை முடிந்த வரை ஆபத்தில்லாமல் ஆக்கி விட்டன. 200 வருடங்களுக்கு முன் உள்ள ஆபரேஷன் தியேட்டரை பார்த்தால், உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும். ரத்தம் தோய்ந்த துணிகள், நாற்றம், அழுக்கான மருத்துவ ஊழியர்கள், ஈக்கள் என்று இருக்கும். இப்போது போய்ப் பார்த்தால், ஒரு கார் அசெம்ப்ளி லைனில் இருக்கும் மிஷின்களை விட இங்கு அதிகமாக இருக்கும்.
இதன் வருங்காலம் எப்படி இருக்கும்? உங்கள் வருங்கால சந்ததிக்கு கிடைக்கும் சிகிச்சைகள் எப்படி இருக்கும்? ரெடியாக இருங்கள். செம மேட்டர்கள் இருக்கின்றன.
3-D பிரிண்ட்டிங் மூலம் உடலில் உள்ள பல உறுப்புகளை உருவாக்க முடியலாம். ஹார்ட் அட்டாக் வந்து விட்டது என்றால், அவரின் இதய செல்லை எடுத்து, லேபில் வைத்து பல கோடி செல்களாக பல்க வைத்து, வேண்டிய டிசைனில் துணி போல் பிரின்ட் செய்ய வேண்டும். ரத்தக் குழாய்களை தயார் செய்து அடுத்த லேயரில் வைக்க வேண்டும், இப்படி புடவையில் டை அடிப்பது போல் லேயர் லேயராக இதயத்தின் பகுதியை உருவாக்கி, பேஷண்டுக்குள் வைத்து தைத்து விட வேண்டும். இப்படி, உடைந்து அல்லது தேய்ந்து போன மூட்டுகளையும் உருவாக்கி வைக்கலாம். செயற்கையான பிராஸ்தடிக் பாகங்கள் முற்றிலும் இல்லாமல், அவர்களின் சொந்த செல்களை வைத்து புத்தம் புது பாகங்கள் செய்யலாம். அதன் வாழ்நாள், மனித உறுப்புகளின் வாழ்நாள் அளவிற்கு இருக்கும்.
இப்பொழுது இருப்பது போல், தெளிவில்லாத எம்.ஆர்.ஐ, சி.டி ஸ்கேன் படங்கள் போல் குருட்டாம் போக்காக இல்லாமல், டேமேஜ் ஆன உறுப்பின் முப்பரிமாண மாடல்களை கிரியேட் பண்ணலாம். சர்ஜங்களுக்கு பேஷண்ட்களின் பிரச்சினை தெளிவாக தெரியும். ஆபரேஷன் முடிந்தபின் தியேட்டரிலேயே ஒரு பிரின்ட் எடுத்து பார்க்கலாம். 'ஒகே எல்லாம் நாம் நினைத்தப்படி இருக்கிறது' என்று திருப்தி வந்த பின் ஆபரேஷனை முடிக்கலாம். ஆபரேஷன் 100 சதவிகித உறுதியான வெற்றியைடையும்.
முன்னெல்லாம் கால் உடைந்தால் அவ்வளவு தான். வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டும். இப்பொழுது வீல் சேர், செயற்கை கால் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு அன்றாட வேலைகளைப் பார்க்கலாம். பின்னால் வரக்கூடிய செயற்கைக் கால்களை வைத்துக் கொண்டு ராணுவ டூட்டியே பார்க்கலாம் என்கிறார்கள்.
          
முதன் முதலாக ரோபோடிக் சர்ஜரியை உலகிற்கு அறிமுகம் செய்தவர், டாக்டர் செந்தில்நாதன் எனும் தமிழர். லண்டனில் இவர் 1992ல் வைத்த புள்ளி தான் பிற்கால ரோபாடிக் அறுவை சிகிச்சைகளின் பிள்ளையார் சுழியாகும். இப்போது ரோபோக்கள் சின்ன சின்ன வேலைகளை செய்கின்றன. சர்ஜனுக்கு உதவியாக பஞ்சு வைத்து துடைப்பது, கத்தி கபடா எடுத்துக் கொடுப்பது, பேஷன்ட் ரிப்போர்ட்களை காண்பிப்பது என ஆரம்பித்து, சர்ஜனின் கையசைவிற்கு ஏற்ப ஆபரேஷன்களும் செய்கின்றன. அமெரிக்க ராணுவத்தில், போரின் போது அடிப்பட்டு கிடக்கும் வீரனை, கிட்டே போய்ப் பார்த்து அவனுக்கு அவசர சிகிச்சை அளித்து, அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டு வரப்போகும் ரோபோக்கள் வரப் போகின்றன. பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த லியனார்டோ டாவின்சி, ஒரு 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'. ஒரே டயத்தில் இரண்டு கைகளாலும் இரு வேறு ஓவியங்கள் வரையும் திறமை, ஹெலிகாப்டர், பாராசூட் போன்றவற்றிற்கு அப்பவே டிசைன் செய்தது, என பல வித்தை காட்டியவர். அவர் பெயரில் தான் "டாவின்சி" எனும் சர்ஜரி ரோபோவை செய்திருக்கின்றனர். சர்ஜனுக்கு வயசாகும், கை நடுக்கம் வரும், ரொம்ப நேரம் நிற்க முடியாது. ஆனால் இந்த ரோபோவை பயன்படுத்தி அவர் செய்ய நினைக்கும் எல்லா வேலைகளையும் செய்யலாம். ரத்த இழப்பும் குறைவு தான். வருடத்திற்கு நான்கு லட்சம் ஆபரேஷன்கள் இந்த ரோபோவை வைத்து உலகம் முழுதும் செய்கிறார்கள்.        
நிலாவிற்கு மனிதர்களை அனுப்பும் போது 'நாசா' யோசிக்க ஆரம்பித்தது. இவ்வளவு செலவு செய்து அனுப்பும் வான்வெளி வீரர்களுக்கு, விண்வெளியில் இருக்கும் போது, அப்பன்டிக்ஸ் போன்ற பிரச்சினைகள் வந்தால் என்ன செய்வது என்று. அப்போது ஆரம்பித்த ஆராய்ச்சி தான் தொலைதூர ரோபாட்டிக் சர்ஜரி. இப்போது அது வளர்ச்சி அடைந்து, கடல் தாண்டி வேறு நாட்டில் இருக்கும் பேஷன்ட்டுக்குக் கூட, இங்கு இருந்தபடியே ஆபரேஷன் செய்யும் தொழில்நுட்பம் வந்துள்ளது. ரோபாடிக் தியேட்டர் மட்டும் இருந்தால் போதும், உலகில் எங்கிருந்து வேண்டுமானாலும் அறுவை சிகிச்சை நிபுணர், தொலைவில் இருப்பவர்க்கு சர்ஜரி செய்யலாம்.
உங்கள் குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும் போது திட்டாதீர்கள். வீடியோ கேம் விளையாடி பழக்கப்பட்டவர்கள் தான் இந்த மாதிரி ரோபோக்களை இயக்குவதில் வல்லவர்களாக இருக்கிறார்களாம். வீடியோ கேமை பார்த்தறியாத சீனியர் சர்ஜன்கள் இந்த மேட்டர்களில் திணறுகிறார்கலாம். வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம், வயலன்ஸ் இல்லாத கேம்கள் விளையாடுவது குழந்தையின் பிற்காலத்திற்கு உதவலாம்.

பிற்காலத்தில் ஒரு சிச்சுவேஷனை இப்படி கற்பனை செய்யலாம். உங்களுக்கு உடம்பு சரியில்லை. உடனே ஹாஸ்பிடலுக்கு போகிறீர்கள். அங்கே ஒரு மிஷின் முன் நின்று டோக்கன் வாங்குகிறீர்கள். டாக்டருக்காக வெயிட்டிங், இதயம் டப் டப் என அடித்துக்கொள்கிறது. உங்கள் முறை வரும் போது ரூமுக்குள் செல்கிறீர்கள். அங்கே ஒரு பெரிய ஜம்போ மெஷின் இருக்கிறது. அதனிடம் உங்கள் பிரச்சினையை சொல்கிறீர்கள். உடனே அது உங்களை உள்ளே விட்டு இப்படி அப்படி திருப்பி செக் செய்து, வெளியே அனுப்புகிறது. "டிரிங் டாங் டிடிங்..., உங்களுக்கு கொழுப்புக் கட்டி" என்கிறது. உங்கள் ரத்தத்தை அதுவே உறிஞ்சி செக் செய்து "ஜூய்ய்ய்யங், ஒகே எல்லாம் நல்லாருக்கு. நாளைக்கு ஆபரேஷன்" என்கிறது. உடனே ஒரு வார்ட் பாய் (அவனும் ரோபோ தான்) உங்களை ரூமுக்கு தள்ளிக் கொண்டு போகிறான். ரூமில் உள்ள குட்டி ரோபோ உங்களுக்கு குளுக்கோஸ் ஏற்றுகிறது. அடுத்த நாள், உங்கள் கட்டில் உங்களைத் தூக்கிக் கொண்டு தானாகவே தியேட்டர் போகிறது. அங்கே பெரிய டாக்டர் (வேறு யார், கண்ணாடி, பச்சை கோட் போட்ட ரோபோ தான்), உங்களுக்கு மயக்கமருந்து கொடுத்து ஆபரேஷன் செய்து, பின் கண்ணாடியை கழட்டி "கிரிங், கிரிங், ஆபரேஷன் சக்சஸ்" என்கிறது. நீங்கள் உடனே, உணர்ச்சிவசப்பட்டு, "டாக்டரைய்யா, நீங்க நூறு வருஷம் நல்லாருப்பீங்கய்யா" என்கிறீர்கள்.   .     
Episode-9
 ஆப்பில் பெரிய ஆப்பு: மாரடைப்பு
நன்றி-குங்குமம் டாக்டர் 
     "டாக்டர் எனக்கு தோள்ப்பட்டையில் வலி. ஹார்ட் அட்டாக்காக இருக்குமோ?" என தினமும் ஒருவராவது பயத்துடன் என் கிளினிக் வந்து விடுகிறார். "இல்ல பாஸ், பஜ்ஜி சாப்பிட்டதனால வந்த கேஸ் (gas) தான் இது, கவலைப்படாதீங்க" என சொன்னாலும் கேட்பதில்லை. நம்பாமல் வெளியே போய் ரென்டாயிரம் ரூபாய்க்கு டெஸ்ட் செய்து, கேஸ் தான் என கன்பர்ம் செய்கிறார்கள். ஒரு வகையில் இந்த பயமும் நல்லது தான். ஒரு ஆண், பொண்டாட்டிக்கு பயப்படுகிறானோ இல்லையோ ஹார்ட் அட்டாக்கிற்கு பயந்தாவது தவறுகளை குறைத்துக் கொள்கிறான்.
     கற்காலத்தில் ஓடியாடி வேட்டையாட வேண்டும். கிடைக்கும் போது ஃபுல் கட்டு கட்ட வேண்டியது. சில சமயம் ஒன்றும் கிடைக்காது, வெறும் வயிற்றுடன் இருந்து, உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உயிர் வாழ வேண்டியது. அதோடு சோம பானம், புகையிலை என்பதெற்கெல்லாம் வழியேயில்லை. சோத்துக்கே லாட்டரி, இதுல சிகரெட், சரக்குக்கு எங்க போவதாம்? அதனால் கற்கால மனிதன், சும்மா கல்லு மாதிரி ஸ்டிராங்காக இருந்தான். ஹார்ட் அட்டாக் எல்லாம் 80-90 வயதில் வந்தது. அல்லது அல்பாயுசிலேயே சிங்கம் அவனை அடித்து சாப்பிட்டிருக்கும்.
     இப்போதுள்ள மனிதனின் கதைக்கு வருவோம். புலிகேசி படத்தில் சொல்வது போல, "காலை எட்டு மணிக்கு எழ வேண்டியது, அப்படியே நல்லா தின்னுட்டு, ஒம்போதரைக்கு வர வேண்டியது, அப்புறம் அரசியல் பேசுவது, அப்புறம் காபி, போண்டா, மதிய சாப்பாடு, நாலரை மணிக்கு ஓடிட வேண்டியது. நடுவில சிகரெட், பாக்கு. டெய்லி ஒரு கட்டிங் வேறு. போய் சிக்கன் சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியது", இப்படி ஆக்டிவிட்டி இல்லாமல் இருந்தால் 40 வயதில் ஹார்ட் அட்டாக் வரும்.
     இன்னொரு க்ரூப்பைப் பார்ப்போம். ஜப்பானில் ஒருவன், ஆபிசில் மெடிக்கல் லீவ் கூட தர மாட்டேன்ரானுங்கனு ஒரு கத்திய எடுத்து வயித்தைக் குத்திக்கிட்டான். அப்புறம் லீவ் குடுத்தார்கள். அப்படி நேரமே இல்லாமல் ஓடுவது, கண்டதைத் திங்க வேண்டியது, டெட்லைன் என்றால் அப்படியே டென்ஷனாவது, வெறி கொண்டு பார்ட்டி பண்ணுவது, சரியான தூக்கமின்மை, நைட் டூட்டி, மனைவியிடம் சண்டை போடுவது, எப்பவுமே இறுக்கமாக இருப்பது, என ரிலாக்சேஷன் இல்லாமல் ஓடினால் 30 திலேயே பூட்ட கேஸ் தான்.          
     முன்னெல்லாம் அட்டாக் வந்தால், கடவுளை வேண்ட வேண்டியது தான். ஒரு மருந்தும் கிடையாது. இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாய் அடைத்துக் கொண்டு, ஒரு பகுதி இதயம் இறந்து விடும். பின்னர் ஸ்ட்ரெப்டோகைனேஸ்  எனும் உயிர் காக்கும் மருந்து வந்தது. அது அந்த ரத்தக்கட்டை கரைத்தது. பின்னர் அந்த ஜாதியில் வேறு மருந்துகள் வந்தன. மருந்து கொடுத்தாலும் சரியாகவில்லை என்றால் பைபாஸ் தான். வேறு ரத்தக்குழாய் வைத்து விடுவார்கள். அப்புறம் மருந்து + பலூன் ஆண்சியோபிலாஸ்டி (பலூன் வைத்து ரத்தக்குழாயை விரிவடையச் செய்வது) வந்தது. இப்போது, ஹாஸ்பிடலுக்கு வந்தவுடன் மருந்து கொடுத்துவிட்டு, பலூன் ஊதி விட்டு, அங்கேயே ஒரு ஸ்டன்ட் (ஸ்பிரிங் போல இருக்கும், ரத்தக்குழாயை திறந்தே வைத்திருக்கும்) வைக்கிறார்கள். ஒரு க்ருப் கார்டியாலஜிஸ்டுகள், முதல் அட்டாக் வந்தவுடன் அந்தக் குழாயை திறந்துவிட்டு மற்ற குழாய்களையும் பலூன் ஊதி பெரிதாக்க வேண்டும் என முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களாக முழங்குகிறார்கள். அப்போது தான் அடுத்த அட்டாக் வராதாம்.             
     மேலே சொன்னதெல்லாம், அடைத்துக் கொண்ட ரத்தக்குழாயை திறக்க வைப்பதற்கு தான். செத்துப் போன செல்கள் செத்துப் போனது தான். ஒரு சாரார் இப்படி செய்ய முயற்சிக்கிறார்கள். அதாவது, ஹார்ட் அட்டாக் வந்த பின், அவர் ஸ்டெம் செல்லை எடுத்து, அதைத் தூண்டி, ஹார்ட் செல்லாக மாற்றி இதயத்தில் இன்ஜெக்ட் செய்கிறார்கள். அது இதய செல்களாக வேலை செய்யும். அதற்கு கொஞ்சம் டயம் எடுக்கும். அதற்குள் பேஷன்ட் இந்திரலோகத்தில் ரம்பை யாருக்கு என்ற பஞ்சாயத்தில் இருப்பார். அந்த நேரத்தைக் குறைக்கத் தான் 3000 பேஷண்டுகளிடம், ஐரோப்பாவில் ஆராய்ச்சி நடந்து வருகிறது. இன்னொரு லண்டன் க்ருப், செத்துப்போன தாத்தா எழுந்து நடந்து வருவது போல, இறந்த இதய செல்களை தூண்டி உயிர்தெழ செய்ய வைக்க போராடுகிறது. சுண்டெலியில் இதை செய்து காட்டியிருக்கிறார்கள்.   
ஆண்ஜியோஜெனின் என்ற புது ரத்தக்குழாய் உருவாக்கும் மருந்தை கண்டுப்பிடித்து இதயத்தில் இன்ஜெக்ட் செய்துப் பார்த்தார்கள். அது சரியாக வேலை செய்யவில்லை. இந்தா வரப்போறோம், அந்தா வரப்போறோம் என்று வித்தை காட்டும் நானோ டெக்னாலஜி ஆசாமிகள், ரத்தக்குழாய் அடைப்பு இருக்குமிடத்திற்கு சென்று மருந்தை இன்ஜெக்ட் செய்யும் வித்தையை கண்டுப்பிடிக்க முயல்கிறார்கள். 
     ஹார்ட் அட்டாக் வரும் போது, ஈசிஜியை வைத்து கண்டுப்பிடித்து விடலாம். சிலருக்கு ஈசிஜி நார்மலாக இருக்கும். அவர்களுக்கு ட்ரோபோனின் போன்ற ஸ்பெஷல் ரத்த டெஸ்ட் செய்வார்கள். இப்போது ஹார்ட் அட்டாக் வந்த இரண்டு மணி நேரத்தில், அதைக் கண்டுபிடிக்கும் டெஸ்டுகள் இருக்கின்றன. இதைவிட கம்மி நேரத்தில் கண்டுபிடிக்கக்கூடிய டெஸ்டுகள் பற்றிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. வீட்டிலேயே சுகர் செக் செய்வது போல், நெஞ்சு வலி வந்தால் ஹார்ட் அட்டாக்கா என அறிய, ரத்த டெஸ்ட் எடுக்கும் கருவியை இஸ்ரேலில் மார்கெட் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஒருவருக்கு அட்டாக் வரும் சான்ஸ் இருக்கிறதா என்று முன்கூட்டியே அறிய , டிரெட்மில், கால்சியம் ஸ்கோர், ஆஞ்சியோ, hsCRP போன்ற டெஸ்ட்கள் தான் இருக்கின்றன. இப்போது Lp-PLA2 என்ற ஒரு டெஸ்ட் அப்ரூவல் வாங்கி இருக்கிறது. இதைப் போன்ற இன்னும் சில டெஸ்டுகள் வரலாம். ஒன்றிரண்டு ஜெனிடிக் டெஸ்டுகள் வந்துள்ளன. இவை வருங்காலத்தில் அதிகரிக்கலாம்.
     அலிரோகுமாப், எவோலோகுமாப் என்ற இரு புரட்சிகரமான கொலஸ்டிரால் கம்மி செய்யும் மருந்துகள், இரண்டாம் கட்டத்தைத் தாண்டி மனிதர்களிடம் சோதனை செய்யும் மூன்றாம் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஒரு வயதுக் குழந்தைக்கு இருக்கும் கொலஸ்டிரால் லெவலுக்கு, நம் கொழுப்பும் குறைந்து விடுமாம். ஹார்ட் அட்டாக்கிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கத்தில் நடந்து வருகிறது. ரத்தக்குழாயில் கொழுப்பு படிந்தால் வரும் அதிரோசஸ்கிலோரோசிஸை (atherosclerosis) வர விடாமல் தடுக்குமாம். ஆஸ்பிரின் மாதிரியான மாத்திரைகள் ரத்தம் உரையாமல் இருக்க வகை செய்யும். உலகம் முழுவதிலும் மூன்றரைக் கோடி ஆண்களை, ஆண்களாக வைத்திருக்கும் வயாகரா, இதயத்திற்கு நல்லது என ஒரு குஜாலான மேட்டரை தெரிவித்திருக்கிறார்கள். அவர்களின் காதலை மட்டும் அல்ல, இதயத்தையும் காக்கிறதாம்.

     இந்த ஆராய்ச்சிகள் பலன் தர பல காலம் ஆகும். யோகா போன்ற, இதயத்தை வலுவாக்கும் பயிற்சிகளை மக்களிடத்தில் ஊக்கப்படுத்துதல் ஒரு நல்ல முயற்சி. அதற்கு மோடியை பாராட்டலாம். அது புரியாமல் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸாப்பிலும் கிண்டல் செய்கிறார்கள் சில சில்வண்டுகள். சைக்ளிங்கிற்கு ரோட்டில் தனி டிராக் கொடுப்பது, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு புரோமோஷன் கொடுக்காமல் இருப்பது, குண்டாக இருந்தால் அதற்கான "குண்டு வரி" விதிப்பது, இலவசமாக அனைவருக்கும் பிபி , கொலஸ்டிரால், ஈசிஜி பார்ப்பது, யோகாவை வளர்ப்பது, ஆபிசில் வடிவேலு ஜோக் போட்டு அனைவரிடமும் டென்ஷன் குறைப்பது, மாரத்தான் ஓடினால் ஆயிரம் ரூபாய் தருவது, ஹோட்டலில் எண்ணெய், சீஸ், உப்பு இல்லாமல் சமையல் செய்ய சட்டம் போடுவது போன்ற என் புது ஐடியாக்களை (ஹிஹி) செயல்படுத்தினால் ஹார்ட் அட்டாக்கையே நாம் அட்டாக் செய்யலாம்.          
Episode-8
வியாதிகளை அழிப்போம் வாருங்கள்
நன்றி : குங்குமம் டாக்டர் 
     "V for Vendetta" படத்தை நீங்கள் பாத்திருக்கலாம். ஒரு வைரஸை உருவாக்கி, அதற்கு தடுப்பு மருந்தையும் கண்டுப்பிடித்து விடுவார்கள். பின் அந்த வைரஸை பல ஸ்கூல்களின் குடிநீர் தொட்டிகளில் கலந்து விடுவார்கள். அந்த நோய் பலரைத் தாக்கி ஆயிரக்கணக்கில் சாவார்கள். அரசாங்கத்தால் எதுவுமே செய்யமுடியாத நிலை. அப்போது, இந்தக் காரியத்தை செய்த புதுக் கட்சி, வேக்சின்களையும் மருந்துகளையும் மக்களிடம் கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றும். சில ஆண்டுகளில் உலக நாடுகளின் அரசியல் இப்படித் தான் இருக்கும். உயரிய தடுப்பு மருந்துகள் வைத்திருக்கும் நாடுகள் அசைக்க முடியாத வல்லரசுகளாக வருவதை யாராலும் தடுக்க முடியாது.   
     சில ஆண்டுகளுக்கு முன், வட இந்திய முஸ்லிம்களிடம், பாகிஸ்தான் ஒரு வதந்தியை கிளப்பி விட்டது. வேக்சின்கள் மலட்டுத்தன்மை உருவாக்குவதாக. அதை நம்பி போலியோ சொட்டு மருந்து போடாத குழந்தைகள் பலருக்கு போலியோ வந்தது. போலியோவை ஒழித்து விட்டோம் என மார் தட்டிய இந்தியாவிற்கு இது ஒரு பேரிடியாக இறங்கியது. போர் என்பது, எல்லையில் மட்டும் துப்பாக்கி வைத்துக்கொண்டு சண்டை போடுவதல்ல. கள்ள நோட்டு, மக்கள் மத்தியில் பயம் உண்டாக்குதல், சுகாதாரத்தைக் கெடுத்தல், ஷேர்  மார்க்கெட்டில் குளறுபடி செய்து பொருளாதாரத்தைப் பாதித்தல், போன்றவையுமே சில வைகயான யுத்தங்கள் தான்.    
     முற்காலத்திலேயே இந்தியாவிலும் சைனாவிலும் ஒரு பழக்கம் இருந்தது. பெரியம்மை புண்ணிலிருந்து வரும் நீரை தோலிலோ அல்லது மூக்கிலோ வைத்தால், அந்த வியாதி வராது என அப்பவே கண்டுபிடித்திருந்தார்கள். உண்மையாகவே போதி தர்மரும், சாதா தர்மரும் வாழ்ந்த நாடு போலிருக்கிறது நம் நாடு. முள்ளை முள்ளால் எடுக்கும் டெக்னிக் தான் தடுப்பு மருந்துகள். நம்மைத் தாக்கும் கிருமியின் செல்லில் இருக்கும் சில புரோட்டீன்களை எடுத்து சுத்தப்படுத்தினால் அது தான் வேக்சின். முழு கிருமி உள்ளே போனால் தான் ஆபத்து. ஒரே ஒரு புரோட்டீனை மட்டும் நம் உடலில் செலுத்தினால் போதும். "யார்ரா இவன், வெளி ஆளாய் இருக்கான். இவனைப் போட்டுதள்ளிட வேண்டியது தான்" என நம் நோய் எதிர்ப்பு சிஸ்டம் முடுக்கி விடப்படும். உடனே அந்த புரோட்டீனுக்கு எதிரான ஆண்டிபாடிகள் நமக்குள் உருவாகி விடும். பின்னால் எப்போதாவது இந்தக் கிருமிகளே நுழைந்தாலும் அந்த ஆண்டிபாடிகள், கிருமியை துவம்சம் செய்து விடும். இது தான் டெக்னிக். பார்த்திபன் ஸ்டைலில் சொன்னால் 'போட்டு வாங்குவது'. முன்பு வைரஸை கொன்று அதை வாக்சினாக மாற்றினார்கள். பின்னர் உயிருடன் உள்ள வைரஸின், டேஞ்சரான மேட்டர்களை எடுத்து விட்டு வாக்சினாகுவது என்று இருந்து, இப்பொழுது லேபிலேயே கிருமியின் புரோட்டீனை தயாரித்து தடுப்பு மருந்தாக்கும் முன்னேற்றம் வந்து விட்டது. அதாவது செத்த பாம்பு, பல் பிடுங்கப்பட்ட பாம்பு, விஷம் எடுத்த பாம்பு, அப்புறம் பொம்மைப் பாம்பு என்பது போல. 
     எட்வர்ட் ஜென்னர், சால்க் போன்ற மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் பெரியம்மை, மற்றும் போலியோவிலிருந்து உலகத்தை மீட்டெடுத்தன. போலியோ வேக்சினை ஜோனாஸ் சால்க் கண்டுப்பிடித்த பின், அவர் வீட்டில் வீடியோ பேட்டி எடுக்கச் சென்றார்கள். அவர் மனைவி குழந்தைகள் பின்னணியில் விளையாட, அவர் பேட்டி எடுக்க வந்தவருடன் பேசிக் கொண்டிருப்பார்.
பேட்டி எடுப்பவர்: "மிஸ்டர் சால்க். எந்தக் கம்பெனியில் உங்கள் போலியோ வேக்சின் டெக்னாலஜியை ராயல்டிக்கு விற்கப் போகிறீர்கள்?"
சால்க்: "போலியோ பணக்காரனை மட்டுமல்ல. கடைநிலை ஏழையையும் பாதிக்கும் வியாதியாகும். அதனால் இதை நான் உலக மக்களுக்கு பேடன்ட் இல்லாமல் அளிக்கிறேன். அனைவரும் பயன் பெறட்டும்".
இன்றைய மதிப்பில் ஏழு பில்லியன் டாலர்களை 'வேண்டாம், மக்கள் பயன் பெறட்டும்' எனக் கூறிய மகாத்மா வாழ்ந்த பூமி இது.  
     இப்போது சார்ஸ், பன்றிக்காய்ச்சல், எபோலா போன்ற ஒரு உலகளாவிய நோய் (pandemic) வந்தால், அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மார்கெட்டுக்கு வர ஒன்பது மாதங்கள் ஆகிறது. தமிழ்ப் படத்தில், வில்லன் ருத்ர தாண்டவம் ஆடியபின், மீசையில்லா ஹீரோ அட்வைஸ் கொடுத்து அவனை திருத்தும் நேரத்தில் தான் போலீஸ் வரும். அப்படியில்லாமல் அமெரிக்க பெண்டகன் ஆராய்ச்சி நிலையத்தில், வைரஸ் பரவ ஆரம்பித்த ஒரு மாதத்தில், வேக்சினை உருவாக்கி சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
     பாம்பு, ஸ்பைடர் விஷங்களிருந்து செய்யப்படும் வேக்சின்கள், பாம்புக் கடியிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும். சென்னையிலிருந்து மிக அருகில் என விளம்பரப் படுத்தப்படும் ஏரியாக்களில் வீடு வாங்குபவர்களுக்கு இது அதி முக்கியத் தேவையாகும். சீக்கிரம் பலன் தரக்கூடிய ஆராய்ச்சிகள் சில. எய்ட்ஸ், மலேரியா, டிபி, போன்ற நம்மூர் வியாதிகளுக்கு தடுப்பு மருந்து மட்டும் வந்து விட்டால், நாமும் ஆப்பிரிக்காவும் அசைக்க முடியா வளரும் நாடுகள் ஆகி விடுவோம்.   
      பிற்காலத்தில், கிருமிகளால் வரக்கூடிய முக்கால்வாசி வியாதிகளுக்கு வேக்சின்கள் வந்து விடும். இப்பொழுது அதிகம் பேசப்படுவது பல பேரை பாதிக்கும் 'தொற்றா வியாதிகள்' தான். அல்ரெடி கர்ப்பவாய்ப் புற்று நோய்க்கு வேக்சின் உள்ளது. ஹெர்ப்பிஸ் எனும் வைரஸ் இந்த புற்றுநோயை வரவழைக்கிறது. அதை 70% வரை வரவிடாமல் தடுக்கும் வேக்சின் தான் இது. கொடுமையான ஞாபகமறதி வியாதியான அல்சைமர், மார்பக புற்றுநோய், பெருங்குடல் கேன்சர், ப்ராஸ்டேட் கேன்சர், சினிமாவில் கிழித்து தொங்க விடப்பட்ட பிரெய்ன் ட்யூமர் மற்றும் ப்ளட் கேன்சருக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சென்ற அத்தியாயங்களில் நாம் பார்த்த முதல் வகை டயாபெடிஸ் வராமல் தடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. "கிங்" படத்தில் விக்ரமுக்கு இருக்கும் மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ்க்கும், புகைப்பழக்கம், போதைமருந்து உட்கொள்ளுதல் போன்றவற்றை பழகாமல் இருப்பதற்கும், அலர்ஜிகளுக்கும், வேக்சின்கள் வந்து விடும். இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் பிரஷர் எனப்படும் ஹைப்பர்டென்ஷனுக்கும், உடற்பருமன் வராதிருக்கவும் 2020ம் வருடத்திற்குள் தடுப்பு மருந்துகள் வந்துவிடும் என எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். 
     எந்தெந்த வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள் எனப் பல ஆராய்ச்சிகள்  நடந்து வருவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஊசிக்கு பதிலாக மூக்கு வழியாக உறியும் வேக்சின், தோல் வழியாக செலுத்தும் பட்டைகள், சொட்டு மருந்துகள் என கலக்குகிறார்கள். இப்பொழுது உள்ள முக்கால்வாசி தடுப்பு மருந்துகள், ஐஸ் பெட்டியில் இருந்தால் தான் வேலை செய்யும். ஐஸ் பெட்டியில் வைக்காமலே வேலை செய்யும் வேக்சின்களை கண்டுபிடிக்க டிரை பண்ணுகிறார்கள். பெரியம்மை உலகம் முழுவதிலும் இருந்து மறைய முக்கிய காரணம், அதனை எடுத்து செல்லவும், சேமிக்கவும் பிரிட்ஜ் தேவைப்படுவதில்லை என்பதால் தான்.
     பலவகை வேக்சின்கள், ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளன. அவற்றில் பல, அவர்களை அதிகமாக பாதிப்பவை. குறைவான விலையில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு பரவலாக கிடைக்க வேண்டும். அதோடு ப்ரைவேட் மருத்துவமனைகளில் போடக்கூடிய டைபாய்டு, சின்னம்மை, மஞ்சள் காமாலை, Hib, ரோட்டாவைரஸ்  தடுப்பு மருந்துகள், அனைத்து குழந்தைகளுக்கும் இப்போது போடப்படும் வேக்சிங்களுடன் கட்டாயமாக  இலவசமாக அரசாங்க மருத்துவமனைகளில் போடப்பட வேண்டும்.   

     ஒரு காலத்தில் பல தொற்று வியாதிகள் இருந்தன. பிளேக், பெரியம்மை, காலரா போன்ற நோய்கள் வந்தால் கொத்துக் கொத்தாக மக்கள் சாவர். இப்பொழுது நிலைமை அப்படியல்ல. அப்படி ஒரு பாண்டெமிக் நோய் வந்தாலும் அதிகம் பேர் சாவதில்லை. எப்படியாவது கட்டுக்குள் வந்து விடுகிறது. அதற்குள் தடுப்பூசியும் வந்து விடுகிறது. பில்-மெலிண்டா கேட்ஸ் போன்ற புரவலர்கள் இதற்காக உழைப்பதும் ஒரு காரணம். ஒழிக்கவே முடியாத பேராசை, பொறாமை, அடுத்தவன் காலை வாரி விடுவது, அதிகார வெறி, பெண்ணாசை, நன்றி மறத்தல், சோம்பேறித்தனம் போன்ற சில வியாதிகளுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் தேவலை. 
Episode-7
என்னப் பெத்த ஆத்தா. கண்ணீரத் தான் பாத்தா.
நன்றி- குங்குமம் டாக்டர் 
     "அரிது அரிது  மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதிலும் கூன் குருடு....இல்லாமல் பிறத்தல் அரிது" - ஓளவையார், சங்க காலம்.
     "அறிவினால் பெற்ற ஞானத்தினால் பலன் இல்லையேல், அந்த ஞானம் சோகத்தை வழங்குகிறது" - டிரேசியாஸ், கிரேக்க புராணம்.
     "அறிவினால் சந்தோஷம் கிடைக்குமா? கிடைக்காது. சோகம் மட்டும் தான்" - என் சொந்தக் கருத்து.
     இன்றும் கல்யாணமாகி முப்பது வருடங்கள் ஆகியும், குழந்தை இல்லாமல் ஏக்கத்தில் கல்லான மனதுடன் இருப்பவர்களைப் பார்க்கிறோம். பல குடும்பங்களுக்கு டெக்னாலஜி, டெஸ்ட் ட்யூப் பேபிக்களை வழங்கியுள்ளது. அதேப் போன்ற இன்னொரு டெக்னாலஜியினால் ஏற்படும் ஒரு கருத்து மோதல் பிரச்சினையை இப்போது பார்ப்போம்.
     நூறில் ஆறு குழந்தைகள், அதாவது உலகில் வருடத்திற்கு 80 லட்சம் குழந்தைகள், ஜெனிடிக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. எம்.ஆர்.ஐ மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் பதினாலாவது வாரத்தில் குழந்தையின் மூளை, முதுகு, இதயம், வயிறு ஆகியவற்றில் உள்ள பல வியாதிகளை கண்டுப்பிடிக்கலாம். குழந்தை வளரும் ஆம்னியாட்டிக் நீரை கொஞ்சம் இன்ஜெக்ஷன் மூலம் எடுத்து, அல்லது குழந்தையின் சில செல்களை எடுத்து, அல்லது அம்மாவின் ரத்தத்தில் கலந்திருக்கும் சிசுவின் மரபணுவைப் பிரித்து பரிசோதித்து குழந்தைக்கு பிற்காலத்தில் வரப்போகும் பல வியாதிகளை கண்டுபிடிக்கலாம். தாய் மற்றும் தந்தையின் ரத்தத்தை எடுத்தும் சில பிரச்சினைகளை தெரிந்துக் கொள்ளலாம். சரி. தெரிந்து கொண்டு? சிலவற்றை கருவிலேயே இப்போது சரி செய்யலாம். பலதை சரி செய்யும் முறைகள் வந்துக் கொண்டு இருக்கின்றன. குணப்படுத்த முடியாத சீரியஸ் பிரச்சினை உள்ள சிசுக்களை என்ன செய்வதாம்? அதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்.  
     கருவிலேயே கண்டுபிடித்து சரி செய்யும் வியாதிகள் கொஞ்சம் தான். அவை டயாபெர்மேட்டிக் ஹெர்னியா (Diaphragmatic hernia) , சாக்ரோ காக்சிஜியல் டெரட்டோமா (Sacrococcygeal teratoma), ஒரு வகையான நுரையீரல் கட்டி (Cystadenoid malformation), சிறுநீர் குழாய் வியாதிகள், சில இதய குறைபாடுகள்   ஆகியவற்றை கருவிலேயே ஆப்பரேஷன் மூலம் சரிசெய்யலாம். கர்ப்பக்காலத்தில் ஃபோலிக் ஆசிட் கம்மியாக தாய் சாப்பிடுவதால் வரும் நியூரல் ட்யூப் வியாதிகள் (Neural tube defects), கஞ்சனிட்டல் அட்ரினல் ஹைப்பர்பிளேசியா (Congenital Adrenal Hyperplasia), தைராய்டு பிரச்சினைகள், தாயிடமிருந்து குழந்தைக்கு வரக்கூடிய ஹெச்.ஐ.வி  போன்றவற்றை மாத்திரை மருந்து மூலம் குணப்படுத்தலாம் அல்லது தடுக்கலாம். சிவியர் கம்பைண்டு இம்யுனோ குறைப்பாட்டை (Severe combined immunodeficiency), ஸ்டெம்செல் ட்ரீட்மெண்ட் மூலம் குணப்படுத்தலாம். ருபெல்லா வேக்சினை அம்மாவிற்கு போடுவதன் மூலம் அதிலிருந்து குழந்தையை காப்பாற்றலாம்
     டவுன் சிண்ட்ரோம், சிக்கிள் செல் அனிமியா (Sickle cell anemia), சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் (Cystic fibrosis), ஸ்பைனல் மசிள் அட்ரோஃபி (Spinal Muscle Atrophy), டேய் சாக்ஸ் வியாதி (Tay Sach's Disease), போன்ற 800 குணப்படுத்த முடியாத வியாதிகளை கண்டுப்பிடிக்கலாம். இவற்றில் பல, வாழ்நாள் முழுதும் அவதிப்பட வைக்கும் நோய்கள். ஜீன் தெரபி என்னும், இல்லாத ஜீனை குழந்தைகள் செல்லுக்குள் வைப்பதை, 50 வருடங்களாக முயற்சித்து தோற்றிருக்கிறார்கள்.
                 இதன் வருங்காலம் என்ன? கருவில் கை வைக்காமல், ஏழாவது வாரத்தில் அம்மாவின் ரத்தத்திலேயே இருக்கும் குழந்தையின் மரபணுவை மட்டும் எடுத்து எல்லா வியாதிகளையும் கண்டுபிடிப்பது, இன்னும் பல வகையான வியாதிகளுக்கு அறுவை சிகிச்சை, மருந்துகள், மற்றும் ஜீன் தெரபி ஆகியவற்றின் மூலம் கருவிலேயே குணப்படுத்துவது என, டெவலப் செய்யப் பார்க்கிறார்கள்.      
                இன்றைய டெக்னாலஜி மூலம் குணப்படுத்த முடியாத சில வியாதிகளை, குழந்தை வயிற்றில் இருக்கும் போதே கண்டுப் பிடித்து விடலாம். அப்படிக் கண்டுபிடித்தால் அபார்ஷன் செய்யலாமா? பல நாடுகளில் அபார்ஷனைப் பற்றிய புரிதல்கள் மாறுபட்டுக் கொண்டே வருகின்றன. தாய் என்ன நினைக்கிறாளோ அது தான் நியாயம் எனும் கருத்து மேலோங்கி வருகிறது. ஏனென்றால் சுமப்பவள், வளர்ப்பவள், அவனுக்காக அழுபவளும் அவள் தானே? தாய், "வேண்டாம்" என சொல்லி விட்டால், கேள்வி கேட்காமல் டாக்டர்கள் கருவைக் கலைக்க வேண்டிய சூழல் சீக்கிரம் வந்து விடலாம். ஒரு உயிர், அது எவ்வளவு குறையுடன் இருப்பின் அதைக் கொல்லலாமா? குறையே இல்லாக் குழந்தைகளாக உலகம் நிரம்பி விட்டால்? பேலன்ஸ் வேண்டாமா?  சரி. அப்படிக் குறையுடன் பிறந்தால் வளர்ப்பவர் தாய் தானே? கல்யாணம் காட்சி செய்துப் பார்க்க முடியாது, ஸ்பெஷல் ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும், மருத்துவமனைகளுக்கு கூட்டிக் கொண்டு ஓட வேண்டும், அந்தத் தாயின் பெர்சனல் வாழ்க்கையின் நிலை? "ஏம்மா என்னைப் பெத்த? பேசாம கருவில கலைச்சிருக்கலாம் இல்ல. எவ்ளோ கஷ்டப் படுறேன் பாரு" என்ற சொல்லை உங்களால் தாங்க முடியுமா? இன்று பெரும் விவாதம் இதில் நடந்துக் கொண்டு இருக்கிறது.
     இன்று அரசாங்கங்கள், தனிநபர் ஆரோக்கியம் தனது கடமையல்ல என முடிவு செய்து, கொஞ்சம் கொஞ்சமாக தனியார் இன்சூரன்ஸ் வசம் ஒப்படைத்து வருகிறது. நேரு, ரூஸ்வெல்ட் சித்தாந்தங்கள் போய், அம்பானி சித்தாந்தம் சீக்கிரம் வந்து விடும். இது ஒரு வருத்தப்படத்தக்க விஷயம். இன்று நமக்கு ஒரு வியாதி என்றால், ஜி.ஹெச் போய் இலவசமாக வைத்தியம் செய்யக்கூடிய சாத்தியம் உள்ளது. நாளை எந்த வியாதிக்கு நம்  வைத்திய செலவுகளை ஏற்பார்கள் என்பதை, யாரோ ஒரு மல்டி நேஷனல் இன்சூரன்ஸ்காரன் ஆபிசில் காபி குடித்துக் கொண்டே தீர்மானிப்பான். நீங்கள் உயிரோடு இருக்கலாமா வேண்டாமா என தீர்மானிப்பவன் அவனாகக் கூட இருக்கலாம். அவன் வீட்டில் முந்தாநாள் சண்டை என்றால் அது உங்களையும் மறைமுகமாக பாதிக்கலாம். அவன் கம்பெனியின் அந்த வருட லாபம் கம்மியாக இருந்தால் உங்கள் வியாதியை நீங்களே சரி செய்து கொள்ள வேண்டியது தான். காசு கிடைக்காது. இந்த நிலையில் கர்ப்ப காலத்திலேயே குழந்தையின் வியாதியைக் கண்டு பிடித்து விட்டால், கண்டிப்பாக அந்த வியாதிக்கு கவரேஜ் இல்லை என்று சொல்லி விடுவான். யார் கண்டது. மேலே சொன்ன டெஸ்டுகளை அவன் இலவசமாகக் கூட செய்யலாம். இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறது.       
      "எல்லாமே டெக்னாலஜியால் வந்த வினை. அது இருந்தால் தான பிரச்சினை. பேசாம அந்தக் காலத்துல உள்ள மாதிரி ஸ்கேன் செய்யாம விட்ருவோம். கடவுளா பாத்து செய்வான்" என விட்டு விடுவீர்களா?
     "யோவ். அதான் குணப்படுத்த முடியாதுன்னு சொல்றியே. அப்புறம் இன்னாத்துக்கு கண்டுபுடிக்கிற?" என்று ஒரு க்ருப்பின் வாதமும் மறுக்க முடியாதவை. அப்ப தெரிஞ்சும் தெரியாத மாதிரி விட்டு விடலாமா? அந்தக் குழந்தையை வாழ்நாள் முழுதும் வளர்க்கப்போவது பெற்றோர்கள். என்ன பிரச்சினை இருந்தாலும் அவர்களுக்கு தெரிய வேண்டும் இல்லையா! அந்த பெற்றோர் நீங்களாக இருந்தால், "ஏன் டாக்டர், உங்கள நம்பித் தான வந்தோம். நீங்க தான டெஸ்ட் பண்ணீங்க. குழந்தைக்கு இந்தப் பிரச்சினை வரும்னு சொல்லவே இல்லையே" என சண்டை போடுவீர்களா மாட்டீர்களா?

     ரோட்டில் பல மனநலம் பாதிக்கப்பட்ட ஆட்கள் இதே போன்ற ஜெனிடிக் வியாதியோடு பிறந்து கைவிடப்பட்டவர் தாம். ஒரு குழந்தை பெற்று விட்டு இரண்டாவதாக இப்படி ஒரு குழந்தை உங்கள் அல்லது உங்கள் மனைவியின் வயிற்றில் வளருகிறது என்றால் என்ன செய்வீர்கள்? நீங்கள் நல்லவரா? வல்லவரா?
Episode 6
அசத்துது அணியக்கூடிய தொழில்நுட்பம்

நன்றி- குங்குமம் டாக்டர் 

     ஜேம்ஸ்பாண்ட், என்னென்னவோ வித்தை காட்டுவார். கைக்கடிகாரத்தில் லேசர் லைட் வைத்து கண்ணாடியை அறுப்பது, தண்ணீருக்குள் விழுந்து விட்டால், கோட் அப்படியே பலூன் மாதிரி உப்பி அவரைக் காப்பாற்றுவது, எக்ஸ்ரே கிளாஸ், ஸ்பெக்சில் கேமரா என பல ஜீபூம்பா மேட்டர்கள் வைத்திருப்பார். நம் உடலில் அதைப் போல் எதையாவது மாட்டிக்கொண்டு, நமக்கு அது பயன் தருமா என்ற ரீதியில் யோசிக்கும் போது வந்தது தான் wearable medical devices (அணியக்கூடிய மருத்துவ தொழில்நுட்பம்) என்ற கான்செப்ட்.
     கூகிள் கிளாசை நீங்கள் அணிந்து கொண்டால், படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, இன்டர்நெட் பார்ப்பது, போன் பேசுவது போன்ற பல விஷயங்களை கைகளின் உதவி இல்லாமலேயே நீங்கள் செய்ய முடியும். பலரின் கற்பனைக் குதிரைகளை இது தட்டியுள்ளது. இந்த ஐடியாவை மருத்துவத் துறையில் புகுத்தியதால் வரப்போகும் புதுமைகளை இப்போது பார்ப்போம்.
     மேற்கில் கண் பார்வையற்றவர்களுக்கான, டிரெயினிங் கொடுக்கப்பட்ட நாய்கள் வெகு பிரபலம். அவர்கள் நாயுடன் தான் ரோட்டில் நடப்பார்கள். சிக்னல் சிவப்பானால் நாய் நிற்கும், இவர்களும் நிற்பார்கள். நம்மூரில் கண் பார்வையற்றவர்களுக்கு அடிப்படை உரிமைகளே மறுக்கப்படும் போது, இந்த மாதிரி ஸ்மார்ட் நாய்களுக்கு எங்கே போவதாம்? இப்போது 'நேவிகேன்' போன்ற பல சாதனங்கள் மார்கெட்டில் வந்துள்ளன. ரியல் டைம் ­ஜி.பி.எஸ், பல சென்சார்களுடன் வரும் இந்த கருவியை உடலில் பெல்ட் மாதிரி கட்டிக் கொண்டால், ரோட்டில் அவர்கள் நடக்கும் போது, எப்படி செல்ல வேண்டும், முன்னால் என்ன உள்ளது என செவி வழியாக செய்திகளை சொல்லிக்கொண்டே இருக்கும்.
     தானாகவே உடலில் சுகரை செக் செய்து, இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் டெப்போவைப் பற்றி போன இதழ்களில் பேசினோம். 24 மணி நேரம் ஈசிஜி பார்க்கும் ஹோல்ட்டர் மானிட்டர் எப்போதோ வந்து விட்டது. அவற்றை ரியல்டைம் ஆக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. ரியல் டைம் என்றால், தகவல்களை டாக்டருக்கு அவ்வப்போது அனுப்பிக்கொண்டே இருப்பது. பல்ஸ், பிரஷர் பார்க்கும் வாட்ச் போன்ற கருவிகள் அல்ரெடி மார்க்கெட்டில் உள்ளன. ஆப்பிள், கூகிள், மைக்ரோசாஃப்ட் ஆகிய கம்பெனிகள் மேம்பட்ட வாட்சுகளை தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு கலோரிகளை செலவு செய்கிறீர்கள், உங்கள் தூக்கம் போதுமா, இன்னும் ஃபிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டும், என அவை மானிட்டர் செய்து உங்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கும். இப்போது செல்போன்களில் இருக்கும் இதைப் போன்ற ஆப்கள், மற்றும் மார்கெட்டில் இருக்கும் வாட்சுகள் இன்னும் பல வளர்ச்சிகளுக்காக காத்திருக்கின்றன.
     வாய் வழியாக குழாய் நுழைத்து, உள்ளே பார்க்கும் எண்டோஸ்கோப்பி,   மற்றும் குடலை பார்க்கும் கொலோனோஸ்கோப்பி, ஈரலைப் பார்த்தல், கணையத்தை பார்த்தல் போன்ற டெக்னிக்குகள் வருங்காலத்தில் முற்றிலும் இல்லாமல் ஆகி விடலாம். ஒரு லைட் மற்றும் கேமராவுடன் கூடிய கேப்ஸ்யூலை விழுங்கினால் போதும். அது வாய் முதல் ஆசனவாய் வரை படம் பிடித்து வெளியே வந்து விடும்.
     'எலக்ட்ரானிக் தோல்' என்பதின் எதிர்காலத்தைப் பற்றி தான் இந்தத் துறையில் உள்ள பலர் சிலாகிக்கின்றனர். அதாவது கை அல்லது காலின் தோல் மேலே மெல்லிய ஸ்டிக்கர் மாதிரி ஒட்டிக்கொள்வது. அதுவே பல்ஸ், பிரஷர், உடல் சூடு, ஈசிஜி எல்லாவற்றையும் பார்க்கும். இதய வியாதிகளுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், மாதா மாதம் டாக்டரை பார்த்து ஈசிஜி, பிரஷர், பல்ஸ், இதய சத்தங்கள் செக் செய்து, மருந்துகளை அட்ஜெஸ்ட் செய்ய வேண்டும். அவர்களுடைய டாக்டர்களுக்கு இந்த டேட்டாக்களை அனுப்பி, போனிலேயே ஆலோசணை பெற்றுக் கொள்ளலாம். டாக்டர் அப்பாயின்மென்ட்டுக்காக காத்திருக்க தேவையில்லை. அலையவும் வேண்டாம்.
     குழந்தையின்மை சிகிக்சை எடுத்துக் கொள்ளும் பெண்கள்களுக்கு கையில் காப்பு மாதிரி போட்டுக்கொள்ளும் ஒரு சாதனம் வந்து விட்டது. ஒரு பெண்ணின் மாதவிடாய் சைக்கிள் எவ்வளவு நாள், எந்தெந்த நாட்களில் (fertile days) கணவனோடு இருந்தால் குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு அதிகம் என அது அறிவுறுத்தும். அதே போல் கான்டாக்ட் லென்ஸ் ஒன்றை அணிந்து கொண்டால், அது உங்கள் கண்ணீரில் உள்ள சர்க்கரையை அளந்து டாக்டருக்கு அனுப்பி விடும். சர்க்கரை வியாதிக்காரர்கள் ஊசிக் குத்தி, ரத்தம் எடுத்து சுகர் செக் செய்ய தேவையில்லை.
                பக்கவாதம் எனும் ஸ்ட்ரோக் வந்து கை கால்கள் செயலிழந்தவர்களுக்கு இதைப்போன்ற பல கண்டுபிடிப்புகள் வந்து விட்டன. எலெக்ட்ரானிக் சிப்களை தண்டுவடம், கை கால்களுக்கான நரம்புகளில் வைத்து தைத்து விடுவது. தலையில் ஒரு ஹெல்மெட் போன்ற ஒரு சாதனத்தை வைத்து விட்டால் போதும். இவர்கள் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறார்களோ அவற்றை கை கால்கள் செய்யும். இப்போது வெறும் கை கால்களை அசைப்பது, மடக்குவது, விரல்களால் ஒரு பொருளை எடுப்பது என்ற வகையில் வந்திருக்கும் இத் தொழில்நுட்பம், பிற்காலத்தில் வாதம் வந்த ஆட்களை நடக்க வைப்பது, வேலைகள் செய்ய வைப்பது என்ற லெவலுக்கு சீக்கிரம் வந்து விடும் என்கிறார்கள்.
     கைக்குழந்தைகள் வளர்ப்பில் இன்றியையாதது டயாபர்கள். ஒரு சிப் உள்ள ஸ்மார்ட் டயாபர் மாட்டி விடுவதின் மூலம், குழந்தையின் சிறுநீரை செக் செய்து கிட்னி வியாதி, யூரின் இன்பெக்ஷன் மற்றும் பல சிறுநீரக பிரச்னைகளை மானிட்டர் செய்யலாம்.
     மருத்துவத்தை விட்டு வெளியே வந்து பார்த்தால் இன்னும் சில முயற்சிகள் நடப்பது தெரியும். நாம் ஓடும் போது, உடல் சூட்டினால் பேட்டரியை சார்ஜ் ஏற்றுவது, ராணுவ வீரர்களுக்கு பல சென்சார்களைப் பொருத்தி போரின் போது அவர்கள் உடல் நிலை எப்படி உள்ளது என கமான்ட் சென்டரில் அறிவது, கையில் பேட் வைத்துக் கொண்டு கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது போன்ற பல விஷயங்கள் வந்து விட்டன அல்லது வந்து கொண்டிருக்கின்றன. ஒரு ஸ்மார்ட் மோதிரம் வரப்போகிறது. அதை அணிந்து கொண்டால், கையசைவின் மூலம் குறுஞ்செய்தி அனுப்புவது, வீட்டு உபயோகப் பொருட்களை கண்ட்ரோல் செய்வது, பில்களுக்கு பணம் கட்டுவது போன்ற பல வேலைகளை செய்யலாம். மனைவிமார்கள் அக்ஷய திருதிக்கு தங்க மோதிரம் வாங்குவதற்கு பதில் இதை வாங்கினால் ஐஸ்வர்யம் தானாக வந்து சேரும்.  
     "டாக்டர்ஜி, வழக்கமா புது லட்டுநவீன ஜாங்கிரி, புரட்சிகரமான மைசூர்பா வரப்போவுது நீங்க சொல்ற மாதிரியே இப்பவும் சொல்றீங்க. தட்டுல ஒரு வெங்காயத்தையும் காணோம். அது பரவால்ல. இதெல்லாம் நாங்க வாங்குவோம்னு எப்புடி நீங்க சொல்ல முடியும்? இப்ப இருக்குறதே நல்லாத்தான இருக்கு!!!" என சொல்பவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்  கொள்கிறேன். ரயில் புதுசா இந்தியாவுக்கு வந்த போது நம்மாளுக, "மாப்ள, இது தான் இரும்புக் குதிரயாம். நாம போவ வேண்டிய இடத்துக்கு இட்னு போய் வுட்ருமாம். இது புல்லும் திங்காதாம். சாணியும் போதாதாம். எப்படிடா நம்பி ஏறுறது?" எனக்கேட்டு விட்டு வீராப்பாக ஜட்கா வண்டியில் கொஞ்ச நாள் போய் விட்டு, பின்னர் ரயிலில் செல்ல ஆரம்பித்தோம். எது ஒன்று புதிதாக மார்கெட்டுக்கு வருகிறதோ, முதலில் அதை கிண்டல் செய்வோம்--> மறுப்போம் --> நாலு பேர் அதைப் பயன்படுத்துவதை பார்ப்போம் --> யோசிப்போம் --> ஒத்துக் கொள்வோம் -->வாங்குவோம், பின்னர் சிலாய்கிப்போம் --> அடுத்தவனை வாங்கு என நச்சரிப்போம்--> அது இல்லாமல் வாழ முடியாத அளவிற்கு வந்து விடுவோம். டெலிகிராம், சைக்கிள், மின்சாரம், லேண்ட்லைன், சினிமா, செல்போன், இன்டர்நெட், அலோபதி இவை எல்லாவற்றையும் முதலில் கழுவிக் கழுவி ஊற்றி விட்டு பின்னர் ஏற்றுக் கொண்டோம். இன்டர்நெட் பயன்படுத்த மாட்டேன் என சொல்பவர்கள் தங்கள் குழந்தைகளின் பத்தாங்கிளாஸ், ப்ளஸ் டு ரிசல்ட்களை ஏன் நெட் சென்டரில் போய் பார்க்க வேண்டும். பத்து நாள் கழித்து ஸ்கூலுக்கு வரும். அப்ப வாங்கிக்க வேண்டியது தானே?  

     ரஜினி சொல்வது போல் "நடக்கும்னு இருக்குறது  கண்டிப்பா நடக்கும், நடக்காதுனு இருக்கிறது என்னிக்கும் நடக்காது".  தலைவர் இன்னொன்னும் சொல்லிருக்கார்..."மாற்றம் ஒன்றே மாறாதது".