Sunday, November 15, 2015

Episode-12
விஷத்தையும் வாங்கி சாப்பிட வைக்க வேண்டுமா? தேவை, ஒரு விளம்பரம்.
நன்றி-குங்குமம் டாக்டர்
     டிவியில் வரும் விளம்பரங்களின் நம்பகத்தன்மை எவ்வளவு? பூஜ்யம். செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, புரட்சி போராட்டம், இதெல்லாத்தையும் நம்பி நேரில் கடையில் போய்ப் பார்த்தால், "ரேர் டிசைன், 11%  வேஸ்டேஜ் ஒன்லி மேடம்" என நிஜ முகத்தை காட்டுவார்கள். லிட்டருக்கு 94 கிமீ தரும் பைக் இது என்பார்கள். இவர்கள் சொல்வதைப் பார்த்தால் பேசாமல் நிலாவிற்கு ராக்கெட் அனுப்ப இவர்களிடமே இஞ்சின் காண்ட்ராக்ட் குடுக்கலாமே எனத் தோன்றும். ஒரு ஊட்டச் சத்து பானத்தை குடித்தால் மூன்று அடி உயரத்தில் இருப்பவன் அஞ்சு அடிக்கு வளருவான் என்று மனசாட்சி இல்லாமல் கூறுவார்கள். எப்படி ஒரு நிறுவனம் இப்படி கூசாமல் பொய் சொல்கிறார்கள்? இந்திய விளம்பர கண்காணிப்பாளர் ஆணையம் எப்படி மக்களை ஏமாற அனுமதிக்கிறது? பணம் பண்ணுபவர்கள் மகா புத்திசாலிகள், அதனால் தான் அவர்களிடம் பணம் இருக்கிறது, நம்மிடம் இல்லை. அந்த விளம்பரங்களின் கீழே பார்த்தால் "*கண்டிஷன்ஸ் அப்ளை" எனப் போட்டிருக்கும்.
அதென்ன கண்டிஷன்ஸ் என்று பார்த்தால்:
1. நகைக் கடை விளம்பரம்- *சில வேஸ்ட் டிசைன் விற்காத 3-4 நகைக்கு மட்டும் வேஸ்டேஜ் கிடையாது. மற்ற நகைகளுக்கு நாங்கள் சொல்லுவது தான் விலை, வேஸ்டேஜ், மேக்கிங் சார்ஜ். ஹிஹி.
2. *பைக் மைலேஜ்: எங்கள் டிராக்கில் ஒட்டிப் பார்த்தால் 94 கிமீ வரும். அதாவது ஒரு ட்ரெட்மில் போன்ற சாதனத்தில் அலுங்காமல் ஒரே ஸ்பீடில் புது பைக்கை ஆளில்லாமல் ஓட விடுவார்கள். நாம், நம்ம ஊர் ரோட்டில் ஓட்டினால் 30 தான் வரும்.  
3. *அவர்கள் செய்த ஆராய்ச்சிப்படி, இந்த பானத்தை 5 வருடங்கள் குடித்தால் இவ்வளவு உயரம் வளரலாம். அப்ப, இதை குடிக்கலேனா? அப்பவும் அஞ்சு வருஷத்தில் அதே உயரம் வளருவான். ஹையோ ஹையோ....  
     சில உண்மைகளை தெரிந்துக் கொள்ளுங்கள். எங்கள் டூத் பேஸ்ட் யூஸ் பண்ணினால் பல் சொத்தை வராது என்பது ஃபிராடுத்தனம். மூன்று வேளையும் சாப்பிட்ட பின் சரியான முறையில் பல் விளக்க வேண்டும். வேப்பங்குச்சி, பல் பொடி, கரி, பேஸ்ட் எல்லாம் ஒரே எபக்ட் தான் தரும். ஊட்டச் சத்து பானத்தால் மட்டும் உயரம் வராது. நல்ல சாப்பாடு சாப்பிட்டு , குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தாலே வளர வேண்டிய உயரம் வளருவார்கள். அப்பா அம்மா தாத்தா பாட்டி என்ன உயரமோ, அவ்வளவு தான் குழந்தையும் வளரும். ஒரு குழந்தை இன்னின்ன வயதில் இந்த உயரம் இருப்பான் என்பது அவன் ஜீன்கள் தீர்மானிப்பவை. சத்துமாவுக்காரன் அல்ல. இப்படி பொய் புரட்டுடன் விளம்பரம் செய்த மூன்று பெரும் கம்பெனிகள் மேல் இந்திய அரசாங்கம் கேஸ் போட்டுள்ளது. அவர்கள் இப்பவும் ஸ்டாமினா தரும், ஸ்மார்ட்னஸ் தரும், உயரம் தரும் என தைரியமாக டிவியில் பொய் கூறுகிரார்கள்.
     தலைமுடி, ஜீன், மாசு, மனசு, உணவு சம்பந்தப்பட்டது. அப்பா அல்லது தாத்தா வழுக்கை என்றால், அந்த வயது வரும் போது நீங்களும் வழுக்கை தான். ஆண்டவன் நினைச்சாலும் காப்பாத்த முடியாது. முடிக்கு போஷாக்கு உள்ளிருந்து வருவது. வெளியிலிருந்து அல்ல. நல்ல சாப்பாடு சாப்பிட்டால் முடி போஷாக்காக வளரும். வெளியே தடவப்படும் எண்ணெய்கள், ஷாம்பு, சீயக்காய், கண்டிஷனர், ஜெல், பிரேசில் தைலம், அனகோண்டா தைலம் முடியை வளர வைக்காது.
     சோப்பு போட்டால் பத்து கிருமி வராது, நாப்பது பூரான் வராது என்பெதெல்லாம் டுபாக்கூர். எல்லா சோப்பும், கிருமியைக் கொல்லும். ஆனால் குளித்து முடித்த பின், டைம் ஆக ஆக கிருமிகள் வளர்ந்து விடும். அவை நல்லது செய்யும் கிருமிகள். தினமும் குளிக்காமல் இருந்தால், டிரசை தோய்க்காமல் இருந்தால், அல்ரெடி இன்பெக்ஷன் இருப்பவரின் துணி, படுக்கையை பயன் படுத்தினால் ஸ்கின் இன்பெக்ஷன் வரும். எந்த சோப்பு போட்டாலும் இவை வரத்தான் வரும். தோல் டாக்டர்கள் கொடுக்கும் சோப்புகள், மருந்து உள்ளது ஆகும். அதை வியாதி சரியான பின் நிறுத்தி விட வேண்டும்.           
     கேபிள் டிவியில் இப்போது பல சேனல்களை பல சுயம்பு டாக்டர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். இந்த கீரையை சாப்பிட்டால் சர்க்கரை நோய் சரியாகும், கேன்சர் கோவிச்சிக்கிட்டு ஓடும் என பலப் புரளிகளை அசால்டாக அவிழ்க்கிறார்கள். இதில் உடம்பு சரியானவர்களின் பேட்டி வேறு. டாக்டர்களாகிய எங்களுக்கு முதல் பாடமே, தன்னை நம்பி வரும் பேஷண்டின் வியாதியை உயிரே போனாலும் மற்றவர்களுக்கு சொல்லாமல் இருப்பது தான். இவர்கள் டிவியில் அவர்களை வரவழைத்து "உங்க பைல்ஸ் பிரச்னை இப்ப பரவால்லையா?" என கேட்டு அவர்களை சங்கடப் படுத்துகிறார்கள். பர்சில் எவ்வளவு இருக்கிறது என்று அறிந்த பின் வைத்தியம் பார்க்கும் இவர்களிடம் மாட்டி முழிக்கும் மக்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது. முதலில் இதை ஒளிபரப்பும் சேனல்காரர்கள், அவர்களின் ஓனர், இவர்களிடம் மட்டும் ட்ரீட்மென்ட் பார்க்கட்டும், பிறகு நாம் பார்ப்போம்.
     குளிர்பானம் குடித்தால் மலையிலிருந்து குதிக்கலாம், குறிஞ்சிப் பூவை பார்க்கலாம். அடப்பாவி. பிராக்டீஸ் இல்லாமல் வெறும் பானத்தை மட்டும் குடித்து விட்டு குதித்தால் மெர்சல் தான். கோலாக்கள் உடம்புக்கு கெடுதல் என்று நிருபனமான பின், அதில் நடிக்கும் நடிகர்களே அதைக் குடிப்பதில்லை. நாம் மட்டும் குடிக்க வேண்டுமாம்.
     இவர்களின் ஒரே ஆயுதம், "சயிண்டிபிக் ஸ்டடியினால் நிருபிக்கப்பட்டது" என்பது தான். அது என்ன சயின்டிபிக் ஸ்டடி? அதாவது ஆராய்ச்சி செய்து ப்ரூவ் பண்ணியிருக்கிறார்கள். எப்படி இது சாத்தியம்? ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். அமெரிக்க புகையிலை சங்கத்தினர், ஒரு சயின்டிஸ்ட்டை ஃபுல் டைம் வேலைக்கு வைத்திருந்தார்கள். அவர் வேலையே சிகரெட் கெட்டது அல்ல, அதனால் உடம்புக்கு ஒன்னும் வராது என்று நிருபிப்பது தான். ஒரு உட்டாலக்கடி ஆராய்ச்சியை இங்கு சொல்கிறேன். சில பேரால் சிகரெட்டை டக்கென விட்டு விட முடியும், சில பேரால் முடியாது. அதற்கு அவர்கள் மரபணுவே காரணம். இதை காரணம் காட்டி அவர்கள் கோர்ட்டில் வைத்த வாதம், "சிகரெட்டை விட முடியாததற்கு நாங்கள் பொறுப்பல்ல, ஒருவரின் மரபணு கோளாறே காரணம்" என புத்திசாலித்தனமாகக் கூறி பல பில்லியன் நஷ்ட ஈட்டை தவிர்த்துக் கொண்டார்கள். சிகரெட்டே இல்லாமல் இருந்திருந்தால், அவன் முதலில் அதற்கு அடிமையாக இருந்திருக்கவே மாட்டான் என்ற வாதம் எடுபடவில்லை. உலகத்தில் நடக்கும் கமர்ஷியல் சயிண்டிபிக் ஸ்டடிகளின் இலட்சணம் இது தான். அவர்களுக்கு தேவையான ரிசல்டுக்காக ஆராய்ச்சியை தொடங்கி அவர்களுக்கு தேவையான முடிவு வருவது போலக் காட்டுவார்கள்.      
     இப்படித்தான் திலிப் காந்தி எனும் மகாராஷ்டிர எம்.பி சில மாதங்களுக்கு முன் "புகையிலையினால் கேன்சர் வரும் என்பதை இந்தியாவில் எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை" என்று திருவாய் மலர்ந்தார். பாராசிட்டமால் போட்டால் தலைவலி குறையும் என இந்திய ஸ்டடி இல்லை தான், அதற்காக எம்பிக்கு தலைவலி வந்தால் மாத்திரையை போடாமலா இருக்கிறார். புகையிலை கம்பெனிகளின் லாபி, பதவியில் இருப்பவர்களை எப்படி வேண்டுமானாலும் அவர்களுக்கு ஆதரவாக பேச வைக்கும்.       
      நேரு காலத்தில் நாம் ஏழையாக இருந்தாலும், ஓரளவு ஆரோக்கியத்துடன் இருந்தோம். விடிகாலையில் எழுந்து, வேப்பங்குச்சியால் பல் துலக்கி, பாத்திரம் எடுத்துப் போய் செக்கேடுத்த எண்ணை வாங்கி உடம்பில் தேய்த்து, ரிலாக்சாக சீகக்காய் கடலைமாவு தேய்த்து ஆற்றில் குளித்து, ஊரில் கிடைக்கும் காய்கறி பழங்களை வாங்கி, வீட்டில் அரைத்த மசாலா போட்டு சாப்பாடு செய்து, வியர்வை சிந்த விவசாய வேலை பார்த்து, வருடத்தில் 8 மாதங்கள் மட்டும் வேலைக்கு போய், வருடத்தில் சில நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே செய்த பலகாரங்கள் சாப்பிட்டு, புகை மாசு ஏசி இல்லாத உலகத்தில் வாழ்ந்து சீக்கிரமே உறங்கப் போய் ஆரோக்கியமாக வாழ்ந்தோம். நம் கலாச்சாரத்தின் மிக அருகில் வாழ்வை அமைத்துக் கொண்டோம். அதனால் தான் இன்னமும் நேருவை பலர் கொண்டாடுகிறார்கள்.

     மன்மோகன் திறந்து வைத்து வாஜ்பாய் மோடியால் வாழும் பண்டோராவின் பெட்டியான கேப்பிடலிசம், எல்லோரையும் பணக்காரர்கள் ஆக வலியுறுத்துகிறது. ஒரே மந்திரம், "காசு பணம் துட்டு மணி மணி". ஸ்டேடஸ் என்பது ஒவ்வொரு வீட்டிற்கும் தேவையாகி விட்டது. அவன் கார் வாங்கியிருக்கான், நாம வாங்கனும், பீட்சா சாப்பிடனும், சென்ட் அடிக்கணும், இதுக்கு நிறைய சம்பாதிக்கணும். தூக்கம் இல்லாமல் உழைத்து, எல்லா கெட்ட பழக்கங்களும் வந்து, எல்லா வசதிகளையும் விளம்பர மோகத்தில் வாங்கி, அதை அவசரமாக அனுபவித்து 45 வயதிலேயே பொட்டென மண்டையை போடும் வாழ்வை தான் கேப்பிடலிசம் நமக்கு தந்திருக்கிறது. ஒரு நிமிடம் நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள். உங்களுக்கு இதில் ஏதாவது ஒன்று இருக்கிறதா? நிம்மதி, மகிழ்ச்சி, ஆரோக்கியம், பாதுகாப்புணர்வு, திருப்தி, மன அமைதி, நீங்கள் நினைக்கும் வசதி. நம் அப்பா தாத்தாக்களை பற்றி யோசியுங்கள். அவர்களிடம் பணம் இல்லை, ஆனால் இவை இருந்தது. ஒரு முடிவில்லா பந்தயத்தில் மாட்டிய வாழ்வு நமது.   

No comments:

Post a Comment