Sunday, November 15, 2015

Episode-8
வியாதிகளை அழிப்போம் வாருங்கள்
நன்றி : குங்குமம் டாக்டர் 
     "V for Vendetta" படத்தை நீங்கள் பாத்திருக்கலாம். ஒரு வைரஸை உருவாக்கி, அதற்கு தடுப்பு மருந்தையும் கண்டுப்பிடித்து விடுவார்கள். பின் அந்த வைரஸை பல ஸ்கூல்களின் குடிநீர் தொட்டிகளில் கலந்து விடுவார்கள். அந்த நோய் பலரைத் தாக்கி ஆயிரக்கணக்கில் சாவார்கள். அரசாங்கத்தால் எதுவுமே செய்யமுடியாத நிலை. அப்போது, இந்தக் காரியத்தை செய்த புதுக் கட்சி, வேக்சின்களையும் மருந்துகளையும் மக்களிடம் கொடுத்து ஆட்சியைக் கைப்பற்றும். சில ஆண்டுகளில் உலக நாடுகளின் அரசியல் இப்படித் தான் இருக்கும். உயரிய தடுப்பு மருந்துகள் வைத்திருக்கும் நாடுகள் அசைக்க முடியாத வல்லரசுகளாக வருவதை யாராலும் தடுக்க முடியாது.   
     சில ஆண்டுகளுக்கு முன், வட இந்திய முஸ்லிம்களிடம், பாகிஸ்தான் ஒரு வதந்தியை கிளப்பி விட்டது. வேக்சின்கள் மலட்டுத்தன்மை உருவாக்குவதாக. அதை நம்பி போலியோ சொட்டு மருந்து போடாத குழந்தைகள் பலருக்கு போலியோ வந்தது. போலியோவை ஒழித்து விட்டோம் என மார் தட்டிய இந்தியாவிற்கு இது ஒரு பேரிடியாக இறங்கியது. போர் என்பது, எல்லையில் மட்டும் துப்பாக்கி வைத்துக்கொண்டு சண்டை போடுவதல்ல. கள்ள நோட்டு, மக்கள் மத்தியில் பயம் உண்டாக்குதல், சுகாதாரத்தைக் கெடுத்தல், ஷேர்  மார்க்கெட்டில் குளறுபடி செய்து பொருளாதாரத்தைப் பாதித்தல், போன்றவையுமே சில வைகயான யுத்தங்கள் தான்.    
     முற்காலத்திலேயே இந்தியாவிலும் சைனாவிலும் ஒரு பழக்கம் இருந்தது. பெரியம்மை புண்ணிலிருந்து வரும் நீரை தோலிலோ அல்லது மூக்கிலோ வைத்தால், அந்த வியாதி வராது என அப்பவே கண்டுபிடித்திருந்தார்கள். உண்மையாகவே போதி தர்மரும், சாதா தர்மரும் வாழ்ந்த நாடு போலிருக்கிறது நம் நாடு. முள்ளை முள்ளால் எடுக்கும் டெக்னிக் தான் தடுப்பு மருந்துகள். நம்மைத் தாக்கும் கிருமியின் செல்லில் இருக்கும் சில புரோட்டீன்களை எடுத்து சுத்தப்படுத்தினால் அது தான் வேக்சின். முழு கிருமி உள்ளே போனால் தான் ஆபத்து. ஒரே ஒரு புரோட்டீனை மட்டும் நம் உடலில் செலுத்தினால் போதும். "யார்ரா இவன், வெளி ஆளாய் இருக்கான். இவனைப் போட்டுதள்ளிட வேண்டியது தான்" என நம் நோய் எதிர்ப்பு சிஸ்டம் முடுக்கி விடப்படும். உடனே அந்த புரோட்டீனுக்கு எதிரான ஆண்டிபாடிகள் நமக்குள் உருவாகி விடும். பின்னால் எப்போதாவது இந்தக் கிருமிகளே நுழைந்தாலும் அந்த ஆண்டிபாடிகள், கிருமியை துவம்சம் செய்து விடும். இது தான் டெக்னிக். பார்த்திபன் ஸ்டைலில் சொன்னால் 'போட்டு வாங்குவது'. முன்பு வைரஸை கொன்று அதை வாக்சினாக மாற்றினார்கள். பின்னர் உயிருடன் உள்ள வைரஸின், டேஞ்சரான மேட்டர்களை எடுத்து விட்டு வாக்சினாகுவது என்று இருந்து, இப்பொழுது லேபிலேயே கிருமியின் புரோட்டீனை தயாரித்து தடுப்பு மருந்தாக்கும் முன்னேற்றம் வந்து விட்டது. அதாவது செத்த பாம்பு, பல் பிடுங்கப்பட்ட பாம்பு, விஷம் எடுத்த பாம்பு, அப்புறம் பொம்மைப் பாம்பு என்பது போல. 
     எட்வர்ட் ஜென்னர், சால்க் போன்ற மேதைகளால் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்துகள் பெரியம்மை, மற்றும் போலியோவிலிருந்து உலகத்தை மீட்டெடுத்தன. போலியோ வேக்சினை ஜோனாஸ் சால்க் கண்டுப்பிடித்த பின், அவர் வீட்டில் வீடியோ பேட்டி எடுக்கச் சென்றார்கள். அவர் மனைவி குழந்தைகள் பின்னணியில் விளையாட, அவர் பேட்டி எடுக்க வந்தவருடன் பேசிக் கொண்டிருப்பார்.
பேட்டி எடுப்பவர்: "மிஸ்டர் சால்க். எந்தக் கம்பெனியில் உங்கள் போலியோ வேக்சின் டெக்னாலஜியை ராயல்டிக்கு விற்கப் போகிறீர்கள்?"
சால்க்: "போலியோ பணக்காரனை மட்டுமல்ல. கடைநிலை ஏழையையும் பாதிக்கும் வியாதியாகும். அதனால் இதை நான் உலக மக்களுக்கு பேடன்ட் இல்லாமல் அளிக்கிறேன். அனைவரும் பயன் பெறட்டும்".
இன்றைய மதிப்பில் ஏழு பில்லியன் டாலர்களை 'வேண்டாம், மக்கள் பயன் பெறட்டும்' எனக் கூறிய மகாத்மா வாழ்ந்த பூமி இது.  
     இப்போது சார்ஸ், பன்றிக்காய்ச்சல், எபோலா போன்ற ஒரு உலகளாவிய நோய் (pandemic) வந்தால், அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மார்கெட்டுக்கு வர ஒன்பது மாதங்கள் ஆகிறது. தமிழ்ப் படத்தில், வில்லன் ருத்ர தாண்டவம் ஆடியபின், மீசையில்லா ஹீரோ அட்வைஸ் கொடுத்து அவனை திருத்தும் நேரத்தில் தான் போலீஸ் வரும். அப்படியில்லாமல் அமெரிக்க பெண்டகன் ஆராய்ச்சி நிலையத்தில், வைரஸ் பரவ ஆரம்பித்த ஒரு மாதத்தில், வேக்சினை உருவாக்கி சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்கள்.
     பாம்பு, ஸ்பைடர் விஷங்களிருந்து செய்யப்படும் வேக்சின்கள், பாம்புக் கடியிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கும். சென்னையிலிருந்து மிக அருகில் என விளம்பரப் படுத்தப்படும் ஏரியாக்களில் வீடு வாங்குபவர்களுக்கு இது அதி முக்கியத் தேவையாகும். சீக்கிரம் பலன் தரக்கூடிய ஆராய்ச்சிகள் சில. எய்ட்ஸ், மலேரியா, டிபி, போன்ற நம்மூர் வியாதிகளுக்கு தடுப்பு மருந்து மட்டும் வந்து விட்டால், நாமும் ஆப்பிரிக்காவும் அசைக்க முடியா வளரும் நாடுகள் ஆகி விடுவோம்.   
      பிற்காலத்தில், கிருமிகளால் வரக்கூடிய முக்கால்வாசி வியாதிகளுக்கு வேக்சின்கள் வந்து விடும். இப்பொழுது அதிகம் பேசப்படுவது பல பேரை பாதிக்கும் 'தொற்றா வியாதிகள்' தான். அல்ரெடி கர்ப்பவாய்ப் புற்று நோய்க்கு வேக்சின் உள்ளது. ஹெர்ப்பிஸ் எனும் வைரஸ் இந்த புற்றுநோயை வரவழைக்கிறது. அதை 70% வரை வரவிடாமல் தடுக்கும் வேக்சின் தான் இது. கொடுமையான ஞாபகமறதி வியாதியான அல்சைமர், மார்பக புற்றுநோய், பெருங்குடல் கேன்சர், ப்ராஸ்டேட் கேன்சர், சினிமாவில் கிழித்து தொங்க விடப்பட்ட பிரெய்ன் ட்யூமர் மற்றும் ப்ளட் கேன்சருக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. சென்ற அத்தியாயங்களில் நாம் பார்த்த முதல் வகை டயாபெடிஸ் வராமல் தடுக்கவும் முயற்சிகள் நடக்கின்றன. "கிங்" படத்தில் விக்ரமுக்கு இருக்கும் மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ்க்கும், புகைப்பழக்கம், போதைமருந்து உட்கொள்ளுதல் போன்றவற்றை பழகாமல் இருப்பதற்கும், அலர்ஜிகளுக்கும், வேக்சின்கள் வந்து விடும். இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால் பிரஷர் எனப்படும் ஹைப்பர்டென்ஷனுக்கும், உடற்பருமன் வராதிருக்கவும் 2020ம் வருடத்திற்குள் தடுப்பு மருந்துகள் வந்துவிடும் என எங்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறார்கள். 
     எந்தெந்த வியாதிகளுக்கு தடுப்பு மருந்துகள் எனப் பல ஆராய்ச்சிகள்  நடந்து வருவது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஊசிக்கு பதிலாக மூக்கு வழியாக உறியும் வேக்சின், தோல் வழியாக செலுத்தும் பட்டைகள், சொட்டு மருந்துகள் என கலக்குகிறார்கள். இப்பொழுது உள்ள முக்கால்வாசி தடுப்பு மருந்துகள், ஐஸ் பெட்டியில் இருந்தால் தான் வேலை செய்யும். ஐஸ் பெட்டியில் வைக்காமலே வேலை செய்யும் வேக்சின்களை கண்டுபிடிக்க டிரை பண்ணுகிறார்கள். பெரியம்மை உலகம் முழுவதிலும் இருந்து மறைய முக்கிய காரணம், அதனை எடுத்து செல்லவும், சேமிக்கவும் பிரிட்ஜ் தேவைப்படுவதில்லை என்பதால் தான்.
     பலவகை வேக்சின்கள், ஏழைகளுக்கு எட்டாக்கனியாக உள்ளன. அவற்றில் பல, அவர்களை அதிகமாக பாதிப்பவை. குறைவான விலையில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்பட்டு பரவலாக கிடைக்க வேண்டும். அதோடு ப்ரைவேட் மருத்துவமனைகளில் போடக்கூடிய டைபாய்டு, சின்னம்மை, மஞ்சள் காமாலை, Hib, ரோட்டாவைரஸ்  தடுப்பு மருந்துகள், அனைத்து குழந்தைகளுக்கும் இப்போது போடப்படும் வேக்சிங்களுடன் கட்டாயமாக  இலவசமாக அரசாங்க மருத்துவமனைகளில் போடப்பட வேண்டும்.   

     ஒரு காலத்தில் பல தொற்று வியாதிகள் இருந்தன. பிளேக், பெரியம்மை, காலரா போன்ற நோய்கள் வந்தால் கொத்துக் கொத்தாக மக்கள் சாவர். இப்பொழுது நிலைமை அப்படியல்ல. அப்படி ஒரு பாண்டெமிக் நோய் வந்தாலும் அதிகம் பேர் சாவதில்லை. எப்படியாவது கட்டுக்குள் வந்து விடுகிறது. அதற்குள் தடுப்பூசியும் வந்து விடுகிறது. பில்-மெலிண்டா கேட்ஸ் போன்ற புரவலர்கள் இதற்காக உழைப்பதும் ஒரு காரணம். ஒழிக்கவே முடியாத பேராசை, பொறாமை, அடுத்தவன் காலை வாரி விடுவது, அதிகார வெறி, பெண்ணாசை, நன்றி மறத்தல், சோம்பேறித்தனம் போன்ற சில வியாதிகளுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடித்தால் தேவலை. 

No comments:

Post a Comment