Thursday, April 21, 2016

Episode-23-உடலே மனமே கலங்காதே : ஓம் ஷாந்தி

தலைப்பு: உடலே மனமே கலங்காதே : ஓம் ஷாந்தி
     கடவுளுக்கும் மருத்துவத்திற்கும் சம்பந்தம் இருக்கிறதா? இயேசு, நபிகள், புத்தர் போன்றவர்கள் பல மக்களை குனமாக்கி பக்திக்கும் ஆரோக்கியத்திற்கும் பாலம் அமைத்தனர். சில வியாதிகளைப் போக்க பல புகழ்பெற்ற தர்காக்கள் உள்ளன. வேளாங்கண்ணி கோவிலுக்கு போனால், காணிக்கையாக உலோக மூக்கு, கண், கால்களை பலர் வழங்கியிருப்பதை பார்த்திருக்கலாம். வைத்தீஸ்வரன் கோவில் போய் குளத்தில் வெல்லத்தைக் கரைத்தால் தோல் நோய் சரியாகும், திருக்கருகாவூர், ராமேஸ்வரம் போனால் டெலிவரி நார்மலாக நடக்கும், விஷம் அருந்தினால், அதை முறிக்க, திருமருகல் செல்வது என அந்தக் காலத்திலேயே தமிழ்நாட்டு கோவில்கள் உடலை குணப்படுத்துவதற்காக பேர் போனவை. 
     இப்போதும் பல பேர் டாக்டரிடம் போகாமலே குணமாவதை பார்த்திருப்பீர்கள். "மாப்ள, வினை தீர்க்கும் விநாயகர் கோவிலுக்கு போ. போய் நல்லா சாமி கும்பிட்டு, வீபூதி வச்சுக்க. நாளைக்கே காய்ச்சல் சரியாயிடும்" என்ற அட்வைஸ்கள் மிகப் பிரபலம். பல முறை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்தவுடன் காய்ச்சல் சரியாகி விடும். அதற்குப் பின் அந்த பேஷன்டுக்கு அந்தக் கோவிலின் மேல் பக்தி முற்றி காவடி, அங்கப் பிரதக்ஷணம் என்று முன்னேறி, "மாப்ள. என்ன ஜூரமா? அந்த டாக்டர்ட்ட போவாத. வினை தீர்க்கும் விநாயகர் கோவிலுக்கு போ. நான் சொன்னேன்னு குருக்கள்ட்ட ஸ்பெஷல் வீபூதி வாங்கு. நாளைக்கே உனக்கு உடம்பு சரியாயிடும்" என்று அடுத்தவருக்கு கூறுவதில் வந்து நிற்கும்.
     சாமி கும்பிட்டால் சில வியாதிகள் சரியாகிறது. அது எப்படி என்பதை பற்றி மட்டும் இந்த எபிசோடில் பார்ப்போம். என் கிளினிக்கிற்கு வரும் பல பேஷன்ட்டுகளின் பிரஷர் அதிகமாக இருக்கும். நான் கேட்பேன் "ஏம்மா, போன தடவ என்ன பாக்கும் போது பிரஷர் கொஞ்சம் ஜாஸ்தியாயிருக்குனு சொன்னனா" வென்று. "ஆமா டாக்டர், கொஞ்சம் பார்டருக்கு மேல இருக்குனு சொன்னீங்க" என்று பதில் வந்தால், உடனே பிரஷர் மருந்து ஆரம்பித்து விடுவோம். ஆனால், "இல்ல டாக்டர், நான் செக் பண்ணிருக்கேன், நார்மல் தான்" என்றால், அதற்கு காரணம் டாக்டரைப் பார்த்தால் என்ன சொல்லுவாரோ என்ற பயத்தில் ஏறிய பிஷர் தான். "வெளிய கொஞ்சம் காத்தாட நல்லா மூச்சு விட்டுக்கிட்டே போயிட்டு அரை மணி நேரம் கழிச்சு வாங்கனு சொல்லுவேன்". அரை மணி கழிச்சு பாத்தா பிபி நார்மலா இருக்கும். நம் மனதின் பவர் அது. ஒருவரை அது ரத்தக் கொதிப்பு பேஷன்டும் ஆக்கலாம், நினைத்தால் நார்மலாகவும் ஆக்கலாம்.
     தியானம் பிரஷர் மற்றும் இதயத் துடிப்பு அளவு போன்றவற்றை குறைக்கிறது. மெலட்டோனின், செரட்டோனின் போன்ற ஹார்மோன் அளவுகளை கட்டுப்படுத்தி, நம் தூக்கத்தை சீராக்கி, கோபங்களை கட்டுப்படுத்கிறது. கடவுள் நம்பிக்கை, எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பிரஷரை குறைத்து,  இதயத்தையும் ஆரோக்கியமாக்குகிறது. அந்தக்காலத்தில் நம் நாட்டு அரசர்கள் ஆயிரக்கணக்கில் கோவில்கள் கட்டியிருக்கிறார்கள். அவை மக்களின் நிம்மதிக்காக மட்டுமில்லை, ஆரோக்கியத்திற்காகவும் தான். கோவில், சர்ச், மசூதிக்கு அடிக்கடி செல்பவர்கள், கோவிலுக்கே போகாதவர்களை விட ஏழு வருடங்கள் அதிகம் வாழ்வார்களாம். கோவிலுக்கு அதிகம் செல்லாமல் இருந்தாலும், கடவுள் நம்பிக்கை இருக்கும் மக்கள், நாத்திகர்களை விட அதிகம் வாழ்கிறார்கள் என மருத்துவ ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன. தி.க கட்சிக்காரர்கள் யோசிக்கவும்.
     கேன்சர் பேஷண்டுகளிள் வலியும் சோர்வும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு கம்மியாகவும், நாத்திகர்களுக்கு வலியும், சோர்வும் அதிகமாக இருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். கேன்சர் வந்தவர்கள் கடவுளை கும்பிட்டால், சீக்கிரம் குணமாவதாகவும், கடவுள் நம்பிக்கை இல்லா விட்டால், மெதுவாக குனமடைவதாகவும் ஆராய்ச்சிகள் சொல்லுகின்றன. மருத்துவர்கள், மருத்துவத்தைத் தாண்டியும், கடவுள் நம்பிக்கை பற்றி பேஷண்டுகளிடம் இதற்காகவே பேச வேண்டும். ஆர்த்ரைட்டிஸ் எனும் ஜாயிண்டுகளின் நோய் இருப்பவர்களுக்கு மருந்துகள் கொடுத்தால், ஆத்திகர்களுக்கு, நாத்திகர்களை விட சீக்கிரம் வலி குறைவதாக சொல்கிறார்கள். அதே போல் எதற்காவது ஆபரேஷன் செய்தால், ஆத்திகர்கள், சீக்கிரம் முன்னேற்றம் அடைகிறார்கள்.
     விபாசன புத்தமதத்தில் செய்யப்படும், "Mindfullness meditation" எனும் ஒரு வகை தியானத்தை செய்தால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு சுகர் குறைகிறது. மற்ற தியானங்கள், யோகா, சாமி கும்பிடுதல் ஆகிய பிரிவுகளில் இன்னும் ஆராய்ச்சிகள் அதிகம் செய்யப்படவில்லை. இறக்கும் போது டாக்டர்கள், தங்களிடம் கடவுள் நம்பிக்கையைப் பற்றி பேச வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். டாக்டர்கள் மருத்துவ அறிவைத் தாண்டி, நாம் இறந்த பின் என்னாவோம், ஆத்மா என்றால் என்ன, பூமியில் நம் கடமை என்ன போன்ற இறக்கும் தருவாயில் இருக்கும் பேஷண்டுகளிடம் பேச வேண்டியதும் முக்கியமே.
     "டாக்டர், எவ்ளோ வருஷமா எனக்கு இந்தப் பிரச்னை இருக்கு. யார் யாரையோ பாத்தும் கம்ப்ளீட்டா சரியாக மாட்டேங்குது, வாழ்க்கையே வெறுக்குது டாக்டர்" என்று கூறுகையில், அவருக்கு கடவுள் நம்பிக்கை இருக்குமானால், "இந்த சாமிய வேண்டிக்கிட்டு விபூதி வச்சுக்க. போன மாசம் உன்ன மாதிரியே கஷ்டப்படுற பேஷண்டுக்கிட்ட இதை சொன்னேன். இப்ப கொஞ்சம் நல்லாயிருக்கு" என டாக்டர்கள் சொல்லலாம். அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது தான் முக்கியம். அந்த நம்பிக்கை அவர்கள் வியாதியை முழுமையாக குணப்படுத்தாவிட்டாலும் சரி, அட்லீஸ்ட் பேஷன்ட் கொஞ்சம் மனம் உடையாமலாவது இருப்பார்.
     ஒரு ஆராய்ச்சியில், டாக்டரை பார்க்க செல்லும் பெஷன்ட்டுகளில், 60 முதல் 90 சதவிதத்தனர் ஸ்ட்ரெஸ் எனப்படும் மனச்சுமையால் வரும் உடல் வலி, தலை வலி, பிரஷர், சுகர், தூக்கமின்மை, அல்சர் போன்ற வியாதிகளுக்கே வருகிறார்கள். அதனால் ஸ்ட்ரெசை குறைக்கும் வழிகளான, தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி, ரெகுலராக சாமி கும்பிடுதல் போன்றவை இந்தப் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிக்கலாம்.   
     நம் உடம்பு முழுக்க முழுக்க சதை, ரத்தம், கெமிக்கல்களானானது அல்ல. நாம் முழுவதுமாக அதைப் பற்றி அறியவில்லை. காலில் முள் குத்தினால் அழும் பலர், அசால்டாக தீ மிதிப்பது எப்படி? ஏன் அவர்கள் வலியை உணர்வதில்லை? சாமி வந்து ஆடுவது, "ஸ்பிளிட் பெர்சனாலிட்டி" எனும் மன நோய் என சைக்கியாடிரிஸ்டுகள் வாதிடுகிறார்கள். ஒரு ஆராய்ச்சி கூட இது சம்பந்தமாக நடந்ததில்லை. நம் மனதுக்கும் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்பை அறியாமல், தனக்கு தெரியாதெல்லாம் பொய் என பலர் டாக்டர்கள் நினைக்கிறார்கள்.

     'அட சாமி கும்பிடரதுல, இவ்ளோ நல்லது இருக்கா. அப்ப டாக்டர் பீஸ் மிச்சம் டோய்' என கோவில் கோவிலா சுத்திக்கிட்டுருக்கக் கூடாது. டாக்டரைப் பார்த்து சிகிச்சைகள் செய்து கொண்டே கடவுள் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, மனமுருகிப் பிராத்தித்தால், சீக்கிரம் குணமாகி, ஏழு வருடங்கள் எக்ஸ்ட்ரா வாழலாம்.              

Episode-22-செவ்வாய் கிரக பயணமா? இதைப் படிங்க முதல்ல....

செவ்வாய் கிரக பயணமா? இதைப் படிங்க முதல்ல....
அதிகரித்துள்ள விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஸ்பேஸ் டூரிசம் போன்றவற்றால் ஒரு புதிய துறை உருவாகியிருக்கிறது. அதுவே ஸ்பேஸ் ஹெல்த். அதாவது பூமியை விட்டு வெளியில் வாழும் மனிதர்களுக்கான மருத்துவ பிரிவு. பூமியின் தட்ப வெப்ப நிலைகள், வேதித்தன்மை இவையே, இங்கு உயிர்கள் துளிர்க்க முக்கிய காரணம். நாம் பூமியைத் தவிர வேறு எங்கேயும் வாழ தகுதியில்லாதவர்கள். நிலா மற்றும் மார்ஸ் கிரகத்தில் குடியேற்றம் என கற்பனைகளின் சாத்தியங்களின் அளவுகள் கூடக்கூட இந்த மருத்துவ பிரிவு அசுர முன்னேற்றம் அடைகிறது.
டூரிஸ்ட்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ஸ்பேஸ் X' ராக்கெட்டில் உங்களுக்கு ஒரு இலவச டிக்கெட் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நிலாவில் உண்மையாகவே பாட்டி இருக்கிறாரா, அவர் சுடுவது மசால் வடையா, அல்லது ஆமை வடையா என்ற முக்கியமான ஆராய்ச்சிக்கு அங்கு செல்கிறீர்கள் அல்லது செவ்வாய் கிரகம் போய் சாமிக்கு படையல் போட்டால் தான் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகும் என உங்கள் ஜோசியர் சொன்னதால், நீங்கள் அங்கு போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். போய் வர 18 மாதங்கள் ஆகும். நீங்கள் ராக்கெட் ஏறியதும், அது கிளம்புகிறது. முதல் பத்து வினாடிக்குப் பின், அதிக புவி ஈர்ப்பு விசையால், உங்கள் ரத்தம் எல்லாம் கால்களுக்கு வந்து விடும். நீங்கள் நினைவிழுந்து விடுவீர்கள். அதைத் தடுக்க படுக்கை வாட்டில் அமரக்கூடிய சீட்கள் வேண்டும். பத்து நிமிடங்களுக்குப் பின் விண்வெளியை அடைந்த பின் என்னாகும்? புவி ஈர்ப்பு விசை திடீரென இல்லாததால், உங்கள் பேலன்ஸ் மெக்கானிசம் குழம்பி விடும். தலைச்சுற்றல் வாந்தி தான். வாந்தி எடுத்தால், அது அழகாக பந்து போல் மிதந்து பைலட்டின் முகத்தில் போய் முட்டும்.
இரண்டு நாட்களுக்குப் பின்? நம்ம ஊர் அரசு அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சில் ஒரு இரவு முழுக்க உட்கார்ந்தால், அடுத்த நாள் கால்கள் வீங்கி விடுகிறது இல்லையா? அதே போல் கிராவிட்டி இல்லாததால், ரத்தம் எல்லாம் தலைக்கு வந்து முகம் பந்து போல் வீங்கி விடும். அமுல் பேபி போல் கன்னங்கள் கொழுக் மொழுக் என ஆகி விடும். மூக்கடைப்பு வந்து தும்மித் தும்மி, அதுவும் அழகாக மிதந்து பைலட் மூஞ்சியில் போய் ஒட்டிக்கொள்ளும். மூன்றாவது வாரம்- அங்கே உங்களுக்கு என்ன வேலை இருக்கும். சும்மா வேடிக்கை பார்க்க வேண்டியது தான். நடக்க வேண்டிய அவசியம் இருக்காது. அப்படியே மிதக்க வேண்டியது தான். உருப்படியாக ஒரு வேலையும் செய்யாததால், நீங்கள் பச்ச முட்டை குடித்து, ஜிம்மிற்கு போய் முக்கி முனகி உருவாக்கிய தசைகளில் மூன்றில் ஒரு பங்கு கரைந்து கைப்புள்ள போல் ஆகி விடுவீர்கள். எலும்புகளுக்கு வேலை இல்லாததால், அவையும் கரைய ஆரம்பிக்கும். அதனால் விண்வெளியில் எக்சர்சைஸ் மிக அவசியம். அங்கு உள்ள ஜிம்மிற்கு பார்த்து செல்லவும். வேற்றுகிரகவாசிகள் செல்லும் ஜிம்முக்கு போய்விடப் போகிறீர்கள். உங்களை புரோட்டீன் ஷேக் என சாப்பிட்டு விடப்போகிறார்கள். ஜாக்கிரதை.   
வேலை இல்லாததாலும், விண்வெளிக்கு வந்திருக்கிறோம் என ஆனந்தத்தாலும் தூக்கம் வராது. மேலும் விண்கலம் பூமியை சுற்றினால், ஒரு நாளைக்கு பதினாறு முறை சூரியன் உதித்து மறையும். இதனால் உங்கள் உடம்பு குழம்பிப் போய், தூக்கம் வராமல் ஆகி விடும். அதனால் பிளைட் புக் செய்யும் போதே இருட்டான அறையாக பார்த்து புக் செய்யவும். ஜன்னல் பக்கத்தில் சீட் என ஜொள்ளு விட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். ஒரு வருடம்- அங்கு உள்ள காஸ்மிக் கதிர்கள் உங்கள் உடம்பை ஊடுருவிச் செல்வதால், பார்வை மங்க ஆரம்பிக்கும். கிராவிட்டி இல்லாததால், உங்கள் உடம்பில் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும். சாதாரண சளி கூட நிமோனியாவாக வாட்டி வதைக்கும். என்னடா, கிருமி எல்லாம் பூமில தான இருக்கு, இங்க எப்பிடி வரும்னு யோசனையா? நம் உடம்பில் 1 கிலோ அளவிற்கு நல்ல கிருமி இருக்கு பாஸு. அவை நம்மை ஒன்றும் செய்யாது. ஆனால் விண்வெளிக்கு போனால், அவையே நமக்கு வியாதியை கொண்டு வரும். ஆண்டிபயாட்டிக் போட்டால், இருக்கும் கொஞ்சம் நல்ல பாக்டீரியாக்களும் போய், சுத்தமாக எதிர்ப்பு சக்தி இல்லாமல் ஆகி விடும்.
ஒகே. கொஞ்சம் பெரிய டூராக புக் செய்து விட்டீர்கள். அல்லது 'சுந்தரா டிராவல்ஸ்' போல் டப்பா வண்டியை புக் செய்து விட்டீர்கள், அது ரிப்பேராகி ரெண்டு வருடம் அங்கேயே உங்களுக்கு டேரா போட வேண்டிய நிலை வந்து விட்டது. என்னாகும்? மன அழுத்தம் ஆரம்பிக்கும். காலாற நடக்க முடியலையே, டாஸ்மாக் இல்லையே, பக்கத்து வூட்டுக்காரன் நம்ம வீட்டை வித்துருப்பானோ, விண்வெளி ஜாலியா இருக்கும்னு வந்தா, என்னடா ஒரேயடியா போர் அடிக்குது எனப் பல காரணங்களால் டிப்ரெஷன் வந்து விடும். ஒரு சிலரின் மூஞ்சியையே தினமும் பார்த்துக் கொண்டிருப்பதும், ரயில் டாய்லட் போல் கப்பும், விரும்பிய சாப்பாடு கிடைக்காமல் இருப்பதும் இன்னும் சில காரணங்கள்.
சின்ன வயதில் பல பெண்களுக்கு ஏர் ஹோஸ்டசை பார்த்தால் ஏக்கமாக இருக்கும். இந்த மாதிரி பறந்து கொண்டே இருக்கக் கூடாதா என்று. கடைசியில் பார்த்தால், எச்சி பிளேட் எல்லாம் எடுக்க வேண்டியிருக்கும். ஏரோப்லேனில் வேலை என்றாலும் எச்சி ப்ளேட், எச்சி ப்ளேட் தானே. இப்போது பல வாண்டுகள் ஆஸ்ட்ரானட் ஆக வேண்டும், ராக்கெட் எஞ்சினியர் ஆக வேண்டும் என்கிறார்கள். ஒரு வருடம் ட்யூப் வழியாக சாப்பிட்டுக் கொண்டு, நாலு பேர் மூஞ்சியை மட்டும் பார்த்துக் கொண்டு, தூக்கம் இல்லாமல், நாற்றம் பிடுங்கும் கேபினில், கழிவு நீர் சுத்திகரித்த தண்ணீரில் பல் விளக்கி, அடைக்கப்பட்ட விண்கலத்தினுள் முடங்கிக் கிடக்க முடியுமா? போதாதற்கு வாந்தி, கண் வலி, டிப்ரெஷன் வேறு.
சரி. அங்கே இருக்கும் போது ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது? அவசரத்திற்கு போலி டாக்டர் கூட கிடைக்க மாட்டாரே? சிறிய லேப், முதலுதவி மருந்துகள், டெலிமெடிசின், ரோபாட்டிக் சர்ஜரி போன்றவை சீக்கிரம் சாத்தியமாகி விடும். 'இன்டர்ஸ்டெல்லார்' படத்தில், விண்கலத்தை ரிங் பால் போல் வடிவமைத்து, சுற்ற விட்டால், கிராவிட்டி கிடைக்கும் என காட்டியிருப்பார்கள். அது சாத்தியம் தான். ஆனால் விண்கலத்தின் அகலம் ஒரு கிமீ வரை இருந்தால் தான் நாலு பேர் அதில் தங்க முடியும். பிற்காலத்தில் சாத்தியமாகலாம்.
"டாக்டர்ஜி. தினசரி பிழைப்பே கஷ்டமாயிருக்கு, பக்கத்துல இருக்குற திருப்பதிக்கு டூர் போகவே வழியில்ல. இதுல ஸ்பேஸ் டூர் பத்தி தகவல் சொல்லி வெறியேத்துறீங்களே" என்கிறீர்களா?. அந்தக்காலத்தில் மாட்டு வண்டியில் போவதே ஒரு கவுரவமான சமாச்சாரம். பணம் படைத்தவர்களால் மட்டுமே முடியும். இப்போ கார், பைக், ப்ளைட் என அசால்டாக பறக்கிறோம். நாளை ஸ்பேஸ் டூரும் சாத்தியமே. விண்வெளி டூர் போகிறீர்கள் என்றால், என்னென்ன பிரச்சினைகள் வரும், அவற்றை தடுப்பது எப்படி என இந்த எபிசோடில் பார்த்தோம். விண்வெளி சென்று வந்த பின் நான் சொன்னதெல்லாம் உண்மையா, இந்தக் கட்டுரை உபயோகமாக இருந்ததா என ஒரு மெயிலோ, எஸ்.எம்,எஸ் ஸோ அனுப்பவும். உங்கள் ஆரோக்கியமே எங்கள் லட்சியம். வரும் போது கண்டிப்பாக நிலா பாட்டியிடம் நாலு வடை பார்சல் வாங்கி வரவும்.   

        

Episode-21-எமன் - கேன்சர் மட்டும் அல்ல, அக்கறையில்லா அரசும் தான்

எமன் - கேன்சர் மட்டும் அல்ல, அக்கறையில்லா அரசும் தான்  
     தமிழ் சினிமாவில் கேன்சரால் பாதிக்கப்பட்ட ஹீரோ அல்லது ஹீரோயின்களை செம காமெடியாக காட்டியிருப்பார்கள். பிரெயின் ட்யூமர் என்றால் பயங்கரமாக தலை வலி வரும். பிளட் கேன்சர் என்றால் இருமும் போது ரத்தம் வரும். கேன்சர் வந்தவர்கள் கண்டிப்பாக இறக்க வேண்டும். அப்போது தான் ஹீரோ இரண்டாம் நாயகியை கல்யாணம் செய்து கொள்ள முடியும். டாக்டர், "இவர் இன்னும் ஆறு மாசம் தான் உயிரோட இருப்பார்" என ஜோசியக்காரன் மாதிரி சொல்லுவார். கண்டிப்பாக டாக்டர் கண்ணாடி, வெள்ளை கோட் போட்டிருக்க வேண்டும். கேன்சர் வந்த பார்ட்டிகள், ட்ரீட்மென்ட் எடுக்காமல் கிராமத்திற்கு சென்று டூயட் பாடுவார்கள். இதுதான் கேன்சர் பற்றிய நம் புரிதல்.
     கேன்சர் என்று சொல்லும் போது, ஏதோ நமக்கு சம்பந்தம் இல்லாத வியாதி, இதெல்லாம் நமக்கு வராது என்று நினைக்க வேண்டாம். சர்க்கரை வியாதியைப் பற்றி 20 வருடங்களுக்கு முன் இப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தோம். பார்த்தால், பாதிப்பேருக்கு இந்த வியாதி இருக்கிறது. வேறு எந்த வியாதியையும் விட அதிக ஆராய்ச்சிகளும், மருந்து கண்டுபிடிப்புகளும் புற்றுநோய்க்கு அதிகம். கேன்சர் மருத்துவம், வருடத்திற்கு இரு மடங்கு வளர்கிறது, புதிய டயக்னோஸ்டிக் உத்திகளும், புதிய வைத்தியங்களும், தினமும் கண்டுபிடிக்கப்படுகின்றன.
     கேன்சர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருக்கிறது. ரோமானிய டாக்டர்கள் இதை பதிவு செய்திருக்கிறார்கள். ஒரு கட்டியை வெட்டி எறிந்த பின், அது  திரும்பவும் வந்தால், அது கேன்சர் என்று அறிந்திருந்தனர். கேலன் மற்றும் ஹிப்போகிரேட்ஸ் போன்ற மருத்துவ தந்தைகள், கேன்சர் வந்தால் 'பய பொழைக்கமாட்டான்' என்று கூறி வந்தனர். அந்தக்காலத்தில் அது உண்மையே. மக்களிடையே அந்த நம்பிக்கையும் பரவிவது. 21ம் நுற்றாண்டு வரை இந்த மனோபாவமே நீடிக்கிறது. அனஸ்தீசியா வந்த பின் நிறைய கேன்சர்கள் வெட்டி எடுக்கப்பட்டு உயிர்கள் காக்கப்பட்டன. அடுத்து ரேடியோதெரபி வந்தது. பல லட்சம் உயிர்களைக் காத்த மெத்தோடிரக்சேட் என்ற மருந்து தான் கீமோதெரபியாக முதலில் பயன்படுத்தப்பட்டது. இன்றளவும் பல மக்கள் பயன்படுத்தும் இந்த மருந்தை கண்டுபிடிக்க உதவியவர், எல்லப்பிரகாடா சுப்பாராவ் எனும் சுயநலமில்லா ஒரு இந்திய விஞ்சானி. மைக்ரோஸ்கோப் வந்த பின் தான் கேன்சர் கண்டுபிடிப்பு வேகம் எடுத்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மார்பக கேன்சர் வருவதால், அது பரவக்கூடிய நோய் என்று மக்கள் அந்தக் காலத்தில் பயந்திருக்கிறார்கள். அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி, ஹார்மோன் தெரபி என பல சிகிச்சைகள் இப்போது வந்து விட்டன. கேன்சரைக் கண்டுபிடிக்க, முன்னெல்லாம் ஆபரேஷன் செய்து கட்டியை எடுத்து டெஸ்ட் செய்து பார்ப்பார்கள். இன்று அல்ட்ராசவுண்ட், எம்ஆர்ஐ, பெட் சிடி, மினிமல் பயாப்சி என அதிக ஆபத்திலாமல் கண்டுபிடிக்க முடிகிறது.
     கேன்சர் எதனால் வருகிறது? ஏன் முன்ன விட இப்ப கேன்சர் ஜாஸ்தியாயிருக்கு? என்ற கேள்விகளுக்கு சரியான விடையில்லை. "இல்லபா முன்னாடி இந்திய ஜனத்தொகை முப்பது கோடி, இப்ப 130 கோடி. அதனால கேன்சர் நாலு மடங்கு அதிகமாயிருக்கு" என்ற வாதமும், "எல்லாம் லைப் ஸ்டைல் தம்பி" என்ற வாதமும் இருக்கின்றன. இவற்றை கொஞ்சம் ஓரம் வைத்து விட்டு, கேன்சரை கண்டுபிடித்தல் மற்றும் அதனை குணப்படுத்துதலின் பிற்காலத்தைப் பார்ப்போம்.
     அறுவை சிகிச்சைகள் முழு வெற்றிக்கு கியாரண்டி கிடையாது. கொஞ்சம் ஆபத்தானதும் கூட. கீமோதெரபியும் ரேடியோதெரபியும் பல பக்க விளைவுகள் உள்ளவை. ஒரு வீட்டை இடிக்க ஒரு புல்டோசர் இருந்தாலே போதும். ஆனால் கீமோதெரபியும் ரேடியோதெரபியும் வீட்டை இடிக்க பூகம்பத்தை ஏற்படுத்துவபை. வீட்டை இடிப்பது மட்டுமின்றி பக்கத்து வீடுகள், கோவில், பள்ளிகளையும் சேர்த்து இடிப்பது போல. இதைப் போன்ற பக்கவிளைவுகள் இல்லாமல் புதிதாய் கேன்சரை ஒழிப்பதற்காக இறங்கியிருப்பது தான் இம்யூனோதெரபி... கேன்சரின் லேட்டஸ்ட் மருத்துவ முன்னேற்றம்.   
     உடலின் எதிர்ப்பு சக்திகளை வைத்தே கேன்சரை துவம்சம் செய்வது தான் இந்த வைத்தியத்தின் ஸ்பெஷாலிட்டி. இதில் பல வகையுண்டு. அதில் ஒன்றை இப்போது பார்ப்போம். பிளட் கேன்சரில் ஒரு வகையான லிக்யூமியாவில் பல வகைகள் உண்டு. IL-2 எனும் கெமிக்கல், நம் உடலில் உற்பத்தியாகிறது. டிப்தீரியா எனும் பாக்டிரீயாவை அதனுடன் இணைத்து பேஷன்டுக்கு இன்ஜெக்ட் செய்ய வேண்டும். லிக்யூமியா கேன்சர் செல்கள் இதனை விழுங்கி விடும். அந்த செல்கள் டிப்தீரியா பாதித்து இறந்து விடும். நமக்கு ஒன்றும் ஆகாது. நாம் தான் தடுப்பூசி போட்டுள்ளோமே (முத்தடுப்பு ஊசி)!     
     இம்யூனோதெரபியில் இன்னொரு வகை, கேன்சர் தடுப்பூசிகள். சில வைரஸ்கள் கேன்சரை உருவாக்கும். அதற்கு எதிராக தடுப்பூசிகள் முன்பே வந்து விட்டன. மஞ்சள் காமாலை மற்றும் கர்பப்பை வாய் புற்றுநோய் கொண்டு வரும் ஹெர்பிஸ் வைரசுக்கு எதிராக. ஆனால் இம்யூனோதெரபி வழியாக தடுப்பு மருந்து என்பது வேறுபட்டது. கேன்சர் செல்கள், சில கெமிக்கல்களை உருவாக்கும். அந்த கெமிக்கல்களை ஒருவரிடமிருந்து எடுத்து, இன்னொருவருக்கு செலுத்துவது. இப்போது அவரின் எதிர்ப்பு சக்தி தூண்டிவிடப்பட்டு, அந்த கெமிக்கல்களுக்கு எதிராக, ஆண்ட்டிபாடிகளை உருவாக்கும். அவருக்கு அந்த குறிப்பிட்ட புற்றுநோய் வந்தால், அந்த ஆண்ட்டிபாடிகள், கேன்சர் செல்களை கொன்று விடும்.
     இன்னொரு இம்யூனோ வைத்தியத்தில் ஒரு மருந்தை வைத்து, கேன்சர் செல்லை தற்கொலைக்கு தூண்டுவது. தற்கொலை செய்ய வைக்கும் ஜீன்கள் எல்லா செல்களிடமும் உண்டு. அந்த குறிப்பிட்ட ஜீனை, கேன்சர் செல்லில் தூண்டினால், கேன்சர் செல் இறந்து விடும். அதே போல், நமது சொந்த எதிர்ப்பு சக்தி செல்களை தூண்டுவது. அப்போது நம் செல்களே கேன்சர் செல்களை அழித்து விடும். இந்த இம்யூனோதெரபியை இப்போது மற்ற தெரபிகளுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர்.
     அமெரிக்காவில் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, வருடம் ஒருமுறை மார்பக பரிசோதனையும், மேமோகிராமும் செய்ய வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்துகிறது. மார்பக புற்றுநோயை தடுக்க மிகப்பெரிய அளவில் இந்தப் பரிசோதனை பற்றி அனைத்து மக்களும் அறிய விளம்பரங்களும் பிரச்சாரங்களும் நடக்கின்றன. 50 வயது ஆன அனைவரும், 5 வருடங்களுக்கு ஒருமுறை பெருங்குடல் புற்றுநோய்க்கான கொலனோஸ்கோபி செய்ய வேண்டும். 21வயது முதல் ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை பெண்களுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான "பாப் ஸ்மியர்" எனும் ஒரு சிறிய செலவில்லா டெஸ்ட்டை செய்கிறார்கள். பல வருடங்களாக 50  வயது ஆன ஆண்களுக்கு ப்ராஸ்டேட் சுரப்பிக்கான கேன்சரை டெஸ்டுகள் மூலம் பரிசோதிக்க PSA எனும் டெஸ்ட்டை ரெகுலராக செய்து வந்திருக்கிறார்கள்.     
     நம் அரசாங்கங்கள் என்ன செய்கின்றன? நம் பிரதமர் நாட்டில் உள்ள ஒரு ஊருக்கு ஒரு கட்டிடத்தை திறந்து வைக்க வந்தால் என்னென்ன செலவுகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம். ஏரோப்ளேன் பெட்ரோல் செலவு, பைலட் சம்பளம், அவருடன் வரும் முக்கியஸ்தர்கள் தங்க மற்றும் சாப்பாட்டு செலவு, பிரதமரின் கான்வாய், அதாவது அவருடைய கார்கள் இன்னொரு ஏரோப்ளேனில் வந்து இறங்க வேண்டும், அவற்றின் பெட்ரோல், அடிப்பொடிகள் பேனர் ஓட்டும் செலவு, ஊர்காவல் படையை கொண்டு பந்தோபஸ்து என அவரால் திறக்கப்படும் ஒரு கட்டிடத்தை விட அதிக பணம் இப்படி தேவையில்லாமல் வீணாகிறது. அதை வைத்து அந்த நகரத்தில் உள்ள மேலே சொன்ன வயதுள்ளவர்களுக்கு ஒரு வருடத்திற்குண்டான டெஸ்டுகளை செய்யலாம்.
     அமெரிக்காவில் ஒரு நாலாங்கிளாஸ் பையனை நடு இரவில் தட்டி எழுப்பி கேன்சர் பற்றிக் கேட்டால், 'அப்படி என்றால் என்ன, எந்தெந்த வயதில் என்னென்ன டெஸ்ட் செய்ய வேண்டும்' என மனப்பாடமாக ஒப்பிப்பான். நம் ஊரில்? பஞ்ச் டயலாக்கும், டங்காமாரி பாட்டும் சொல்லுவான். பாடத்திட்டத்தில், கேன்சர் விழிப்புணர்வு, எந்தெந்த வயதில் என்னென்ன டெஸ்ட் எடுக்க வேண்டும், கேன்சரை சீக்கிரமாய் கண்டுபிடிப்பதன் பலன்கள் போன்றவற்றை கொண்டு வர வேண்டும். எல்லாரும் இலவசமாய் டெஸ்ட் செய்ய ஏற்ற வகையில் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளுக்கும் டெஸ்ட் செய்ய பணம் தர வேண்டும். பிரமாண்டமான அளவில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்ய வேண்டும். ரேஷன் கார்டு, கேஸ் கனெக்ஷன் புதுப்பித்தல், முதியோர் பென்ஷன், பி.பி.எஃப் போன்ற அரசின் எல்லா திட்டங்களிலும், ஒழுங்காக அந்தந்த வயதில் கேன்சர் ஸ்கிரீனிங் செய்தால் மட்டுமே இந்த திட்டங்களில் பலன் பெற முடியும் எனக் கூற வேண்டும்.
     வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி நாம் சம்பாதிக்கும் பணத்தை என்ன செய்கிறோம்? 27 ருபாய் பெறுமானம் உள்ள ஒரு லிட்டர் பெட்ரோலை, வரி விதித்து 60 ஆக வைத்திருக்கிறது இந்த அரசு. உண்மையான விலையில் பெட்ரோலை விற்றால் விலைவாசி பாதியாக குறைந்து விடும். இந்த வரிப்பணத்தை மினிஸ்டர் முதல் பியூன் வரை கொள்ளை அடிக்கிறார்கள். எங்கள் பணத்தை சுவிஸ் வங்கியில் வைத்து விளையாடுங்கள். ஆனால் அதில் கொஞ்சமாவது எங்களுக்கு வரும் கேன்சரை கண்டுபிடிக்க உதவுங்கள். நாங்களும் நிறைய நாள் உயிருடன் இருந்து உங்களுக்கு உழைத்து கொட்டுகிறோம்.     



Episode-20-எல்லைகள் இல்லா மருத்துவம் - அச்சமில்லா அரசியல்

தலைப்பு: எல்லைகள் இல்லா மருத்துவம் - அச்சமில்லா அரசியல்
     எல்லோருக்கும் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற மனப்பாண்மை வந்து விடாது. பணம் இருந்தாலும் மணம் வேண்டும். 350 கோடிக்கு மும்பையில் சொகுசு பங்களா வாங்கும் முகேஷ் அம்பாணி எங்கே? வாழ்நாள் மொத்தமும் ஒரு மலையை குடைந்து கிராம மக்களுக்காக ரோடு போட்ட ஏழை தசரத் மஞ்சி எங்கே? 'சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம்' என்று சக நாட்டுக்காரனுக்காக பிரெஞ்சு புரட்சியின் போது முழங்கிய அனைவரும் ஏழைக் குடியானவர்களே. இதைப் போன்ற ஒரு பிரெஞ்சு  சிந்தனையில் உதித்தது தான் "Doctors without borders/ Medicins sans Frontieres (MSF)". மருத்துவ வசதி என்பது இனம், மொழி, அரசியல் சார்பு, நாடு என்ற வகையில் வேறுபட்டிருந்தாலும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இது உருவாக்கப்பட்டது.
     44 வருடங்களாக உலகம் முழுக்க பரவியிருக்கும் இந்த ஸ்தாபனம், 2015ல் மட்டும் 30,000 டாக்டர்கள், நர்சுகள் மற்றும் களப்பனியாளர்களுடன் 70 நாடுகளில் அத்தியாவசிய மருத்துவ சேவைகளை தந்து கொண்டிருக்கிறது. மருத்துவ சேவை என்றால் சும்மா மருத்துவ முகாம் நடத்திவிட்டு போவது இல்லை. போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட, போர் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில், இவர்கள் சேவை இருக்கிறது. சமீபத்தில் கூட ஆப்கனில் இவர்கள் மருத்துவமனையில் அமெரிக்காவின் படைகள் குண்டு போட்டதால், இங்கு வேலை பார்த்த 15 பேர் இறந்திருக்கிறார்கள். அத்தகைய ஆபத்தான சூழ்நிலையில் பணியாற்றும் இவர்கள் தான் எங்களின் கடவுள்கள்.
     பொது நலனுக்கு எதிராக சக்திகள் வேலை செய்யும் போது அதை சகிக்க முடியாமல் குரல் கொடுப்பதால் தான் தலைவர்கள் உருவாகிறார்கள். மார்டின் லூதர் கிங், காந்தி, லூதர் கிங் ஜூனியர், பெரியார், எம்ஜியார், ஜெயப்பிரகாஷ் நாராயண் அதற்கு உதாரணம். நைஜீரிய உள்நாட்டு கலகத்தின் போது ரெட் கிராஸ் வெறும் மருத்துவ சேவையை மட்டும் அளித்தது. அங்கு நடக்கும் கொடுமைகளை மௌனப் பார்வையாளராக மட்டுமே இருந்தது. அதை சகிக்க முடியாத ஒரு டாக்டர், ரெட் கிராசிலிருந்து பிரிந்து இந்த அமைப்பை உருவாக்கினார். அவர்களின் முதல் களமே நமது பங்களாதேஷ் தான். 'போலா' புயலில் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர். டாகடர்களை வேலைக்கமர்த்தி மக்கள் சேவையில் ஈடுபட்டனர்.
     எங்கெல்லாம் போர் நடக்கிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு மருத்துவ சேவையில் ஈடுபடுகிறது இந்த அமைப்பு. வியட்னாம் போர், கம்போடிய கைமர் ரூஜின் வெறியாட்டம், சூடான், லைபீரியா, சோமாலியா, போஸ்னியா, ருவாண்டா, கொசோவோ, செசன்யா, ஹைட்டி, காஷ்மீர் என பூமியின் போர்க்களங்களில் முக்கிய பங்காற்றுகிறது இந்த அமைப்பு. ரெட் கிராஸ் போல் மௌன சாமியாராக இல்லாமல், அங்கு நடக்கும் கொடுமைகளை அவ்வப்போது உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது. லெபனான் உள்நாட்டு யுத்தத்தில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் அடித்துக்கொள்ள, இரண்டு தரப்பில் காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சையளித்து தன்  நடுநிலையை MSF நிருபித்தது.
     இப்போது குறைந்த விலையில் முக்கிய மருந்துகள் எனும் போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். அமேரிக்கா பல உயிர் காக்கும் முக்கிய மருந்துகளை ஏழைகளின் கைகளுக்கு எட்டா விலையில் விற்கிறது. இந்த மருந்துகளை குறைந்த செலவில் யார் தருவார்கள் என்ற தேடலில் இருந்த MSF இந்திய மருந்து நிறுவனங்களிடம் வந்து நின்றது. ஆயிரம் மடங்கு குறைந்த விலையில் இந்தியாவில் தான் மருந்துகள் கிடைக்கும். இதற்கு சுப்ரீம் கோர்ட்டின் பெரும் பங்கு இருக்கிறது. இப்போது MSF இந்தியாவில் கிடைக்கும் மருந்துகள் மூலம் 60 நாடுகளின் ஏழைகள் உயிர் வாழ உதவுகிறது.
        ஆப்கனில் தாலிபான்கள் இவர்களின் ஐந்து பேரை கொன்ற போது அங்கிருந்து வெளியேறியது. ஆனாலும் உதவி தேவைப்படும் மக்கள் இருக்கும் வரை அங்கெ இருப்பது தான் இவர்களின் நோக்கம். சில ஆண்டுகளிலேயே மீண்டும் அங்கு சென்ற MSF, இரண்டு கேம்ப்களை நிறுவியது. ஒன்று ஆப்கன் ராணுவத்தின் கண்ட்ரோலில் உள்ள ஊரிலும், இன்னொன்று தாலிபான் ஆதிக்கத்தில் உள்ள ஊரிலும். கலைஞரின் புகழ்பெற்ற "என்னை தூக்கி கடலில் போட்டாலும், கட்டுமரமாய் நின்று உன்னைக் காப்பேன்" எனும் வசனம் இவர்களுக்கு மிகப் பொருத்தமாய் தோன்றுகிறது.
     ஆபத்தான பணியிடங்களில் உதவி செய்யும் போது தான் புதிய உத்திகள் பிறக்கிறது. கினியாவில் காசநோய் தலைவிரித்தாடியது. சதுப்பு நிலங்களும், முதலைகளும் நிறைந்த இடத்தில் ஆட்களை அனுப்பி டெஸ்ட் செய்வது மிக ஆபத்தானது. இந்நிலையில் ஆளில்லா சிறிய விமானங்களை கிராமங்களுக்கு அனுப்பி, டெஸ்ட் சாம்பிள்களை மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியை கண்டுபிடித்தனர். குக்கிராமங்களில் மருத்துவ வசதி கிடைக்க டெலி கான்பரன்சிங் முறையும் ஆரம்பித்தனர். இதைப் போன்ற பல புதிய உத்திகள் மக்களுக்கு கிடைக்க வழி செய்தனர்.
                ஸ்டுடியோவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு, 'நீயா நானா' கோபிநாத்தும், அமீர்கானும் எங்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்க, சொற்ப சம்பளத்தில் போர் பூமிகளில் இதைப் போன்ற சேவைகளில் பல டாக்டர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். பூமியின் மதங்கள், நாடுகள், போர் வீரர்கள், சாமானியர்களை அழித்துக் கொண்டிருக்க, சேவையை மட்டுமே ஆயுதமாக வைத்திருக்கும் MSF டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள், தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் உலக மக்களைக் காக்கிறார்கள்.
                வாயைத் திறந்து பேசினால் கைது, பொய் கேஸ் என்பதால் பேசவே பயப்படுகிறோம் நாம். கண் முன்னே நடக்கும் கலவரங்களை உலகிற்கு தெரியப்படுத்தினால் தான் தீர்வு கிடைக்கும் என்பதால், தம் உயிரையும் பொருட்படுத்தாமல் அங்கு நடக்கும் அட்டூழியங்களை உலகிற்கு MSF கூறிய தருணங்கள் நிறைய. கம்யூனிசத்தின் பெயரால் கம்போடியர் நடத்திய கொலைகள், தர்ஃபூரில் அரசாங்கமே நடத்திய இன ஒழிப்பு போன்றவற்றை MSF அங்கிருந்தபடியே உரத்து சொன்னதால் தான் உலகம் தலையிட்டு பல லட்சம் உயிர்கள் காக்கப்பட்டன.

     இதைப் போன்ற அமைப்புகள் தான் எங்களின் கட்சிகள், ஏழை மக்களுக்கு மருத்துவ சேவை தான் எங்கள் கொள்கை, கொன்றாலும் பரவாயில்லை என்று ஏதோ ஒரு பெயர் தெரியா நாட்டின் மக்களைக் காப்பதற்காக குரல் கொடுப்பதே எங்கள் அரசியல். அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே. 

Episode-19-உயிர்களைக் காக்கும் வருங்கால அவசர சிகிச்சைகள்

தலைப்பு: உயிர்களைக் காக்கும் வருங்கால அவசர சிகிச்சைகள்
                இன்றைய உலகில் அதிகமாக மக்களைக் கொல்லும் வியாதி எது? ஹார்ட் அட்டாக், கேன்சர் என பல லைஃப் ஸ்டைல் வியாதிகள் முன்னணியில் இருந்தாலும், ரோடுகளில் விபத்தினால் இறப்பது மிக அதிக அளவாகும். ஒருவருக்கு காயம் எந்த அளவு என்பதை விட எங்கே, எப்போது விபத்தில் சிக்குகிறார் என்பதே அவரின் வாழ்வையோ சாவையா தீர்மானிக்கிறது. அண்ணா சாலையில் ஒருவருக்கு பெரிய விபத்தாகி இதயத்துள் பெரிய கம்பி புகுந்திருக்கிறது. அதே வேளையில் ஊட்டி அருகே மஞ்சூரில் ஒருவர் விபத்தில் சிக்கி கை துண்டாகிறது. இந்த இருவரில் யாருக்கு பிழைக்கும் வாய்ப்பு அதிகம்? சென்னை வாசிக்கு தான். உலகத்தர சிகிச்சைகள் அருகில் கிடைத்தாலன்றி விபத்தில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவே.
                விபத்து நடந்த பின் இருக்கும் முதல் சிறு மணித்துளிகளை 'கோல்டன் ஹவர்' என்கிறோம். மருத்துவமனைக்கு செல்லும் முன், இந்த டயத்தில் என்ன நடக்கிறது என்பதே முக்கியம். பலர் சாவதற்கு, விபத்து நடந்த பின் மருத்துவமணைக்கு செல்ல தாமதம் ஆவதும், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் தகுந்த சிகிச்சையும் கிடைக்காததும் முக்கிய காரணிகள்.
                உலகிலேயே மிகவும் சிறந்த போர்ப்படை, அமெரிக்காவின் நேவி சீல்ஸ் ஆகும். அதிரடிக்கு பெயர் போன இவர்கள் போர்க்களத்தில் செய்யும் சாகசங்கள் ஈடினையற்றவை. ஆபத்தான ஆபரேஷன்களை மேற்கொள்ளும் இவர்களுக்கு, போரில் ஏற்படும் காயங்களை, அதிநவீன டெக்னாலஜியுடன் அவர்களே எதிர்கொள்கிறார்கள். காயம் ஏற்பட்ட பின், அவர்களே மருத்துவரின் உதவி இல்லாமல், உடனடியாக TXA எனும் ஊசியைப் போட்டு ரத்தம் கசிவதை நிறுத்துகிறார்கள். ஆக்சிடென்ட் மற்றும் போர்க்காயங்களில் அதிக இறப்புகள் ஏற்படுவது ரத்த இழப்பால் தான். வயிற்றில் ஏற்படும் காயங்களுக்கு ஆர்சினல் ஃபோம் என்ற சொல்லுஷனை ஏற்றுகிறார்கள். அது பஞ்சு தலையணை போல் உப்பி, வயிற்றில் ரத்தம் கசியும் இடத்தை அடைக்கிறது. ஹெக்ச்டன்ட் என்ற மருந்து உடலில் உள்ள நீரை அதிகரிக்கச் செய்யும். அதை இன்ஜெக்ட் செய்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அளவு குறையாமல் பார்த்துக் கொள்கிறது.
                ஒரு விஷயம் யோசியுங்கள். ஒரு மேஜர் சர்ஜரியின் போது வயிற்றைக் கிழித்து என்னனவோ செய்கிறார்கள். அப்போது உயிர் போவதில்லையே? ஏன் வயிற்றைக் கிழிப்பது போன்ற ஆக்சிடென்ட் ஆனால் மட்டும் உயிர் போகிறது? ஏனென்றால் ஆபரேஷன் ஒரு கண்ட்ரோல்ட் என்விரான்மெண்ட்டில் நடக்கிறது. விபத்து, நாம் கண்ட்ரோல் செய்யக்கூடிய விதத்தில் நடப்பதில்லை. எதையும் எதிர்ப்பார்த்து, டெக்னாலஜியின் துணையுடன், ஆக்சிடென்ட் டயத்தில் இந்த டெக்னாலஜிக்களை எப்படி பயன்படுத்த வேண்டும் எனத் தெரிந்தால் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் தரப்படும் அல்லது புதுப்பிக்கப் பட முடியும் என சட்டம் கொண்டுவர வேண்டும். எல்லா கார்களிலும் இந்த அடிப்படை மருந்துகள் இருக்க வேண்டும். ஒருவருக்கு ஆக்சிடென்ட் நடந்தால், பின்னால் காரில் வருபவர் கண்டிப்பாக நிறுத்தி, மருத்துவமனைக்கு தகவல் சொல்லி, அவர் காரிலிருக்கும் இந்த மருத்துவ கிட் கொண்டு முடிந்தவரை விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற முயல வேண்டும் என்பதை சட்டமாக்க வேண்டும். வேடிக்கை பார்த்துக்கொண்டு போவோரின் நம்பரை சிசி டிவி கேமராவில் பதிவு செய்து, அவர்களை கோர்ட்டில் பதில் சொல்ல வைக்க வேண்டும். உதவி செய்தவருக்கு லட்சக்கணக்கில் பரிசு வழங்கி, இன்கம் டேக்ஸ் போன்றவற்றில் சலுகை தர வேண்டும். யோசித்துப் பாருங்கள். உங்கள் முன் ஒருவர் காரோட்டி ஆக்சிடன்ட் ஆகி விட்டால், நீங்கள் நிறுத்தி, எமெர்ஜென்சிக்கு போன் செய்து, உங்களுக்கு லைசென்ஸ் எடுக்கும் பொது சொல்லிக் கொடுத்த முதலுதவிகளை அவருக்கு செய்து, ஆம்புலன்ஸ் வரும் வரை நின்று அவரை அனுப்புவீர்கள். வீட்டிற்கு போனவுடன் ஒரு பாராட்டு பத்திரமும், டேக்ஸ் விதிவிலக்கும், ஐந்து லட்சம் பணமும் உங்களுக்கு வந்திருக்கும். உயிர் பிழைத்தவரின் குடும்பத்தின் நன்றிகளும் சேர்த்து.         
     ஆம்புலன்ஸ் எப்படி இருக்கும்? அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள முக்கால்வாசி வசதிகள், ஆம்புலன்சிலேயே இருக்கும். இரண்டு பாராமெடிக் டெக்னிஷியன்கள் இருப்பார்கள். பேஷன்ட்டை வண்டியில் ஏற்றிய பின்னர், ஒருவர் ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவது, குளுக்கோஸ் ஏற்றுவது, போன்ற அவசர சிகிச்சைகளையளிக்க, இன்னொருவர், விபத்தில் சிக்கியவரின் பல்ஸ், பிரஷர், ரத்த இழப்பு அளவு, சுவாசம் போன்றவற்றை மருத்துவமனையில் எமெர்ஜென்சி பிரிவில் உள்ள டாக்டரிடம் போனில் கூறிக்கொண்டிருப்பார். அங்கு நடக்கும் எல்லாமும் லைவாக மருத்துவமனையில் டாக்டரின் ஸ்க்ரீனில் வீடியோவாக ஓடிக்கொண்டிருக்கும். டாக்டர் அதற்கேற்ப மருத்துவமனையில் இந்த பேஷன்ட்டுக்காக உபகரணங்களும், மருத்துவ ஊழியர்களும் ரெடியாக இருக்க வைப்பார். இது போன்ற கம்யூனிகேஷன்கள் தாம் ஒருவரின் வாழ்வையோ சாவையா தீர்மானிப்பதாகும். அதுமட்டுமில்லாமல், அந்த பேஷன்ட்டுக்கு ஆம்புலன்சில் செய்ய வேண்டிய அவசர சிகிச்சைகளை வீடியோவில் சொல்லிக்கொண்டே இருப்பார். அதற்கேற்றவாறு டெக்னிஷியனும் சிகிச்சை அளிப்பார். டிரைவர் இல்லாமல் ஒடும் ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்திற்கு சீக்கிரமாகவும், பேஷன்ட்டை மருத்துவமனைக்கு வேகமாகவும் எடுத்துச் செல்லும்.  
                பேஷன்ட் உள்ளே நுழைந்தவுடன், ஒரு கருவியில் அவரது கைரேகை வைக்கப்படும். அவரின் பெயர், அட்ரஸ், குடும்ப உறுப்பினர்களின் போன் நம்பர், அவரது மருத்துவ ரெக்கார்டுகள் அனைத்தும் கம்ப்யூட்டரில் தெரியும். உடனடியாக ரிஷப்ஷனிஸ்ட், அவரின் வீட்டிற்கு போன் செய்து விபத்து பற்றி தெரிவிப்பார்.
                எமர்ஜென்சி பிரிவில், மரண பயத்தைத் தரும் பெரிய வெயிட்டிங் ஹால், எக்கச்சக்கமான கூட்டம் போன்றவை இல்லாமல், சிறிய ஹால்கள் இருக்கும். உடனடியாக ஒரு நர்ஸ் வந்து பேஷன்ட்டைப் பார்த்து உயிர் போகும் அளவு அவசரம், அவசரம், அவசரமில்லை என்று பிரித்து தகுந்த பிரிவுக்கு அனுப்புவார். மருத்துவமனையின் டாக்டர்கள், நர்ஸ்களின் செல்போனில் முக்கிய ஆப் ஒன்று இருக்கும். அதன் வழியாக பேஷன்ட்டின் 'வைட்டல்ஸ்' எனப்படும் பல்ஸ், ரத்த ஆக்சிஜன் அளவு, சுவாச அளவு போன்றவை வந்து கொண்டே இருக்கும். ஒரு சிறிய கருவியை ஓட்ட வைப்பதன் மூலம், தேவையான அனைத்து டெஸ்டுகளையும் ரத்தத்தை உறிஞ்சி அதுவே செய்து ரிப்போர்ட்டை நர்சின் கம்ப்யூட்டருக்கு அனுப்பி விடும்.
                இதைப் போன்ற மருத்துவ வசதிகள் வந்தாலும், டிஸ்சார்ஜ் ஆன பின் பேஷன்ட்டுகள் பல மாதங்களுக்கு விபத்து ஏற்படுத்திய பயத்திலிருந்து விலகாமல் இருப்பர். காலம் முழுக்க ஒரு காரிலோ அல்லது பஸ்ஸிலோ ஏற தைரியம் இல்லாமல் அவதிப்படுவர். இதை குறைப்பதற்கு விபத்து நடந்ததையே மறக்க வைக்கும் மருந்துகளும் மருத்துவங்களும் வந்து விடும். நம் எல்லாரையும் போல் அவரும் இயல்பாக இருக்க இது வழி வகை செய்யும்.
      

     

Episode-18-பேய், ரத்தக் காட்டேரி, பூதம், பிசாசு-இவற்றில் நல்லது எது?

தலைப்பு: பேய், ரத்தக் காட்டேரி, பூதம், பிசாசு-இவற்றில் நல்லது எது?
     பாச்ச உருண்டை இல்லாத வீடுகளே இல்லை எனலாம். பூச்சிகளிடமிருந்து துணிகளை காப்பதற்கு இதைப் பயன் படுத்துகிறோம். இது கரைந்து, அதன் ஆவியை இழுப்பதின் மூலம் எலிகளுக்கு கேன்சர் அல்லது ரத்தசோகை வரும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கின்றனர். செடார் மரப்பட்டைகளை (தேவதாரு) இதற்கு பதிலாக பயன்படுத்தலாம் என்கிறார்கள். பாச்ச உருண்டை பூச்சிகளுக்கு மட்டுமில்லை, நமக்கும் வேட்டு வைக்கிறது.
     அதே போல், பிளைவுட் இல்லாத வீடுகளும் இல்லை. மூன்று விதமான பிளைவுட் இருக்கின்றன. இதில் மிக மெல்லிய சீட்டுகள், ஃபார்மால்டிஹைடை உமிழ்கிறதாம். கெட்டியான ஷீட்களிலும் இவை இருக்கின்றன. மரத்தூளை ஓட்டுவதற்கு கோந்தாக இது பயன்படுகிறது. இந்தியா போன்ற வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில் வீட்டிற்குள் அதிகமான அளவு இந்த கெமிக்கல்கள் ரிலீஸ் ஆகிறது. இதனாலும் கேன்சர் வரலாம். செலவு அதிகமானாலும் முடிந்தவரை மரமோ அல்லது உலோகத்தால் ஆன பொருட்களையே வாங்கவும். அல்லது low emitting பிளைவுட்டா எனப் பார்த்து வாங்கவும். ஒரு நல்ல சேதி என்னவென்றால், பர்னிச்சர் பழசானால், இந்த உமிழ்தல் குறையுமாம்.
     தரையில் விரிக்கப்படும் கார்பெட் மற்றும் ஷீட்களில், விரித்தவுடன், முதல் சில நாட்களுக்கு கெமிக்கல்கள் ஆவியாகி மேலே வருமாம். கார்பெட் வாங்கியவுடன், கடையிலேயே சில நாள் அதை விரித்து வைக்கச் சொல்லிவிட்டு பின்னர் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். வீட்டிற்கு பெயின்ட் அடிக்கும் பொது லெட் (ஈயம்) இல்லாத பெயிண்ட்டா எனப் பார்த்து வாங்க வேண்டும். பெயின்ட் சுவரில் இருக்கும் போது பிரச்சினையில்லை. அந்தப் பெயிண்ட்டை சுரண்டி புதிதாக அடிக்கும் பொது தான் ஈயம் வெளியே வரும். அதனால் பெயின்ட் அடிக்கும் பொது இரண்டு நாட்களுக்கு வீட்டிற்கு வராதீர்கள். தரையை சுத்தப்படுத்தும் போது மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.
     வீட்டை வாசனையாக வைக்க உதவும் ஏர் ஃபிரஷ்னர்கள், டாய்லட்டை கழுவும் கெமிக்கல்களை நுகர்வதன் மூலம், கேன்சர் வரலாம். டாய்லட் கழுவும் போது எக்ஸாஸ்ட் பேனை போடுவதன் மூலம் கொஞ்சம் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். பாத்ரூம் கழுவிய பின் நன்றாக கதவை கொஞ்ச நேரத்திற்கு பூட்டி வைக்கவும்.
     பிளாஸ்டிக் பாட்டில்கள் இல்லாமல் உலகமே இல்லை. BPA எனப்படும் கெமிக்கல் இதிலிருந்து வெளியேறி, பாட்டிலில் இருக்கும் நீரில் கலப்பதால், அதைக் குடிக்கும் நமக்கு ஹார்மோன் பிரச்சினைகள் வருமாம். ஃபீடிங் பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்தக் கெமிக்கல் உடலில் அதிக அளவு உள்ளதாம். பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்டெயினர்களில் அடியில் முக்கோணமிடப்பட்டு நம்பர் போட்டிருக்கும். 1 என எழுதியிருந்தால் ஒரு முறை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிய வேண்டும், 2,4,5-கெடுதல் கிடையாது, 3,7-வாங்கவே கூடாது என பலர் கூறினாலும், கண்ணாடி அளவிற்கு எதுவும் பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. BPA free, BPS free என எதுவாயிருந்தாலும் ஆரோக்கியத்தை எந்த அளவுக்கு பாதிக்கும் என யாருக்கும் தெரியாது. கடையில் கம்ப்யூட்டர் பில் போடும் பேப்பரில் கூட இந்த கெமிக்கல் இருக்கிறதாம். பில்லை இனிமேல் பையில் போட சொல்லுங்கள்.
     கம்ப்யூட்டர், டிவி, சர்க்யூட் போர்டுகளில் தீப்பிடிக்காமல் இருக்க ஒரு கோட்டிங் இருக்கும். அதிலிருந்து ஆவியாகி வெளிவரும் கெமிக்கல், எலிகளில் ஆண்மைக்குறைவு, ஞாபகமறதி, தைராய்டு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறதாம்.
     இதை விட சூப்பர் மேட்டர் இருக்கிறது. ஷாம்பு, சென்ட், டியோஸ்ப்ரே, கண்டிஷனர், ஹேர் ஸ்ப்ரேக்களில், தாலேட் எனும் கெமிக்கல் இருக்கலாம். இவை மிருகங்களில், வளர்ச்சி மற்றும் செக்ஸ் கோளாறுகளை ஏற்படுத்துவதை நிருபித்திருக்கிறார்கள். இவை வாங்கும் போது 'Pthalate free' என இருக்கிறதா எனப் பார்த்து வாங்க வேண்டுமாம். குழந்தைகள் வாயில் வைத்து சூப்பும் நிப்பிள், கிலுகிலுப்பை, வாயில் வைத்து கடிக்கும் டீத்தர்கள் போன்றவற்றில் இந்த வாசகம் இருக்கிறதா எனப் பார்க்க வேண்டியது அதி முக்கியம். ஷேவிங் கிரீம்கள் இன்னும் மோசமாம். அதற்கு பதிலாக தேங்காய் எண்ணை தேய்த்து ஷேவ் செய்ய சொல்கிறார்கள் (ஹிஹி). ஆப்டர் ஷேவுக்கு பதிலாக ஜில்லென இருக்கும் தண்ணீரே போதுமாம். லிப்ஸ்டிக்குகள், மேக்கப் பொருட்கள் வாங்கவே கூடாது. அவை கெடுதல்  மட்டுமில்லாமல் பல கணவர்களின் பிரஷர் கூடுவதற்கும் காரணமாகிறது ;-)
     சிக்கன், மட்டன், மீனும் இதிலிருந்து தப்பவில்லை. நாம் எவ்வளவு தான் ஜாக்கிரதையாக சூப்பர் மார்கெட்டில் லேபில் பார்த்து பொருள் வாங்கினாலும், எங்கும் பிளாஸ்டிக் மயமாக இருக்கும் உலகில் நீர், நிலம் மாசுபட்டு இருக்கிறது. அதில் விளையும் செடிகளை உண்ணும் பிராணிகளின் உடலில் டயாக்சின் எனும் கெமிக்கல் அதிகம் இருக்கிறதாம். அவற்றை உண்ணும் நமக்கு ஹார்மோன் கோளாறு மற்றும் கேன்சர் வரலாம். நான்-ஸ்டிக் டவா, தோசைக் கல் வாங்கவே கூடாத பொருட்களாகும்.
     இதற்கு தீர்வாக கடையில் இருக்கும் 'நேட்சுரல்' பொருட்கள் வாங்கலாமா? நோ. இப்போது நாம் யூஸ் செய்யும் பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக ஆராய்ச்சி செய்து எவை கெடுதல், எவை நல்லது என்று ஆராய ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நேட்சுரல் புரோடக்டுகளைப் பற்றி இன்னும் ஆராய தொடங்கவே இல்லை. அவற்றையும் பிராசஸ் செய்து, பாக்கெட்டில் அடைத்து தானே விற்கிறார்கள்? இதில் பல பொருட்கள், எந்த ரெகுலேஷனும் பின்பற்றாத குடிசைத்தொழில்களிலிருந்து வருவதாகும். அதனால் நாம் 25 வருடங்களுக்கு முன் இருந்த லைப் ஸ்டைலுக்கு போவது சிறந்தது. 50, 100, அல்லது கற்காலத்திற்கு என்றால் இன்னும் பெட்டர் ;-) 
     நாம் தினமும் என்ன செய்கிறோம், யோசியுங்கள். காலையில் எழுந்து, கெமிக்கலால் சுத்தம் செய்யப்பட்ட பாத்ரூமில் பல்தேய்த்து, சோப்பு ஷாம்பு போட்டு குளித்து, ஹாலில் பிளைவுட் நாற்காலியில் உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டே நான்ஸ்டிக் தோசையும், மீன் குருமாவும் சாப்பிட்டு, பிளாஸ்டிக் கேனில் வரும் நீரை பாட்டிலில் பிரிட்ஜில் வைத்து ஜில்லுப்பாக்கி அதைக் குடித்து, காரில் பென்சீன் உமிழ ஆபிசுக்கு போய், லேப்டாப் முன்னால் உட்கார்ந்து வேலை பார்க்கிறோம். பாத்ரூம் போய் விட்டு கிளைக்கால் ஈதர் (ரத்த சோகை வரும்) உள்ள ஹேன்ட் வாஷில் கை அலம்பி சாப்பிட உட்கார்கிறோம். பூச்சி மருந்து போட்டு வளர வைத்த காய்கறி மற்றும் அரிசியை சாப்பிடுகிறோம். முப்பது வருடங்களுக்குப் பின்னால் கேன்சர் வருகிறது. "டாக்டர், எங்க பரம்பரையிலேயே கேன்சர் கிடையாது. சிகரெட் கூட பிடிக்கிறதில்லை. எனக்கு ஏன் இப்படி?" எனப்  புலம்பியவாறு போய்ச் சேருகிறோம். லாபம் மட்டுமே குறிக்கோள் என பொருளை தயாரிக்கிறான் ஒருவன். வசதி, பகட்டு தான் முக்கியம் என அதை வாங்கி அழிகிறோம் நாம். மனசாட்சியை விற்றவர்கள் கம்பெனிகள் மட்டும் இல்லை, கண்டும் காணாமல் இருக்கும் அரசும் தான். ஒரு வேளை பிரான்ஸ் போன்ற நாடுகளின் கிராமங்களுக்கு நாம் குடிபெயர்ந்தால் இயற்கைக்கு அருகில் வாழலாமோ என்னவோ?

     நாம் போனாலும் பரவாயில்லை. வீட்டில் இருக்கும் கர்ப்பிணிகளின் நிலைமையை யோசியுங்கள். இந்த நச்சு உலகில் நஞ்சான உணவை உண்ணும் தாயின் வயிற்றில் வளரும் குழந்தை என்ன பாவம் செய்தது? எது கெடுதல் என நாமே தெரியாமல் தவிக்கிறோம். அம்மாவின் ரத்தத்தில் இருந்து எது வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு செல்கிறது என யாருக்கும் தெரியாது. அதனால் என்ன பாதிப்பு வரும் என்பதும் தெரியாது. அட்லீஸ்ட் இன்னும் 20 வருடங்களுக்காவது (எவை நல்லது, கெடுதல் எனத் தெரியும் வரை) கர்ப்பிணிப் பெண்களுக்கு விஷமில்லாத சுற்றுப்புறத்தையும், உணவையும், நீரையும் தர வேண்டியது பிறக்கப் போகும் குழந்தையை பிறக்கும் முன்வரையாவது மாசில்லாமல் காக்கும்.  

Episode-17-தட்டுங்கள் திறக்கப்படும், ஓங்கி உதையுங்கள் சட்டங்கள் உடைக்கப்படும்

தலைப்பு: தட்டுங்கள் திறக்கப்படும், ஓங்கி உதையுங்கள் சட்டங்கள் உடைக்கப்படும்
ஒரு மிகப்பெரிய பழமை வாய்ந்த பல்கலைக்கழகத்தில், காலேஜில் இருந்து ஹாஸ்டலுக்கு செல்லும் பாதை இருந்தது. மாணவர்கள் இந்த சுற்றுப் பாதையைத் தவிர்த்து, புல்வெளி வழியாக குறுக்கே நடந்து சென்றனர். எவ்வளவோ ரூல்ஸ் போட்டும், அபராதம் போட்டும், தண்டனை கொடுத்தும், ஸ்டுடண்ட்ஸ் புல்வெளி மேல் நடந்து செல்வதை தடுக்க முடியவில்லை. நீங்கள் அந்த காலேஜின் டீனாக இருந்தால் என்ன செய்வீர்கள்? இதற்கான பதிலை கடைசியில் தருகிறேன்.
மனித மனம் எப்படிப்பட்டது? விதி என்று ஒன்று போட்டால், அதை மீற நினைப்பது தான் நார்மலான மனித மனத்தின் செயல். உங்களுக்கு ஒரு சின்ன டெஸ்ட். அடுத்த ஒரு நிமிடத்திற்கு, கண்களை மூடி எதை வேண்டுமானாலும் யோசியுங்கள். ஆனால் ஆப்பிள் பழத்தை மட்டும் நினைத்துப் பார்க்கவே கூடாது. ரெடி. ஸ்டார்ட்.....
கண்களை திறந்தாச்சா? நான் பெட் கட்டுகிறேன். நீங்கள் எதைப்பற்றி கற்பனை செய்தாலும், அதில் ஆப்பிள் வந்து விடுகிறது இல்லையா? ஒரு செயலை செய்யக்கூடாது என்று சொல்லும் போது தான், அதை செய்ய வேண்டும் தூண்டுதல் அதிகமாகிறது. அதனால் தான் கலாச்சாரம், சென்சார்ஷிப், போன்ற செக்ஸ் அடக்குமுறைகள் கொண்ட ஆசிய நாடுகளில் கற்பழிப்பாளர்கள், வக்கிரப் புத்திக்காரர்கள், பெண்னடிமைவாதிகள் அதிகமான அளவிலும், இந்த அடக்குமுறைகள் இல்லா மேற்கில் இவர்கள் கம்மியாகவும் இருக்கிறார்கள்.
மிக சென்சிடிவான அபார்ஷனைப் பற்றித் தான் இந்த எபிசோடில் பேசப் போகிறோம். 'எதுக்கு தேவையில்லாம தப்பு பண்ணனும், அதுக்கு தண்டனை அனுபவிங்க' என்ற வாதம் நல்லதா? ஒரு சிறிய தவறிற்காக இவ்வளவு பெரிய தண்டனையா? வேண்டாம் என்ற குழந்தையை, கட்டாயப்படுத்தி பெற்றெடுக்க சொன்னால், பிறந்த பின் அந்தக் குழந்தை மகிழ்ச்சியான சூழ்நிலையில் தான் வளருமா? யோசிக்க வேண்டிய விஷயம். விதை முளைத்து மரமானால் தானே அது ஒரு உயிர் என்கிறோம். உறங்கும் உயிர் உயிரில்லை. வெறும் விதை மட்டுமே. அதனால் தான் அரிசியை சாப்பாடாக பார்க்கிறோம். பிறக்காத உயிருக்காக, வாழும் உயிரை துயரப்படுத்தி அதலபாதாளத்தில் தள்ளலாமா?  
உலகில் வருடத்திற்கு இரண்டரைக் கோடி சட்டப்பூர்வமான அபார்ஷன்களும், இரண்டு கோடி இல்லீகல் அபார்ஷன்களும் நடக்கின்றன. இந்த தகவல்கள் என்ன சொல்கின்றன?
கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள். உங்கள் குடும்பத்திலேயோ அல்லது உங்கள் சொந்தக்காரர்கள் குடும்பத்திலேயோ ஒருவருக்காவது கருக்கலைப்பு செய்திருப்பார்கள். இந்தக்குழந்தை இப்போது வேண்டாம் என. அது சட்டப் பூர்வமானது இல்லை. நம்மிஷ்டப்படி கருக்கலைப்பு செய்து கொள்ள பல நாடுகளில் அனுமதி இல்லை. இந்தக் குழந்தை பிறந்தால், தாய்க்கு பெரிய சுகவீனம் வரும் என்றாலோ, ஊனமுற்ற குழந்தை என்றாலோ, ரேப்பினால் கர்ப்பமானலோ அல்லது கர்ப்பமான மைனர் பெண்களோ தான் சட்டப்படி அபார்ஷன் செய்யலாம். இதைப் போன்ற முற்போக்குத்தனமான சட்டங்கள் இருப்பதால் தான் நிறைய பேருக்கு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டு, மருத்துவச்சிகள் மற்றும் சுயமருந்துகள் எடுத்து சரியான கருக்கலைப்பு செய்யாமல் உலகில் வருடத்திற்கு 68,000 பெண்கள் இறக்கிறார்கள். நீங்கள் இந்த குங்குமம் டாக்டர் புத்தகத்தை படிக்க எடுத்துக்கொள்ளும் இரண்டு மணி நேரத்தில், இந்தியாவின் ஒரு பெண் இதனால் இறந்திருப்பார். இறக்காத லட்சக்கணக்கான பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தை நிரந்தரமாக இழக்கிறார்கள். இந்தியாவில் நூறில் 28 பெண்கள் இவ்வகையான முறையில் கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள் என ஒரு ஆராய்ச்சி சொல்கிறது.
இந்த சட்டங்கள் யார் போட்டது? 150 வருடங்களுக்கு முன்னால் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், கருக்கலைப்பு கூடாது என சட்டம் போட்டது. சுதந்திரம் கிடைத்தும், இந்த சட்டத்தில் இருந்து விடுதலை கிடைக்காமல், 1971 வரை பல பெண்கள் வேறு வழியில்லாமல் பாதுகாப்பிலாத அபார்ஷன் செய்து லட்சக்கணக்கில் இறந்தனர். அப்போது தான் இந்திய அரசு மேலே சொன்ன ஒரு சுமாரான சட்டத்தைக் கொண்டு வந்தது. பாதி சாவுகள் தடுக்கப்பட்டன. மீதி சாவுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.  
பல நாடுகளில் 12 வாரங்களுக்கு குறைந்த கர்ப்பத்தைக் கலைக்க யார் அனுமதியும் தேவையில்லை. நேராக மருத்துவமனைக்கு சென்று கலைத்துக் கொள்ளலாம். நம் நாட்டிலும் இதே போன்ற ஒரு சட்டத் திருத்தம் வந்தால், லட்சக்கணக்கான பெண்கள் பயனடைவர். மிகக் குறைந்த செலவில் அபார்ஷன் செய்துக் கொள்ளலாம். சட்டத்திற்கு புறம்பான முறையில் கருக்கலைப்பு செய்யும் மருத்துவமனைகளிடளிருந்தும் அவர்கள் கேட்கும் இமாலய கட்டணத்தையும் தவிர்க்கலாம். முக்கியமாக பயமில்லாமல் இருக்கலாம்.
பெரும்பாலான மக்களின் விருப்பங்களே இன்று சட்டமாகின்றன. கஞ்சாவை சட்டப் பூர்வமாக்கியதன் மூலம் அதனால் நடைபெறும் கொலைகள் குறைந்தது, அமெரிக்காவில். சீனாவில் மக்கள் எதிர்த்ததால் ஒரு குழந்தை மட்டுமே பெற வேண்டும் என்ற சட்டம் குப்பையில் போடப்பட்டது. நம்மூரில் இப்போது லோக்பால் மசோதாவையும், மதுவிலக்கு மசோதாவையும் மக்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒரு லட்சம் பேர் கையெழுத்து போட்டால் போதும், அதை சட்டமாக்க வேண்டும் என விதி இருக்கிறது. தாயின் விருப்பத்திற்கேற்ப அபார்ஷன், நோய் முற்றிய நிலையில் இருப்பவர்களுக்கான கருணைக் கொலைகள் (Euthanasia), உறுப்பு விற்பனை, வாடகைத்தாய், போன்ற சென்சிடிவான ஆனால் மிகவும் தேவைப்படும், பல சட்டங்களை தகுந்த விவாதங்களுக்குப் பின் கொண்டு வர அல்லது மாற்ற வேண்டியது உடனடி தேவையாகும். ஜனநாயக நாட்டில் இது போன்ற சட்டங்கள் கொண்டு வரா விட்டால், அபார்ஷன் செய்த தாயை கைது செய்வது, கிட்னி விற்ற ஏழை தாத்தாவை கைது செய்வது போன்றவற்றைச் செய்யும் போலீஸ் ஸ்டேட் ஆகி விடும் இந்தியா. இப்போது உள்ள சட்டங்கள், ஒருவரைப் பழிவாங்க மிகவும் பயன்படும். இதைப் போன்று பழைய சட்டங்கள் குப்பையில் போடப்பட்டு, புதிய சட்டங்கள் வருவதால் தான் 'மனு தர்மம்' போன்ற கொடிய பழைய சட்டங்கள் இல்லாமல் போயின.
இதன் பிற்காலம் எப்படி இருக்கும்? கருவை சுமக்கும் தாயின் விருப்பம் என்னவோ, அது போல் சட்டங்கள் மாறும். தாய்க்கு குழந்தை வேண்டாம் என்றால், எந்த மருத்துவமனைக்கும் போய் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். அதற்கு மருத்துவ காப்பீடும் கிடைக்கும். இதற்கான மருந்துகளை இன்டெர்நெட்டில் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். வீட்டிலேயே எளிதாகவும் பாதுக்காப்பான முறையிலும் அபார்ட் செய்து கொள்ளலாம்.       

ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கான விடை: நீங்கள் நினைத்தது சரிதான். அந்த புல்வெளிக்கு நடுவில் ஒரு கான்க்ரீட் பாதையை அமைத்தனர். இப்போது யாரும் புல்லின் மேல் நடப்பதில்லை. 

Episode 16-இங்கு கை, கால், கிட்னிகள் குறைந்த விலையில் பொருத்தலாம். 5-50% வரை தள்ளுபடி.

இங்கு கை, கால், கிட்னிகள் குறைந்த விலையில் பொருத்தலாம். 5-50% வரை தள்ளுபடி.
     முதன் முதலில் மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், எகிப்தியர்கள் செயற்கைக் கால் கட்டை விரலை கண்டுப்பிடித்தனர். ஒரு கொப்பி மாதிரி போட்டு அணிவர். பதினாறாம் நூற்றாண்டில் போரில் கையை இழந்த வீரர்களுக்கு உலோகத்தால் ஆனான செயற்கைக் கைகளை வடிவமைத்தார்கள். அதை வைத்துக்கொண்டு குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்கலாம், போரில் கேடயத்தைப் பிடிக்கலாம். அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் கை கால்களை நிறைய பேர் இழந்தனர். அது செயற்கைக் கை கால்களை உருவாக்குவதில் உத்வேகத்தை ஏற்படுத்தியது. கைகளை உருவாக்கி கொக்கி, கரண்டி போன்றவற்றை விரல்களுக்கு பதிலாக இணைத்து ஒரு பொருளை எடுப்பது, இழுப்பது போன்ற சிறிய வேலைகளுக்கு மட்டுமே அவை பயன்படும். வெளியில் பார்ப்பதற்கு கை இருப்பவர் போல காண்பிக்க மட்டுமே பெரும்பாலும் அது உதவியது. கால்களுக்கு மாட்டப்படும் மரம் மற்றும் உலோகத்தாலான பிராஸ்தடிக்குகள் கொஞ்சம் நடப்பதற்கு உதவியாய் இருந்தாலும், தோலில் உராய்வதால் ஏற்படும் புண்கள், தசை வலி, அவற்றை பயன்படுத்துவதை பெரிய சிரமமாக்கின. இன்னமும் இதைப் போன்ற செயற்கை கைகள் கால்களுடன் வாழும் பலர் இருக்கிறார்கள்.
     'ஐ ரோபோ' படத்தில் (எந்திரன் படத்தின் ஹாலிவுட் தாத்தா), ஹீரோ 'வில் ஸ்மித்'திற்கு ரோபோ என்றாலே பிடிக்காது. ஒரு நாள் இந்த ரோபோக்கள் மனிதர்களின் கண்ட்ரோலை புறக்கனித்து, நம்மை அடக்கி ஆள ஆரம்பித்தால் என்ன ஆகும் என்பதே அவர் பயம். இப்படி ரோப்போக்களை வெறுப்பவர், சிறு வயதில் ஒரு கையை இழந்திருப்பார். அவரின் ஒரு கையே, ரோபோ வடிவமைத்த கம்பெனியின் செயற்கைக் கையாகும். பார்த்தால் நிஜமான கை போலவே இருக்கும். ஒரு கையின் எல்லா வேலைகளும் அதுவும் செய்யும்.
     இதைப் போன்ற பயானிக் செயற்கைக் கைகள், கால்கள் பிற்காலத்தில் வெகு சகஜமாகி விடும். ஜோசெப் மெடல்கா என்பவர் ஒரு பைக் விபத்தில் வலது காலை இழந்து விட்டார். மருத்துவமனை, அவருக்கு வழக்கமான செயற்கைக்காலை அளவெடுத்து செய்து கொடுத்தது. அதை வைத்துக் கொண்டு நடக்கலாம். வேறு ஒன்றும் செய்ய முடியாது. வேறு ஒரு கம்பெனியில் அவர் இதைப் பற்றி விசாரிக்க, அவர்கள், ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு கால் என்பதாக 12 கால்களை டிசைன் செய்து கொடுத்தனர். அவற்றை மாட்டிக் கொண்டு இப்போது அவர் ஓடலாம், சைக்கிள் ஓட்டலாம், பனிச்சறுக்கு விளையாடலாம் மற்றும் ஸ்கேட்டிங் செய்யலாம். ஜாயிட்டுகள், ஷாக் அப்சார்பர்கள் என நவீன டெக்னாலஜிக்கள் அதில் இருக்கின்றன. எந்த அளவிற்கு இந்த தொழில்நுட்பம் முன்னேறியிருக்கிறது என்றால், ஈராக், ஆப்கனில் உறுப்புகளை இழந்த அமெரிக்க ராணுவ வீரர்களில் 53 பேர், செயற்கை உறுப்புகளை பொருத்திக் கொண்டு, திரும்பவும் போர் முனைக்கு சென்றிருக்கிறார்கள்.  
     பெர்டோல்ட் மேயர் என்பவருக்கு பிறக்கும் போதே ஒரு கை கிடையாது. கொஞ்ச வருடங்களுக்கு ஒரு கொக்கி மட்டுமே உள்ள ஒரு செயற்கைக் கையை மாட்டிக்கொண்டிருந்த அவர், ஸ்காட்லாந்தில் ஒரு நிருவனத்தில் புது விதமான கையை வடிவமைக்கக் கேட்டிருந்தார். அவர்கள் 'ஐ போன்' வழியாக கண்ட்ரோல் செய்யும் ஒரு பயானிக் கையை வடிவமைத்து பொருத்தினர். பல மோட்டர்கள், சென்சார்கள், ஜாயிண்டுகளுடன், நிஜ கை செய்ய முடியாத வேலையைக் கூட இந்தக் கையால் இவரால் செய்ய முடிகிறது. பயன்பாட்டிற்கு மட்டும் இல்லை இவை. சிலருக்கு மற்றவர்கள் பார்வையில் வித்தியாசமாக தென்படக்கூடாது, தான் ஊனம் என்பதற்காக மற்றவர்கள் இரக்கப்பார்வை பார்க்கக்கூடாது என்பது போன்ற எண்ணங்களால், இப்போது வரும் பயானிக் பாகங்கள், சிலிக்கான் கோட்டிங்குடன் பார்ப்பதற்கு உண்மையான கை கால் போன்றே இருக்கின்றன. சட்டென பார்த்தால் நார்மலானவர் போன்றே தெரிவார்.
     எப்படித்தான் சூப்பராக டிசைன் செய்தாலும், செயற்கை உறுப்புகள், நிஜமானவை ஆகாது. ஏனென்றால் மூளை நரம்புகளுடன் அவை இணைக்கப்படாமை. அப்படி இணைக்கப்பட்டால் தான் அவை நிஜமான கை கால்களின் செயல்திறனோடு இருக்கும். கேத்தி ஹட்சின்சன் என்பவர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, கைகளின் செயலை இழந்தார். மூளையில் அவருக்கு ஒரு சிப் வைத்து, அவருக்கு மோட்டார்கள் பேட்டரிகளுடன் செயற்கைக் கை பொருத்தினார்கள். அதாவது அவர் மேஜையில் இருக்கும் சோடா பாட்டிலை திறந்து குடிப்பது போல் கற்பனை செய்தால், அவர் உலோக கையும் அதே போல் நிஜத்தில் செய்தது. இதை இன்னும் விரிவாக்கினால், இந்த நூற்றாண்டின் முடிவுக்குள், ஊனமே இருக்காது என பல நிபுணர்கள் கணிக்கின்றனர்.
     இப்போது எந்த லெவலுக்கு இந்தத் துறை முன்னேறியிருக்கிறது என்றால், 2012 ஒலிம்பிக்கின் போது இரு கால்களும் இல்லாத ஒருவர் செயற்கைக் கால்களை மாட்டிக்கொண்டு ஓடினார். அந்த செயற்கைக் காலினால் தான் அவர் அவ்வளவு வேகமாக ஓடினார் எனக் குற்றச்சாட்டு கிளம்பியது. கை, கால்கள் இழந்தவருக்குத் தான் பிராஸ்தடிக்குகள் என்பது மாறி, ஒருவரின் செயல் திறனை அதிகரிக்கவும் இவை பயன்பாட்டிற்கு வந்து விடும். எப்படி ஒரு ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் காற்றைக் கிழிக்கும் பனியன், பளபள டவுசர், வேகமாக ஓட ஷூக்கள் போடுகிறாரோ அதே போல், செயற்கைக் கால்களும் தேவை என்ற நிலை வந்துவிடும்.
     எந்த அளவிற்கு நாம் செயற்கை உறுப்புகளை உடலில் பொருத்தலாம்? பாதிக்கு பாதி உடலில் உள்ள உறுப்புகளை செயற்கை ஆக்கலாம் என்கிறார்கள். மோட்டாரிலான இதயம் வந்து விட்டது. இதயம் முழுவதுமாக செயலிழந்த நிலையில் இருப்பவருக்கு, இந்த இதயத்தைப் பொருத்தி வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள். மாற்று இதயம் கிடைக்கும் வரை. இதே மோட்டார் இதயத்தை நீண்ட காலங்களுக்கு உபயோகப் படுத்த ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இன்னும் 7 வருடத்தில் கிட்னி போல் வேலை செய்யும் மிஷின் வந்து விடும் என்கிறார்கள். கிரிக்கெட் பந்து அளவுள்ள இந்த செயற்கை கிட்னி பல லட்சம் கிட்னி பெயிலியர் பேஷண்டுகளை உயிரோடு இருக்க உதவிடும். இரவில் பார்க்க வகை செய்யும் பயானிக் லென்ஸ்கள் வருமாம். 2025ல், 'எக்ஸோ ஸ்கெலிடன்'கள், அதாவது வெளிப்புறம் மாட்டிக்கொள்ளக் கூடிய எலும்புக்கூடு வந்து விடுமாம். முழுவதும் உலோகத்திலான இந்த ஸ்கெலிடனை நாம் மாட்டிக்கொள்வதின் மூலம் நம் வேகத்தையும் பலத்தையும் கூட்டிக்கொள்ளலாம். அதாவது ஜி.ஐ.ஜோ அல்லது அயர்ன்மேன் மாதிரி. இன்னும் இருபது ஆண்டுகளில் செயற்கை வெள்ளை மற்றும் சிவப்பணுக்கள் வரலாம். இதன் மூலம் நம் எதிர்ப்பு சக்தியும் உடலின் சக்தியையும் அதிகரிக்கலாம்.  
     ஒரு வித்தியாசமான கனவைப் பார்ப்போம். உடனே சமந்தா, ஹன்சிகாவுடன் சல்சா நடனம் என யோசிக்கக் கூடாது. இது ஒரு மருத்துவக் கனவு....
வருடம் 2060. இடம்: உக்கடம் 'பறக்கும் பஸ்' ஸ்டாண்டு, கோவை. 
சோமு: மாப்ள......எப்படிடா இருக்க?
தாமு: (திரும்புகிறார். கிளிங் கிளிங் என உலோக சவுண்ட் வருகிறது). ஹேய் மச்சி எப்படி இருக்கடா? (கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள்)
சோமு: டேய் என்னடா கை கால்லாம் கல்லு மாதிரி இருக்கு. எதுனா புது எக்சர்சைஸ் பண்ணுறியா?
தாமு: நீ வேறடா. பெரிய இன்பெக்ஷன் ஆகி, ரெண்டு கையும் காலும் வாதமாயிடிச்சி. மன்னார் அன் கோ மறுவாழ்வு கம்பெனியில கோடிக்கணக்குல செலவு பண்ணி, செயற்கை கை கால் பொருத்திருக்கேன்.
சோமு: மாப்ள. இதெல்லாம் போட்டுக்கிட்டு நடக்க கொள்ள முடியுதா? லோடுமேன் வேலைக்கு போயிட்ருந்தியே? வேலை போச்சா?
தாமு: மச்சி நீ வேற. எனக்கு பொருத்தி இருக்குறது லேட்டஸ்ட் ஜிம்பலக்கா கை கால் உறுப்புகள்டா. இப்ப பாரு. (பஸ்ஸை தூக்கி காண்பிக்கிறார்). இப்பலாம் லாரிலேந்து கண்டெயினர் இறக்குற வேலை மச்சி.
சோமு: (பயந்து) டேய் என்னடா, வித்தை காட்டுற. இவ்வளவு பலம் எப்படிடா?
தாமு: அதுக்கு தான் ஜிலாபி கம்பெனி இதயமும், சங்போல்டா எலும்புகளும் போருத்திருக்கேன்.
சோமு: அடப்பாவி. சரி எங்க போயிட்ருக்க?
தாமு: கமுக்கி கம்பெனி ஒரு மூக்கு கண்டுபுடிச்சிருக்காங்களாம். அமெரிக்க அதிபர் என்ன சாப்பிடறார்னு இங்கேந்தே மோந்து பாக்கலாமாம். அதை வாங்க போயிட்ருக்கேன்.
தாமு: அய்யயோ. சரி எத்தன குழந்தைங்க உனக்கு?
சோமு: அதுக்கு தான் மஜோபி கம்பெனில....

தாமு: கருமம் கருமம். ஆளை விட்றா சாமி.